பதிவு செய்த நாள்
25 ஏப்2019
07:02
மும்பை : முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்தில், ஜப்பானைச் சேர்ந்த நிதி நிறுவனமான, சாப்ட் பேங்க், 14 ஆயிரம் கோடி முதல், 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, சவுதி அரேபியாவைச் சேர்ந்த, ‘அரம்கோ’ நிறுவனம், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தில், 25 சதவீத பங்குகளை வாங்குவது குறித்து, பேச்சு நடத்துவதாக தகவல் வெளியானது.இந்த வகையில், அரம்கோ நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், 70 ஆயிரம் கோடி முதல், 1 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இந்த இரு முதலீடுகள் குறித்து, ரிலையன்ஸ் குழுமம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.
கடந்த, 2016 செப்., 5ல் ரிலையன்ஸ் ஜியோ, ‘4ஜி’ தொழில்நுட்பத்திலான, தொலைதொடர்பு சேவையில் களமிறங்கியது.இத்துறையில், இரண்டரை ஆண்டுகளில், 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 3.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது; இதில், 50 சதவீதம் பங்கு மதிப்பு என, நிதி துறையைச் சேர்ந்த, ஜே.பி.மார்கன் நிறுவனம் கணித்துள்ளது. அதுபோல, சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வரும், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் மதிப்பு, 2.45 லட்சம் கோடி ரூபாய் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, 7 லட்சம் கி.மீ., கம்பி வட பிரிவு மற்றும் தொலை தொடர்பு கோபுரங்கள் பிரிவை, இரு தனி நிறுவனங்களின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதனால், 2018 -– 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோவின் நிகர கடன், 3,320 கோடி டாலராகக் குறைந்துள்ளது. இது, மூன்றாவது காலாண்டில், 4,270 கோடி டாலராக இருந்தது.
பெருகி வரும் வருவாய், சந்தாதாரர் எண்ணிக்கை உயர்வு, குறைந்து வரும் கடன்கள் போன்றவற்றால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில், சாப்ட் பேங்க் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|