பதிவு செய்த நாள்
24 அக்2018
00:03
புதுடில்லி : பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விற்பனை உரிம விதிகளை தளர்த்தி, அதிக அளவில் தனியார் நிறுவனங்களை ஈர்க்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
தற்போது, பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு, விற்பனை உள்ளிட்ட வர்த்தகத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் உள்ள, 63,492 பெட்ரோல் விற்பனை நிலையங்களில், பெரும்பான்மை நிலையங்கள் இந்நிறுவனங்கள் வசம், உள்ளன.தனியார் துறையைச் சேர்ந்த, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா எனர்ஜி, ராயல் டச் ஷெல் ஆகிய நிறுவனங்களிடம் மிகக் குறைவாகவே, பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.
விலை நிர்ணயம் :
போட்டியற்ற எரிபொருள் சந்தையில், பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை, மூன்று பொதுத் துறை நிறுவனங்கள் வைப்பதே சட்டமாக உள்ளது. இந்த நிறுவனங்கள் பெட்ரோல், டீசலுக்கு தனித் தனியாக விலை நிர்ணயித்தாலும், பைசா கணக்கில் தான் வித்தியாசம் உள்ளது. அதனால், பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையில், அதிக அளவில் தனியார் நிறுவனங்களை ஈர்த்து, சந்தையில் போட்டியை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதனால், நுகர்வோர் பெரிதும் பயனடைவர் என்பதால், பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை உரிமம் தொடர்பான விதிகள் தளர்த்தப்பட உள்ளன.
உயர்மட்ட குழு :
இது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் சில்லரை விற்பனை உரிமம் தொடர்பான விதிமுறைகளை தளர்த்துவது குறித்து ஆராய, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவில், பொருளாதார வல்லுனர், கிரித் பரிக், பெட்ரோலிய துறை முன்னாள் செயலர் சதுர்வேதி, ஐ.ஓ.சி., முன்னாள் தலைவர், எம்.ஏ. பதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு, பெட்ரோல், டீசல் விற்பனை உரிம விதிமுறைகளை பரிசீலித்து, அதில், தனியார் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும். தனியார் துறையினர், பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையில் நுழையவோ அல்லது வர்த்தகத்தை விரிவுபடுத்தவோ தடையாக உள்ள அம்சங்கள் கண்டறியப்படும்.
விற்பனை உரிமம் தொடர்பான விதிகளை மேலும் தளர்த்த முடிவு செய்தால், அது குறித்தும், மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும். இக்குழுவின் அறிக்கை, 60 நாட்களுக்குள் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதலீடு :
பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை உரிமம் பெற, ஒரு நிறுவனம், குறைந்தபட்சம், 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். கச்சா எண்ணெய் வள ஆய்வு, எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, வினியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக, இத்தொகை அவசியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|