பதிவு செய்த நாள்
23 செப்2018
23:27
நிதி நிறுவனங்களின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்? அதிவேக வளர்ச்சி, நிதி நிறுவனங்களை எப்படி பாதிக்கும்? அதற்கு, நிறுவன அளவில் எப்படி எல்லாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்? ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்த நிறுவனங்கள், தொழில் ரீதியாக எடுக்கும் தவறான முடிவுகளை எப்படி சரி செய்கின்றனர்?
இப்படி பல முக்கிய கேள்விகளை நாம் தொடர்ந்து கேட்டு, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதை உணர்ந்து இருக்க வேண்டியது ஒவ்வொரு முதலீட்டாளரின் கடமை. இதற்கு காரணம், நம் பொருளாதார வளர்ச்சியில், நிதி நிறுவனங்களின் பங்கு தொடர்ந்து கூடி வருவது தான். அனைத்து தரப்பினருக்கும் நிதி ஆதாரம் சேரும் வண்ணம், நம் பொருளாதாரம், நிதி மயமாக்கப்படுவதின் முக்கிய விளைவாக இதைப் பார்க்க வேண்டும்.
சந்தை குறியீடான, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’யில், கிட்டத்தட்ட, 39 சதவீதம் வரை நிதி நிறுவனங்களின் ஆளுமை அதிகரித்துள்ளது. தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், என்.பி.எப்.சி., நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள், உட்கட்டமைப்பு நிதி நிறுவனங்கள் என, பல உள்ளன.
இவை மட்டுமல்ல; சிறு நிதி வங்கிகள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், போர்ட்போலியோ மேலாண்மை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் என, பல தரப்பு நிதி நிறுவனங்களையும் தொடர்ந்து ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டியது சந்தையின் கடமை. எந்த ஒரு அங்கத்தில் சிக்கல் ஏற்பட்டாலும், அது மிக விரைவாக மற்ற இடங்களில் தாக்குதல் ஏற்படுத்தக் கூடிய தன்மை உடையது.இத்தகைய தாக்குதல், ஒட்டுமொத்த உடலையும் அதாவது, சந்தையையும் பாதிக்கும். ஒவ்வொரு அங்கமும் பிற அங்கங்களுடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதே இதற்கு அடிப்படை காரணம்.
அனைத்து வகையான நிறுவனங்களும், பங்குச் சந்தையுடன் நெருங்கிய தொடர்புடையவை. அந்த தொடர்புகளை புரிந்து கொள்வோம்.நிதி நிறுவனங்களின் பங்குகள், சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.பங்குச் சந்தையில் அவை முக்கிய முதலீட்டாளர்களாக இருக்கின்றன. தன் தொழில் வளர்ச்சிக்கு தேவையான பணத்தை, சந்தையில் இருந்தே அவை ஈட்டுகின்றன.
கடன் மற்றும் முதலீடு மூலமாக, தொடர்ந்து சந்தையில் நிதி ஈட்டுவதும், கொடுப்பதுமாக இந்த நிறுவனங்கள் இயங்குகின்றன. முக்கியமாக, இவை ஒன்றுக்கொன்று நிதி கொடுப்பதும், பெறுவதுமாக தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இயங்குகின்றன. சந்தையில் சில்லரை முதலீட்டாளர்களுடன் இவற்றுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இவை வாடிக்கையாளர்களாகவும், நுகர்வோராகவும், முதலீட்டாளர்களாகவும், கடன் கொடுப்பவர்களாகவும் பல வகையில் பிணைந்து செயல்படுகின்றன. இதுவே, நவீன சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பு.
இந்த கட்டமைப்பு, சீராக தொடர்ந்து இயங்க, எந்த தரப்பில் சிக்கல் ஏற்பட்டாலும், அது பிற இடங்களை தாக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவே அரசின் நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி, ஐ.ஆர்.டி.ஏ., மற்றும் பி.எம்.ஓ.,வின் முக்கிய பொறுப்பு. உலக அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும், நம் பொருளாதாரத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கும் ஒருங்கிணந்த முறையில் கொள்கைகளையும், திட்டங்களையும் ஏற்படுத்தி, அரசு உடனடி தீர்வு காண வேண்டும். வரும் மாதங்களில் தோன்றக்கூடிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள, நிதித் துறை நிறுவனங்கள், தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வளர்ச்சி குறைந்தாலும், வலிமை காக்க முற்பட வேண்டும்.
–ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|