பதிவு செய்த நாள்
16 நவ2018
00:02
ஓசூர்:நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், இந்திய மலர் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதால், வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு, ஓசூரிலிருந்து ரோஜா ஏற்றுமதிபாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, கெலமங்கலம், பாகலுார் சுற்று வட்டார பகுதிகளில், பசுமை குடில்கள் மூலம், 300 ஹெக்டேருக்கும் அதிகமாக ரோஜா சாகுபடி நடக்கிறது. ஓசூர் ரோஜாக்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்புள்ளதால், விவசாயிகள் மட்டுமின்றி, பெரிய நிறுவனங்களும் ரோஜா சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றன.
ஆண்டுதோறும், காதலர் தினம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விஷேச நாட்களில், ஓசூர் ரோஜாக்களுக்கு கடும் கிராக்கி ஏற்படும். அப்போது, பெங்களூரு வர்த்தக மையத்துக்கு கொண்டு செல்லப்படும் ரோஜாக்கள், அங்கிருந்து, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், ரசாயனம் இருப்பதாகக் கூறி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்திய மலர் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன. இதனால், ஓசூர் ரோஜா ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இது குறித்து, ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர், பாலசிவபிரசாத் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களை குறிவைத்து, 20 லட்சத்தில் இருந்து, 25 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படும். வழக்கமாக, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, ரோஜா மலர்களை, ‘பேக்கிங்’ செய்து, ஏற்றுமதிக்கு அனுப்பும் போது களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவோம்.
இந்நிலையில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்திய மலர்களில் ரசாயனம் இருப்பதாகக் கூறி, ஐந்து மாதங்களுக்கு முன், மலர் இறக்குமதிக்கு தடை விதித்தன. இந்தாண்டு, 10 லட்சத்தில் இருந்து, 15 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதியாகுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஓசூர் ரோஜாக்கள் இடத்தை, கென்யா, ஹாலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளின் மலர்கள் பிடித்துவிட்டன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|