பதிவு செய்த நாள்
01 ஏப்2019
07:15
இன்று முதல், புதிய நிதியாண்டு துவங்குகிறது. உங்களுடைய வரிகளைத் திட்டமிட சரியான தருணம்.
என்னவெல்லாம் நாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்? இந்த நிதியாண்டு கொஞ்சம் வித்தியாசமானது. ஒவ்வொரு முறையும் எவ்வளவு சம்பாதித்தாலும், கையில் நிகர இருப்பு ஏதும் இல்லை; எல்லாவற்றையும் வரி என்ற பெயரில் அரசே அள்ளிக் கொள்கிறது என்ற வருத்தம் உண்டு.அந்தக் குறை, அரசின் காதுகளில் விழுந்து கொண்டு தான் இருந்தது. அதைத் தீர்ப்பதற்கான தேவை ஏற்படவில்லை. இது தேர்தல் ஆண்டு. கூடுதல் சலுகைகளை மக்களுக்கு வழங்கி, திருப்தி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.
அதன் பலனைத் தான், இடைக்கால பட்ஜெட்டில் பார்த்தோம். அவையெல்லாம் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. முறையாக திட்டமிட்டு, சரியான சேமிப்புகளையும், இதர பிடித்தங்களையும் ஒழுங்குபடுத்தினால், கையில் கொஞ்சம் காசு நிற்கும்.வருவாய், 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு வருமான வரி தள்ளுபடி கிடைக்கும். அதாவது நீங்கள், 9.25 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் கூட, கொடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்தினால், உங்களுடைய வரி பிடித்தம் செய்யப்படுவதற்கான வருவாய், 5 லட்சம் ரூபாய் தான் வரும்.
அந்த நிலையில், நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை. இன்னொரு நல்ல முன்னேற்றம், நிரந்தரக் கழிவு. முன்னர், 40 ஆயிரம் ரூபாயாக இருந்த உச்ச வரம்பு, தற்போது, 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு, 3,120 வரை வரி சேமிப்பு கிடைக்கும்.மூத்த குடிமக்கள், பெண்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பலன், டி.டி.எஸ்., எனும் வருமான வரி பிடித்தத்தில் செய்யப்பட்டுள்ள மாறுதல். வங்கிகளில் செய்திருக்கும் சேமிப்புகளுக்குக் கிடைக்கும் வட்டி, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்குமானால், வரி பிடித்தம் செய்யப்படும். பிடித்தம் செய்யாமல் இருக்க, படிவம் – 15ஜியை வழங்க வேண்டும். பெரும்பாலும் இதை மறந்து விடுவர்.
தேவை இல்லாமல் பலருக்கும் வரி பிடித்தம் செய்யப்பட்டிருக்கும். ஒரு சில வங்கிகள் தான், வாடிக்கையாளர்களை ஞாபகப்படுத்தி, படிவம் – 15ஜியை வாங்குவர். தற்போது வட்டிக்கான அளவு, 10 ஆயிரத்தில் இருந்து, 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது, நீங்கள் செய்துள்ள சேமிப்புகளில் இருந்து, 40 ஆயிரம் ரூபாய் வரை வட்டி வருவாய் வந்தாலும், டி.டி.எஸ்., கட்டத் தேவையில்லை. இன்னொரு நல்ல முன்னேற்றம், இரண்டாம் வீடு வைத்திருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. முதல் வீட்டில் இருந்து கொண்டு, இரண்டாம் வீட்டை வாடகைக்கு விடுவர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, பல இடங்களில் வீட்டுக்கு வாடகைக்குக் கூட ஆட்கள் வரமாட்டேன் என்கின்றனர். ஆனாலும், வீட்டில் இருந்து வருவாய் வந்தாலும், வராவிட்டாலும், ஒரு நோஷனல் வாடகை என்பது கணக்கிடப்பட்டு, அதற்கும் வரி செலுத்த வேண்டி இருந்தது. இம்முறை, இப்படி காலியாக இருக்கும் இரண்டாம் வீட்டுக்கு நோஷனல் வாடகை மீதான வரி கிடையாது.
இன்னும் இரண்டு முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று, கட்டுமானத்தில் இருக்கும் கட்டடங்களின் மீதான சரக்கு மற்றும் சேவைக் கட்டணம் வித்தியாசப்படப் போகிறது. அதாவது, உங்கள் பில்டர் உள்ளீட்டு வரியை எடுத்துக் கொள்ளக்கூடியவராக இருந்தால், புதிய கட்டடங்களுக்கு, 12 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். அதே உள்ளீட்டு வரியை கோராமல் இருந்தால், வீடு வாங்கும் உங்களிடம், 5 சதவீத, ஜி.எஸ்.டி., வரியை வசூலித்தால் போதும். அதனால், எப்படிப்பட்ட வரி பிடித்தம் செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, இந்த நிதியாண்டில் வீடுகள் வாங்குங்கள்.
இரண்டு, வட்டி விகிதங்கள் தொடர்பானது. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வாங்கும் போது, விதிக்கப்படும் வட்டி விகிதம், ஒவ்வொரு வங்கியைப் பொறுத்து அமைந்திருந்தது. அவற்றுக்கெல்லாம் ஒரு வெளிப்படையான அடிப்படை அலகைக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என, ஆர்.பி.ஐ., சென்ற டிசம்பரில் தெரிவித்தது. இதை, இன்று முதல் அனைத்து வங்கிகளும் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தது.
எஸ்.பி.ஐ., வங்கி மட்டும், ரெப்போ வட்டி விகிதத்தை அடிப்படையாக கொண்டு, சேமிப்புகளும், கடன்களுக்குமான வட்டி விகிதங்களை நிர்ணயித்து அறிவித்துள்ளது. பிற வங்கிகளும் இந்த நடைமுறைக்கு விரைவில் வரும் என, எதிர்பார்க்கலாம். இதன் மூலம், பெரிய பலன், கடன் வாங்குவோருக்குத் தான். ரெப்போ விகிதம் எப்போதெல்லாம் குறைகிறதோ, அதன் பலன் வாடிக்கையாளர்களைப் போய் சேரும். மேலும், ஒவ்வொரு முறை அடிப்படை வட்டி விகிதங்களை, ஆர்.பி.ஐ., மாற்றி அமைக்கும் போதும், அது இந்த நாட்டின் பல கோடி பேரின் வாழ்க்கையைப் பாதிக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும்.
இந்த ஆண்டு நடக்க இருக்கும் மற்றொரு விஷயம் தான், நம் கவனத்தைக் கவர்கிறது. அதாவது, ‘புராஜக்ட் இன்சைட்’ என்றொரு திட்டத்தை, வருமான வரித்துறை இந்த ஆண்டு முதல் அமல்படுத்த இருக்கிறது.இது, தொழில்நுட்பம் சார்ந்தது. பல ஆண்டு கால உழைப்பில், 1,000 கோடி ரூபாய் செலவில் இந்த மிக விரிவான தகவல் சேமிப்பு ஆய்வுத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பத்தின் பெயர், ‘பிக் டேட்டா’ எனப்படுவது. அதாவது நீங்கள் என்ன விபரங்களைப் பகிர்ந்து கொண்டாலும், அது திரட்டப்படும். உதாரணமாக, உங்கள் வெளிநாட்டுப் பயண புகைப்படங்களை முகநுாலில் பகிர்ந்து கொண்டிருக்கலாம். புதிய காரோ, நகையோ வாங்கியிருக்கலாம். பெரிய தொகை ஒன்றை ஒருவருக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கலாம்.
இவையெல்லாம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இனிமேல் உங்கள் வருமானம் என்பது, உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமல்ல. வரி ஏய்ப்போரைக் கண்டுபிடித்து, அவர்களிடம் இருந்து முறையாக கணக்கு வழக்குகளைப் பெற, இந்தத் திட்டம் உதவப் போகிறது.அரசு கொடுக்கும் நியாயமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, கொஞ்சமேனும் சேமிப்புகளை உயர்த்திக் கொள்ளலாமே!
–ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|