பதிவு செய்த நாள்
07 ஜூலை2019
00:19
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கியிடமிருந்து, 90 ஆயிரம் கோடி ரூபாய், ‘டிவிடெண்டு’ தொகையை மத்திய அரசு எதிர்பார்ப்பதாக, மத்திய நிதித் துறை செயலர், சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:மத்திய அரசு, தற்போது எதிர்பார்க்கும், 90 ஆயிரம் கோடி ரூபாய் டிவிடெண்டு என்பது, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையுடன் ஒப்பிட்டால், 32 சதவீதம் அதிகம்.கடந்த நிதியாண்டில், ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு, 68 ஆயிரம் கோடி ரூபாயை, டிவிடெண்டாக அதாவது ஈவுத் தொகையாக வழங்கியது. இது, இடைக்கால டிவிடெண்டாக கொடுக்கப்பட்ட, 28 ஆயிரம் கோடி ரூபாயையும் சேர்த்ததே.
இதுவரை, ரிசர்வ் வங்கி வழங்கிய அதிகபட்ச டிவிடெண்டு, 68 ஆயிரம் கோடி ரூபாய் தான். இதற்கு முன், 2015- – -16ம் நிதியாண்டில், 65 ஆயிரத்து, 896 கோடி ரூபாயை, ரிசர்வ் வங்கி வழங்கியது. கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், 40 ஆயிரத்து, 659 கோடி ரூபாயை, டிவிடெண்டாக, மத்திய அரசு பெற்றது.
மறு ஆய்வு
ரிசர்வ் வங்கி, அதன் ஆண்டு கூட்டத்திற்கு பின், டிவிடெண்டை வழங்குவது வழக்கம். தற்போதைய நிலையில், 90 ஆயிரம் கோடி ரூபாய் டிவிடெண்டாக வரும் என, மத்திய அரசு கணித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.ரிசர்வ் வங்கி, ஜூலை முதல், ஜூன் வரையிலான காலத்தை, நிதியாண்டாக பின்பற்றி வருகிறது.எனவே, டிவிடெண்ட் தொகையை, அதன் ஆண்டு கணக்குகள் இறுதி செய்யப்பட்ட பின், ஆகஸ்ட் மாதத்தில் வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய பட்ஜெட்டில், ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் டிவிடெண்டு, 1.06 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், 74 ஆயிரத்து, 140 கோடி ரூபாய் பெறப்பட்டது.
இதற்கிடையே, ரிசர்வ் வங்கி, அதன் முன்னாள் கவர்னர், பிமல் ஜலான் தலைமையில், ரிசர்வ் வங்கியின் கையிருப்பு எவ்வளவுஇருக்க வேண்டும் என்பதை அறிய, ஒரு குழுவை அமைத்து உள்ளது.உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும், கூடுதல் உபரிகளை அரசுக்கு மாற்றவும், நிதியமைச்சகம் விரும்பியதன் அடிப்படையில், இக்குழு ஏற்படுத்தப்பட்டது.
பிமல் ஜலான் தலைமையிலான ஆறு உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவானது, கடந்த ஆண்டு, டிசம்பர், 26ல் நியமிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் பொருளாதார மூலதன கட்டமைப்பு குறித்து, இக்குழு மறு ஆய்வு செய்யும்.உபரி தொகைஇக்குழுவின் பிற உறுப்பினர்களாக, ரிசர்வ் வங்கி முன்னாள் துணை கவர்னர் ராகேஷ் மோகன், நிதி செயலர் சுபாஷ் சந்திர கார்க், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், என்.எஸ். விஸ்வநாதன், ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான, பாரத் தோஷி, சுதிர் மன்காட் ஆகியோர் உள்ளனர்.
ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி மூலதன தொகையான, 9.6 லட்சம் கோடி ரூபாயை பயன்படுத்துவது குறித்து, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேலுக்கும் இடையே முரண்பட்ட கருத்துகள் இருந்தன.
உலகிலுள்ள பெரும்பாலான மத்திய வங்கிகள் எல்லாம், வங்கியால் பராமரிக்கப்படும் மொத்த சொத்தில், 14 சதவீதம் அளவுக்கே உபரி கையிருப்பாக வைத்துள்ளன.ஆனால், ரிசர்வ் வங்கியிடம் அதை விட அதிகமாக, 28 சதவீதம் அளவுக்கு உபரி தொகை கையிருப்பாக உள்ளது. இவ்வளவு தேவையில்லை என மத்திய அரசு கருதுகிறது. இதில், உர்ஜித் படேல் முரண்பட்டார்.
இதையடுத்தே, கடந்த ஆண்டு நவம்பர், 19ல் நடைபெற்ற, ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழு கூட்டத்தில், வங்கியின் பொருளாதார மூலதன கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்ய, ஒரு குழு அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.மூன்று குழுக்கள்ரிசர்வ் வங்கியின் கையிருப்பு எவ்வளவு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து, பிமல் ஜலான் குழு அமைக்கப்படுவதற்கு முன், ஏற்கனவே, மூன்று குழுக்களால் ஆராயப்பட்டுள்ளன. 1997ல், வி.சுப்பிரமண்யம்; 2004ல், உஷா தோரத்; 2013ல், ஒய்.எச்.மாலேகம் ஆகியோரின் தலைமையில் மூன்று குழுக்கள் ஆராய்ந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|