பதிவு செய்த நாள்
24 டிச2018
02:33
பங்குச் சந்தையில், சமீப ஆண்டுகளாக, லாபத்தையே பார்த்து பழக்கப்பட்ட முதலீட்டாளர்கள், முதன்முதலாக நஷ்டத்தை சந்தித்த ஆண்டு, 2018. இந்த ஆண்டு இப்படி நஷ்டத்தில் முடியும் என, துவக்கத்தில் யாரும் நினைத்து பார்க்கவில்லை; அதற்கு யாரும் தயாராகவும் இல்லை.இத்தகைய சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை மீண்டும் மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.ஓராண்டில் என்ன நடந்தது, முதலீடுகள் எப்படி மாறின, மதிப்பீடுகளின் மாற்றங்கள் என்னென்ன, பொருளாதார வளர்ச்சியின் அளவீடு எத்தகையது, அடுத்த ஆண்டிற்கான எதிர்பார்ப்புகளை எப்படி வடிவமைப்பது...இப்படி பல விஷயங்களை பற்றி மறு ஆய்வு செய்து கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.ஓராண்டு போல இன்னொரு ஆண்டு அமையாது. பொருளாதார சூழல்களின் தன்மை அத்தகையது. உள்நாட்டு பொருளாதார சூழலும், உலக பொருளாதார சூழலும், வெவ்வேறு திசை நோக்கி அமைவது, தற்கால முதலீட்டின் முன் உள்ள மிகப் பெரிய சவால்.உதாரணத்திற்கு, 2017ல் உலக பொருளாதாரம், குறிப்பாக, அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியை எட்டிய நேரத்தில், உள்நாட்டில் சீர்திருத்த நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தன. ஜி.எஸ்.டி., அமலுக்கு கொண்டு வரப்பட்டு, சீரமைப்பு நடைபெற்றது.இந்த ஆண்டில், அமெரிக்க பொருளாதாரம், சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிக அதிக வளர்ச்சி கண்ட போதும், நம் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி வேகம் பிடிக்கவில்லை.ஆனால், ஆண்டின் துவக்கத்திலேயே, பங்குச் சந்தை அதிக பொருளாதார வளர்ச்சியை தன் எதிர்பார்ப்புகளில் பிரதிபலித்தது. எதிர்பார்ப்புகள் தவறாக இருந்தால் ஏமாற்றம் நிச்சயம். அந்த ஏமாற்றம், கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின்போது, சந்தையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.இந்த ஆண்டில் பங்குச் சந்தையில் சந்தித்த ஏமாற்றங்களை, அடுத்த ஆண்டும் நாம் சந்திக்க நேரிடுமா?அடுத்த ஆண்டை பற்றிய எதிர்பார்ப்புகள் மாறிக்கொண்டே இருக்கும். உலக பொருளாதார எதிர்பார்ப்புகளும், உள்நாட்டு பொருளாதர எதிர்பார்ப்புகளும் ஒன்றுபோல் அமையாமல் போகலாம். இவ்விரு எதிர்பார்ப்புகளும் முரணாகக்கூட அமையக்கூடும்.இதற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளே முன்னுதாரணம். இனி வரும் ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் மேலும் சீரமைக்கப்பட்டு, அதிக மாக வளர்ந்து, பங்குச் சந்தைக்கு வலிமை சேர்க்கலாம். உலகப் பொருளாதாரம் அதே அளவு சோபிக்காமலும் போகக்கூடும்.இத்தகைய மாற்றங்களினால், சந்தையின் போக்கு, எதிர்மறை தன்மையை வெளிப்படுத்தலாம். ஆகவே, உலக சந்தைகளில் ஏற்படும் சலனங்களையும், சர்ச்சைகளையும் சாதகமாக்கிக் கொள்ள நாம் தயாராக வேண்டிய நேரம் இது.அமெரிக்க பங்குச் சந்தை சலசலப்புகளை சந்திக்கும் நாட்களை நோக்கி நகருவதை நாம் உணரவேண்டும். அதேசமயம், இந்திய சந்தையின் போக்கு ஓரளவு திடமாக இருக்கும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.நம்முடைய சந்தை இறக்கம் கண்டாலும், குறுகிய அவகாசத்தில் மீண்டும் உறுதி பெற்றுவிடும். இதை சரியாக கணித்து, சரியான தேர்வுகளை செய்து, தக்க சமயங்களில் முதலீடுகளை அதிகரித்து, பொறுமை காக்க வேண்டும். இதுவே, நாம் செய்ய வேண்டியது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|