பதிவு செய்த நாள்
28 மே2019
07:08
புதுடில்லி: ஜி.எஸ்.டி.,யில், இரு வரிப் பிரிவுகளை ஒன்றாக இணைத்தால், மொத்த வருவாய் குறையும் ஆபத்து உள்ளதை அடுத்து, இணைப்பு திட்டத்தை தள்ளிப் போட, மத்திய வருவாய் துறை முடிவு செய்துள்ளது.
ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரியில், பூஜ்யம், 0.25, 1, 3, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, எட்டு பிரிவுகள் உள்ளன.இவற்றில், ‘12, 18 சதவீத வரிப் பிரிவுகளை ஒன்று சேர்த்து, 15 சதவீதமாக நிர்ணயித்தால், ஜி.எஸ்.டி., நடைமுறை மேலும் சுலபமாகும்’ என, முன்னாள் மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன் யோசனை தெரிவித்திருந்தார்.
இது குறித்து, மத்திய வருவாய் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அடுத்த மாதத்துடன், ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் முடிவடைகிறது. வரி வசூல், தற்போது மெல்ல ஸ்திரமடைந்து வருகிறது. இதுவரை, நான்கு முறை மட்டுமே, வரி வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இரு வரிகளை ஒன்றாக இணைத்தால், மொத்த வருவாயில், 1 லட்சம் கோடி ரூபாய் வரை குறையும். ஏனெனில், தற்போது, 1,200க்கும் அதிகமான பொருட்களில், 42 சதவீதப் பொருட்களுக்கு, 18 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது; 15 சதவீத பொருட்களுக்கு, 12 சதவீத வரி விதிப்பு உள்ளது.
வரிகளை ஒன்றிணைத்து, 15 சதவீதமாக நிர்ணயித்தால், பெரும்பாலான பொருட்களின் வரி வருவாய் குறையும்; குறைந்த பொருட்களின் வரி வருவாய் அதிகரிக்கும். இது, ஒட்டுமொத்த வரி வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஜி.எஸ்.டி., வருவாய் மேலும் ஸ்திரமாகும் சூழலில், வரிகளை ஒன்றிணைப்பது குறித்து தீர்மானிக்கலாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இலக்கை எட்டவில்லை:
கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., மூலம், 13.38 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், வசூல் வளர்ச்சி மிதமாக இருந்ததால், இந்த இலக்கு, 11.48 லட்சம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, மாதம், சராசரியாக, 1.14 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், அது எட்டப்படவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|