பதிவு செய்த நாள்
09 ஜூலை2018
00:36
சம்பா பருவத்தில் பயிரிடப்படும், 14 விதமான பயிர்களுக்கு, இந்த ஆண்டு, மத்திய அரசாங்கம் வழங்கவிருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு வரவேற்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதை எப்படிப் புரிந்துகொள்வது?
இந்தியாவில் விவசாய உற்பத்தி தொடர்ச்சியாக சரிந்துவருவது கண்கூடு. பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை காரணங்களால், விவசாயத்தைத் தொடரமுடியாத சூழல். பல மாநிலங்களில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்தில் கர்நாடக அரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கையில், 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது கவனத்துக்குரியது.இந்நிலையில், நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காசோளம், துவரம்பருப்பு, பாசிபருப்பு, உளுந்தம்பருப்பு, நிலக்கடலை, சூரியகாந்தி விதை, சோயாபீன்ஸ், பருத்தி நடுத்தரவகை, எள், கருஞ்சீரகம் ஆகிய 14 விளைபொருட்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைவிட சராசரியாக 14.5 சதவீதம் விலை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கம் இதை ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதுகிறது. எம்.எஸ். சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையை ஒட்டியே இத்தகைய ஆதார விலை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு வாதம். ஆனால், அந்த பரிந்துரை முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பது மற்றொரு வாதம்.
அரசியல் ரீதியான விமர்சனங்களை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தாலும், கடந்த ஆண்டைவிட, ஆதார விலை உயர்த்தியே வழங்கப்பட்டுள்ளது உண்மை. இதனால், விவசாயிகள் பயன் அடைவார்களா என்ற கேள்விதான் முக்கியமானது.அரசாங்கம் ஆதரவு விலை தரும் பயிர்களையே விவசாயிகள் சம்பா பருவத்தில் பயிரிடுவார்கள் என்பற்கு நிச்சயமில்லை. நிலம், மழையளவு, இதர ஆதாரங்களை ஒட்டியே அவர்களுடைய பயிர்கள் இருக்கப் போகின்றன.
மேலும், ஒவ்வொருவருடைய நிலத்திலும் வேறு வேறு பயிர்கள் ஏற்கெனவே பயிரிடப்பட்டு இருக்கலாம். நிலத்தை மறுவூட்டம் செய்யவேண்டியதன் அடிப்படையில், பயிர்களை மாற்றி விதைக்கவேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் ஆதரவு விலையை எதிர்பார்த்து, பயிர் செய்யும் போக்கு பெரும்பாலும் நடைபெற வாய்ப்பில்லை.
எவ்வளவு விளைபொருட்களை அரசாங்கத்தால் கொள்முதல் செய்யமுடியும் என்பது அடுத்த விடை தெரியாத கேள்வி. அத்தனை சிறுநகரங்களிலும் கொள்முதல் செய்வதற்கான வசதி இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், அரசாங்கம் அமைத்த குழு ஒன்று தெரிவிக்கும் செய்தி இங்கே கவனிக்கத்தக்கது.
அதாவது, இந்தியாவில் உள்ள மொத்த விவசாயிகளில் 6 சதவீதத்தினரே, குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர் என்கிறது அந்த அறிக்கை. அதாவது மீதமுள்ள 94 சதவீத விவசாயிகள் வெளிச்சந்தையில் தான் விற்பனை செய்கின்றனர். அங்கே குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுமா என்பது நிச்சயமில்லை.
பதினான்கு விளைபொருட்களுக்கு விலை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இவற்றில் முக்கியமானவை நெல்லும் சோளமும்தான். சோளத்தோடு ஒப்பிடும்போது, நெல்லுக்கு பெரிய அளவில் விலையுயர்வு கொடுக்கப்படவில்லை. அதிகம் பயிராகும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனில், அதனால் பாதிப்பு விவசாயிகளுக்குத்தான்.
இன்னொரு பிரச்னை, விளைபொருட்களைச் சேமித்துவைக்கும் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளின் போதாமை. பல கிடங்குகள் விவசாயிகளுக்கு அருகே இல்லை. அங்கே எடுத்துக்கொண்டுபோய் கொடுத்தாலும், உணவுக் கழகத்தால் சேமித்து வைக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
இதையெல்லாம் இந்திய அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய முயற்சி செய்யலாம். ஏற்கெனவே விவசாயிகள் மனம் நொந்து போயிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரத்துக்குத் தேவையானவற்றைச் செய்யாமல் போனால், அது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்திவிடலாம் என்ற அக்கறை மத்திய ஆட்சியாளர்களுக்கு நிச்சயம் இருக்கும்.
ஆனால், விவசாயம் செழிக்க, விவசாயிகள் முன்னேற்றம் அடைய, குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டும் போதுமா? போதாது.தொழிலகங்கள், சேவைகள் என்று நமது கொள்கைகளும் முடிவுகளும் முற்றிலும் வேறொரு திசை நோக்கி நகர்ந்த பிறகு, விவசாயத்துக்கும் விளைபொருட்களுக்கும் உரிய கெளரவம் கிடைக்கவில்லை.அதனால் தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், விவசாயத்தின் பங்களிப்பு தொடர்ச்சியாக சரிந்து வருகிறது.
இந்நிலையில், அரசாங்கம் இன்னும் விரிவான ஏற்பாடுகளோடு விவசாயத்தை அணுக வேண்டும். என்ன உற்பத்தி செய்யலாம் என்பதற்கான விரிவான ஆலோசனைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான இடுபொருட்களும் விதைகளும், விஞ்ஞான அணுகுமுறையும் சொல்லித்தரப்பட வேண்டும்.
விவசாயத்தில் ஏற்பட்டுள்ள அறிவியல் முன்னேற்றங்கள் உலகெங்கும் கோலோச்சுகின்றன. அதனை எல்லாம் இங்கே கொண்டுவர வேண்டும். பயிர் மேலாண்மை, நீர்ப்பாசனம் என்று ஒவ்வொரு கட்டத்திலும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவேண்டும். அவர்களுக்குத் தேவைப்படும் விவசாயக் கடன்களை வழங்குவதற்கான எளிமையான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
இடைத்தரகர்களிடமோ, கொள்ளை லாபம் அடிக்கும் பெருமுதலாளிகளிடமோ சிக்கிக்கொள்ளாமல், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கு மிகப்பெரும் செயல்திட்டம் தேவை. மழையில்லாமல் விவசாயம் பொய்த்துப் போகும்போது, விவசாயிகளுக்கு மாற்று வேலைகள் கிடைப்பதற்கான வழிமுறைகள் காணப்பட வேண்டும்.
இளைய தலைமுறையினர் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அவர்கள் நகரங்களை நோக்கி இடம்பெயராமல் காப்பதும் அரசாங்கத்தின் கடமை. மண்ணையும் மக்களையும் மலட்டுத்தனத்தோடு அணுகாமல், அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ஒன்றே குறிக்கோள் என்ற நினைப்போடு, ஒருங்கிணைந்த முறையில் திட்டங்கள் வகுக்கப்பட்டால் தான், விவசாயமும் விவசாயிகளும் காப்பாற்றப்படுவார்கள்.
குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது இந்தத் தொடர் சங்கிலியில் ஒரு கண்ணிதான். அதனை மட்டுமே சரிசெய்வதால், மொத்த சங்கிலியும் உறுதியடையும் என்று சொல்ல முடியாது. கண்ணியின் பல்வேறு இடங்களில் விதவிதமான பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன என்பது கண்கூடு.இந்த விலையேற்றத்தினால், விவசாய ஏற்றுமதிகள் பாதிக்கப்படும், இந்தியாவின் பணவீக்கம் அதிகமாகிவிடும் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள். ஆனால், அதைவிட முக்கியம் இங்கேயுள்ள விவசாயிகள்.
‘வரப்புர கோன் உயர்வான்’ என்பதற்கு இணங்க, அரசாங்கம் விவசாயிகள் பக்கம் கவனத்தைத் திருப்பியிருப்பதே வரவேற்கத்தக்க முடிவு. இது போதாதுதான். இன்னும் முன்னதாகவே தொடங்கியிருக்க வேண்டும் தான்.ஆனால், இதுவே ஆரம்பமாக இருந்து, அடுத்தடுத்த செயல்திட்டங்களினால் மேம்பாடு அடையுமேயானால், விவசாயிகளின் வயிறு அரசாங்கத்தை வாழ்த்துவது நிச்சயம்.
ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|