பதிவு செய்த நாள்
22 அக்2018
06:17
அண்மைக்காலமாக, பங்குச்சந்தை பெரிய அளவில், ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகி வருகிறது. பல்வேறு காரணங்களால் இந்த ஏற்ற இறக்கம் உண்டாகி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் குழுப்பமும், தடுமாற்றமும் நிலவி வருகிறது. சிறு முதலீட்டாளர்களும் குழப்பத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். இந்த சூழலில், ஏற்ற இறக்கமான சந்தையில் தவிர்க்க வேண்டிய செயல்கள் என, வல்லுனர்கள் பரிந்துரைப்பவை:-
சர்வதேச போக்கு :
சந்தையின் சரிவு அல்லது உயர்வுக்கு, பல நேரங்களில் சர்வதேச சந்தையின் போக்கு காரணமாகிறது. ஆனால், அதற்காக சர்வதேச சந்தையின் போக்கை அடிப்படையாக கருதி, சந்தையில் முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது. ஒவ்வொரு சந்தையும், தனக்கான பொருளாதார சூழலை கொண்டிருக்கும்.
செய்தி அடிப்படையில் :
நிறுவன பங்கு தொடர்பான குறிப்பிட்ட செய்தி தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் விலையில் ஏற்ற இறக்கத்தை உண்டாக்கலாம், என்பதை முதலீட்டாளர்கள் அறிந்திருக்க வேண்டும். பல நேரங்களில் அதிகாரபூர்வம் இல்லாத செய்திகளும், தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, செய்தி அடிப்படையில் மட்டும் பங்குகளை பின் தொடர்வதையும் தவிர்க்க வேண்டும்.
மந்தை போக்கு :
ஏற்ற இறக்கமான சந்தையில் பெரும்பாலும் நடக்க கூடியது, பீதியில் பங்குகளை விற்பது அல்லது மந்தை போக்கை கடைபிடிப்பது. இரண்டுமே தவறான அணுகுமுறையாகும். பயத்தால் மட்டும் எந்த பங்கையும் விற்க கூடாது. அதே போல, மற்றவர்கள் செயல்பாட்டை பார்த்து, எந்த முடிவையும் மேற்கொள்ளக்கூடாது.
கடன் வாங்கி முதலீடு :
சந்தையின் போக்கு, அதிக பலன் பெறுவதற்காக, கடன் வாங்கி முதலீடு செய்யும் ஆர்வத்தையும் துாண்டலாம். ஆனால், பொதுவாகவே கடன் வாங்கி முதலீடு செய்வது, தவிர்க்கப்பட வேண்டும். இந்த உத்தி அள்ளித்தரலாம் என்பது போல, பெரிய அளவில் இழப்பையும் ஏற்படுத்தலாம். எனவே, தவிர்க்கப்பட வேண்டியதாகிறது.
முன்னணி பங்குகள் :
சரிவின் காரணமாக அச்சம் ஏற்பட்டு, பல நேரங்களில் நல்ல பங்குகளை விற்கும் நிலை வரலாம். ஆனால், சிறிது காலத்திற்கு பின் அந்த பங்கு, பழைய நிலைக்கு மீண்டு விடலாம். அப்போது, பலனை இழக்க வேண்டியிருக்கும். ஆகவே, தற்காலிக சரிவுகளை பொருட்படுத்தாமல், நல்ல பங்குகளில் முதலீட்டை தொடர வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|