பதிவு செய்த நாள்
26 ஜூன்2019
06:56
புதுடில்லி: சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, தொடர்ந்து நடந்து வரும் வர்த்தக மோதல் காரணமாக, சீனாவிலிருந்து பல நிறுவனங்கள் வெளியேறும் முடிவை எடுத்துள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை, வளைத்துப்போடும் திட்டத்தில், மத்திய அரசு இறங்கியுள்ளது.
முன்னுரிமை வரி விகிதங்கள், வரி விடுமுறை என, பல சலுகைகளை அத்தகைய நிறுவனங்களுக்கு வழங்கவும், மத்திய அரசு திட்டமிடுகிறது. இது குறித்து, மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, எந்தெந்த துறைகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் சாதனங்கள், மின் வாகனங்கள், காலணிகள், பொம்மைகள், உள்ளிட்ட சில துறைகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.சுங்க வரிகளைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கும் நிறுவனங்களால், வியட்நாம் மற்றும் மலேசியா உள்ளிட்ட, நாடுகளின் பொருளாதாரங்கள் பயனடைந்துள்ளன. இந்தியாவும், இதை பின்பற்ற உள்ளது. சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுப்பது ஒருபுறமிருக்க, வர்த்தக மோதலை வேறு வழிகளிலும் பயன்படுத்த, மத்திய அரசு முயற்சி எடுக்க உள்ளது.
சீனாவுக்கு, அமெரிக்காவிலிருந்து, பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வர்த்தக மோதல் காரணமாக, இந்த ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அத்தகைய பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு எந்தெந்த பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யலாம் எனவும் ஆய்வு செய்துள்ளது, மத்திய அரசு. 150க்கும் அதிகமான பொருட்களுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
செயற்கை இழை, ‘ஹைட்ராலிக் பவர்’ என்ஜின்கள், வாகனங்களுக்கான, ‘சூப்பர் சார்ஜர்’ என பல பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்படும். இதற்காக, கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. சீனாவுக்கு ஏற்றுமதியை அதிகரிப்பது போலவே, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதை குறைப்பதற்கான திட்டமும் மத்திய அரசால் தீட்டப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள், உதிரிபாகங்கள், நுகர்வோர் சாதனங்கள், மின் வாகனங்கள் மற்றும் பாகங்கள், படுக்கை விரிப்புகள், சமயலறை பொருட்கள் போன்றவற்றில், 95 சதவீதம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இவற்றை இந்தியாவில், ‘மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.அரசு கொள்முதலிலும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|