பதிவு செய்த நாள்
25 ஜூன்2018
06:34
வாராக்கடன் பிரச்னையை தொடர்ந்து, சமீபத்தில், பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், கடும் அதிருப்தி அடைந்துள்ளது, இந்திய வங்கியாளர்கள் சங்கம். இப்படிப்பட்ட விசாரணைகளும், பழி சுமத்தல்களும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
‘பேங்க் ஆப் மஹாராஷ்டிரா’வின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி உட்பட ஐந்து உயர் அதிகாரிகளை, புனே காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு, சமீபத்தில், கைது செய்தது. ஏற்கனவே, ஐ.டி.பி.ஐ., வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான, யோகேஷ் அகர்வால் கைது செய்யப்பட்டார். கனரா வங்கியின் தலைவர், ஆர்.கே.துபே, பஞ்சாப் நேஷனல் வங்கியின், சி.இ.ஓ., உஷா அனந்தசுப்பிரமணியன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான, அர்ச்சனா பார்கவா மீது, சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது.
இவையெல்லாம், வங்கித் துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுத் துறை வங்கிகளில் ஏற்பட்ட மோசடிகளுக்குப் பின், பல்வேறு விதமான கருத்துகள் உருவாகின. அதில் முக்கியமானது, வங்கி உயர் அதிகாரிகளின் ஒப்புதலோ அல்லது அவர்களது கவனக்குறைவோ இல்லாமல், இத்தகைய மோசடிகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான். அவர்களே பல இடங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற, ஹேஷ்யமும் கூறப்பட்டது.
கண்காணிப்பு இல்லை :
மக்கள் பணத்தை முறையாக, பொறுப்புணர்வோடு கையாளவில்லை என்பதோடு, உயர் அதிகாரிகள் எடுத்த பல்வேறு கடன் வழங்கும் முடிவுகளில் நேர்த்தி இல்லை; போதிய முன்விசாரணைகள் இல்லை. தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லை; திரும்ப வசூல் செய்வதில் முனைப்பு இல்லை என்பன போன்ற, குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகவே இவ்வழக்குகளும், கைதுகளும் நடைபெற்று வருகின்றன. இந்திய வங்கியாளர்கள் சங்கம், இங்கே தான் அதிருப்தி அடைந்துள்ளது. முறையாக எடுக்கப்பட்ட பல முடிவுகள் மீது, அபாண்டமாக பழி சுமத்தப்படுகிறது. போதிய விசாரணை இன்றி கைதுகள் நடைபெறுகின்றன, இது, ஏற்கத்தக்கதல்ல என்பதே, இவர்களது வாதம்.
வங்கியாளர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, தனியே ஓர் சுயேச்சையான விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும், அதில், சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு, தங்களது வருத்தத்தை நேரடியாக நிதி அமைச்சரிடமே தெரிவிக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளது. வாராக்கடன் மிகப்பெரும் பிரச்னை, என்பதில், சந்தேகம் இல்லை. அதற்கான பொறுப்பை, ஒருசில வங்கி உயர் அதிகாரிகள் மீது மட்டுமே சுமத்தி, பிரச்னையை மூடிவிடுவது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. கடன்கள் வாராத நிலையில் நின்று, நாம் இத்தகைய விஷயங்களை பேசிக்கொண்டு இருக்கிறோம். ஒருசில ஆண்டு களுக்கு முன் வரை, இவை வரக்கூடிய கடன்களாகவே இருந்தன.
அன்று, கடன் வாங்க சக்தியுள்ள நிறுவனங்களை, சாதனையாளர்களாக கொண்டாடி இருக்கிறோம். அன்றைய மனநிலை வேறு. வளர்ச்சி வேண்டும் என்ற முகாந்திரத்தில், பெரிய நிறுவனங்கள் கோரிய அத்தனை கடன்களை கொடுப்பதற்கு, நம் அரசாங்கமும், நிர்வாக அமைப்பும், வங்கிகளும் ஆயத்தமாக இருந்தன. பின், படிப்படியாக பல்வேறு காரணங்களால் பல நிறுவனங்கள் தளர்வுற்றுப் போயின. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் போயின. இதற்கு சர்வதேச வர்த்தகமும், சந்தைகளும் மிக முக்கியமான காரணங்கள்.
இந்நிலையில், கடன்களை வசூல் செய்யும் வேகம் எழுந்தது. பல நிறுவனங்களின் உண்மை நிலை வெளியே தெரிய வந்தது; மோசடிகளும் வெளியாகின. பிரச்னை பூதாகரமாக வெடித்தது. கேள்விகள் இங்கே இருந்து தான் துவங்குகின்றன. வங்கியாளர்கள், திட்டங்களை சரியான ஆய்வுக்கு உட்படுத்தாமல் முறையற்று, கடன் கொடுத்தனரா? நிதி அமைச்சகமும், ஆர்.பி.ஐ.,யும், வகுத்த நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறினரா? போதிய அடமானங்களைப் பெறாமல் கடன்களை வழங்கினரா?
உள்கட்டுமானம், மின்சாரம், தொலைதொடர்பு, உருக்கு, ஸ்டீல் ஆகிய துறைகளைச் சார்ந்த நிறுவனங்களே தளர்வுற்று, வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் போயின. அப்படியானால், அந்தத் துறைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை, கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?வாராக்கடன் நிறுவனங்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதில் ஏதேனும் தாமதம் நேர்ந்ததா? அவர்களை தப்ப வைக்கும் முயற்சிகள் நடைபெற்றனவா?
தனியார் வங்கிகளில் வாராக்கடன் குறைவாகவே இருக்கிறது என்கிறீர்களே, அவர்கள் எத்தனை பேருக்குக் கடன் கொடுத்தனர்? இந்தியாவில் வழங்கப்பட்ட மொத்த கடனில், 15 சதவீதம் தான் தனியார் வங்கிகள் கொடுத்தவை. பொதுத் துறை வங்கிகளோ, இந்தியாவில் உள்ள, 80 சதவீத நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தன. கடன் கொடுப்பதால், தொழில் வளம் பெருகும், வேலைவாய்ப்புகள் பெருகும், பொருளாதாரம் மேம்படும் என்ற, சிந்தனையின் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட கடன்கள் இவை. இதிலுள்ள சமூக நோக்கு, உங்கள் கண்ணில் படவில்லையா?
மேலும், வாராக்கடன் பற்றி மட்டுமே பேசுகிறீர்களே? இதே மூத்த வங்கியாளர்களால், கடந்த காலங்களில் பல்வேறு பொதுத் துறை வங்கிகள் அடைந்த வளர்ச்சி என்ன? ஈட்டிய லாபம் என்ன? அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா? இவையெல்லாம், மூத்த வங்கியாளர்கள் முன்வைக்கும் நியாயமான கேள்விகள். தங்களை மட்டும், ஏன் பலிகடா ஆக்க வேண்டும் என்பதே அவர்களது ஆதங்கம்.
அடுத்த கட்ட வளர்ச்சி :
ஒட்டுமொத்தமாக அத்தனை வங்கியாளர்கள் மீதும், கறுப்புச் சாயம் பூசுவதில் அர்த்தமில்லை. பொதுத் துறை வங்கிகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. அவர்கள், அத்தனை விபரங்களையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு சரிபார்த்த பின்னரே, கடன் வழங்குவர் என்பது நம் அனுபவம். அதனால், அவர்களில் தவறு செய்பவர்கள் மீது மட்டுமே உரிய விசாரணைக்குப் பின், சட்டம் பாய வேண்டுமே அன்றி, அனைவரையும் அச்சப் பட வைக்கக் கூடாது. ஏனெனில், இவர்கள் தான் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இந்தியாவை அழைத்துச்செல்கிறவர்கள்.
வங்கியாளர்கள் அச்சம் அடைந்து, தம் பணியில் சோர்ந்துபோனால், புதிய கடன்கள் கிடைப்பது அரிதாகிவிடும், வளர்ச்சி சோம்பிவிடும், வேலைவாய்ப்புகள் சுணங்கிவிடும்.தவறுகளைச் சுட்டிக் காட்டி, தக்கநேரத்தில் திருத்தி, அரவணைத்துச் செல்வதே ஆட்சியாளர்களுக்கு அழகு; வழக்கு தொடுப்பதும், அலைக்கழிப்பதும் வங்கியாளர்களை அன்னியப்படுத்திவிடும் அபாயம் உண்டு.
-ஆர்.வெங்கடேஷ்,பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|