பதிவு செய்த நாள்
13 நவ2018
23:53
பீஜிங்:சீனாவின், ஐ.சி.பி.சி., வங்கி, இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில், 1,460 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில், இந்திய துாதரகம் சார்பில், ‘ஸ்டார்ட் அப் இந்தியா முதலீட்டாளர் மாநாடு’ நடைபெற்றது.இதில், இந்தியாவில் இருந்து, 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்களைச் சேர்ந்த, 42 தொழில் முனைவோர் பங்கேற்றனர். சீனாவைச் சேர்ந்த வங்கிகள், துணிகர முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இம்மாநாடு குறித்து, சீனாவில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, சீனாவில் முதலீட்டு வாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், இரண்டாவது ஆண்டாக இந்த மாநாடு நடைபெற்றது.கடந்த ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த, 12 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மாநாட்டில் பங்கேற்றன. அதில், நான்கு நிறுவனங்களில், சீன துணிகர முதலீட்டு நிறுவனங்கள், 110 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்தன.
தொழில் முனைவோர்இந்தாண்டு மாநாட்டில் பங்கேற்ற, 20 நிறுவனங்களில், ஏழு அல்லது எட்டு நிறுவனங்களுக்கு, 220 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு கிடைக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.இம்மாநாட்டில், ஐ.சி.பி.சி., எனப்படும் சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கியின், இந்திய கிளையின் தலைமை செயல் அதிகாரி, ஸெங் பின் கலந்து கொண்டார்.
அவர், இந்திய கிளை மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய, 1,460 கோடி ரூபாய் மூலதனத்தில் நிதியம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.இந்நிதியம், தகுதியுள்ள தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு, அவர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து, அந்நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க, சீன முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். இந்தியாவில், தொழில் புரியும் வயதுடையோர் அதிகம் உள்ளனர். அந்நாடு, வேகமாக நகரமயமாகி வருகிறது. இது, இந்திய தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கும், ஸ்டார்ட் அப் துறையின் முன்னேற்றத்திற்கும் துணை புரியும். இந்த வாய்ப்பை, சீன நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அகுனோ விமல், துணை தலைவர்
முதலீட்டாளர் மாநாட்டு குழு, பீஜிங்
அமெரிக்கா முதலிடம்
வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என, அழைக்கப்படுகின்றன.இதில், தொழில்நுட்பம் மற்றும் அது சாரா துறைகளில், 83 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன், அமெரிக்கா, முதல் இடத்தில் உள்ளது. முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில், இந்தியாவும், சீனாவும், தலா, 10 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் உள்ளன.
இந்தியாவில், தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 26 சதவீத பங்களிப்புடன், பெங்களூரு, முதலிடத்தை பிடித்துள்ளது.அடுத்து, டில்லி மற்றும் தலைநகர் பிராந்தியம், 23 சதவீதம்; மும்பை, 17 சதவீதம்; ஐதராபாத், 8 சதவீதம் என்ற அளவில், பங்களிப்பைக் கொண்டு உள்ளன. சென்னை, புனே நகரங்களில், தலா, 6 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|