பதிவு செய்த நாள்
13 மார்2019
23:42
புதுடில்லி:மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், 19ம் தேதி நடைபெற உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு, தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இவ்வாணையம், 17வது லோக்சபா தேர்தல் அறிவிப்பை, 10ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதனால், ஏற்கனவே அறிவித்தபடி, ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 34வது கூட்டம், 19ம் தேதி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில், இக்கூட்டத்திற்கு, தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டு, தலைமை தேர்தல் ஆணையத்திடம் விண்ணப் பிக்கப்பட்டது. இதற்கு, ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆகவே, அருண் ஜெட்லி தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், 19ல் நடைபெறும். தேர்தலையொட்டி, இக்கூட்டத்தை, ‘காணொலி காட்சி’ மூலம் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. மாநில நிதியமைச்சர்கள் இதில் பங்கேற்பர்.
கடந்த மாதம் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கட்டுமான பணியில் உள்ள வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., 5 சதவீதம்; குறைந்த விலை வீடுகளுக்கு, 1 சதவீதம் என, குறைத்து நிர்ணயிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்த புதிய வரி விகிதங்கள், ஏப்., 1 முதல் அமலுக்கு வர உள்ளன. இதன் அமலாக்கம் தொடர்பான அம்சங்கள், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதேசமயம், சிமென்ட் வரியை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனினும், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, கூட்டத்தில் புதிய முடிவுகளை எடுக்கவோ அல்லது அறிவிக்கவோ வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
ஏப்ரல் முதல் அமல்
தற்போது கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளுக்கு, 12 சதவீத, ஜி.எஸ்.டி., உள்ளது. இதில், கட்டுமான நிறுவனங்களுக்கு, உள்ளீட்டு வரிச் சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, கட்டுமான நிறுவனங்கள், மூலப்பொருட்களுக்கு செலுத்திய வரியை திரும்பப் பெறுகின்றன.
இதேபோல, கட்டுமான பணி முடிவடைந்த குடியிருப்புகளை, பணி முடிவு சான்றிதழ் இன்றி விற்பனை செய்யும்போதும், கட்டுமான நிறுவனங்கள், உள்ளீட்டு வரிச் சலுகையை பெறுகின்றன.இந்த வகையில், கட்டுமான நிறுவனங்கள், மூலப் பொருட்களுக்கு செலுத்திய வரியை, திரும்பப் பெற்றாலும், அந்த பயனை, வீடு வாங்குவோருக்கு வழங்குவதில்லை.
அதாவது, வீடுகளின் விலையை குறைப்பதில்லை. அதுபோல, பணி முடிப்பு சான்றிதழுடன், குடியிருப்புகள் விற்கப்படும்போது, அவற்றை வாங்குவோர், ஜி.எஸ்.டி., செலுத்த தேவையில்லை. இருந்தும், வீடு வாங்குவோரிடம், கட்டுமான நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., செலவு என கூறி, பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், உள்ளீட்டு வரிச் சலுகையின்றி, குடியிருப்பிற்கான, ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடுகளுக்கான, ஜி.எஸ்.டி., 8 சதவீதத்தில் இருந்து, 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், 1 முதல், புதிய வரி விகிதம் அமலுக்கு வர உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|