பதிவு செய்த நாள்
26 ஆக2019
05:54
உலகப் பொருளாதாரம், நெருக்கடியை நோக்கி போய்க் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி சார்ந்த சிக்கல்களை அனுபவிப்பது உறுதி.ஐரோப்பிய நாடுகள், ஏற்கனவே அந்த சவால்களை எதிர்கொள்வதில் திணறுகின்றன.
சீனா, பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.வளைகுடா நாடுகள் கடன் சுமையாலும், கச்சா விலை வீழ்ச்சியாலும், வர்த்தக தேக்கத்தாலும் தவிக்கின்றன.சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளும் வளர்ச்சியை இழந்த நிலையில் இருக்கின்றன.இந்த சூழலில், இந்திய பொருளாதாரம் எப்படி வழி நடத்தப்பட வேண்டும் என்பதே இப்போதைய முக்கிய சவால்.பொருளாதார சவால்கள் பெரும்பாலும் தவிர்க்க இயலாதவை. அவற்றின் தாக்கத்தை தான் அரசுகள் குறைக்க முடியும்.சாமானியர்களை பாதிக்கக் கூடிய சவால்களை எதிர்கொள்வது, வளர்ச்சி இருக்கும் இடங்களை பாதுகாப்பது, வளர்ச்சி சந்திக்கும் சவால்களை களைவது, கொள்கை மாற்றங்களை வளர்ச்சியோடு இணைப்பது என்று, நம் அரசுக்கு பல பெரும் பொறுப்புகள் இருக்கின்றன.
இவை அனைத்தையும் சரியான அணுகுமுறையுடன், முன் யோசனையுடன் வழி நடத்துவதே இப்போதைய உடனடி சவால். ஒருவித அச்ச சூழல் இருக்கும் பொருளாதாரத்தில், இவை அனைத்தும் நடக்க வேண்டும் என்றால், பொருளாதார தலைமையும், தொழில் உலக தலைமையும், அரசியல் தலைமையும் இணைந்து நல்ல புரிதலுடன் செயல்பட வேண்டும்.இந்த புரிதல் நோக்கிய பயணம் துவங்கி இருப்பதைத் தான், நிதி அமைச்சரின் நேற்றைய அறிவிப்புகள் தெளிவுபடுத்துகின்றன.கடந்த பல ஆண்டுகளாக, இந்திய தொழில் உலகின் நம்பிக்கை, முன்னும், பின்னுமாகவே இருந்து வருகிறது. அரசியல் தலைமையின் நம்பிக்கை, தொழில் உலகில் பிரதிபலிக்க தொடர்ந்து தவறி வருகிறது.இது ஏன் என்று அரசியல் தலைமை புரிந்து கொள்ள வேண்டுமானால், அரசுக்கும், தொழில் உலகிற்கும் தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடக்க வேண்டும்; இருவரின் பார்வைகளும் மாற வேண்டும்.எங்கோ இரு தரப்பும் தொடர்புகளை துண்டித்து, தனித்தனியே செயல்பட்டது தான், இன்றைய பிரச்னையின் மூலக் காரணம்.சில ஆண்டுகளுக்கு முன், அரசு ஏதோ தொழிலதிபர்களுக்கு மட்டுமே செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு, அரசை அவர்களிடமிருந்து விலகி இருக்கச் செய்து விட்டது.இந்த மனநிலை, வளரும் பொருளாதார சூழலுக்கு உதவாது. அனைத்து தரப்பும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. பணவீக்கம் மிகக் குறைவாக உள்ள நிலையில், வளர்ச்சியை மீண்டும் வேகப்படுத்த பெரிதும் உதவும்.அரசால் கொள்கை முடிவுகள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அதற்கான சூழல் இருப்பது தான், இப்போது நமக்கு பக்க பலம். இந்த இடத்தில் இருந்து துவங்கி, அரசு சவால்களை ஒவ்வொன்றாக களைய வேண்டும்.பொருளாதாரத்தில் பணப்புழக்கம் அதிகரித்தாலே பல பிரச்னைகள் தீரும்; நுகர்வு அதிகரிக்கும். நிதி ஆதாரம் குறைவாக இருப்பதாக மக்கள் மனதில் இருக்கும் பிம்பம் விலகும். முடங்கிய தொழில்கள் மீண்டு எழும்.சில தொழில்கள் மூடப்பட்டாலும், பல புதிய தொழில்கள் வளரும். மந்த நிலை விலகி, வளர்ச்சி படிப்படியாக திரும்பும்.இந்த பாதையில், அனைவரும் செல்ல வேண்டுமானால், நமக்குத் தேவை பொருளாதார மற்றும் தொழில் நம்பிக்கை.
அதை உருவாக்குவது அரசின் கடமை. நிதி அமைச்சர் அதில் காட்டும் தீவிரம், ஒரு புதிய துவக்கத்தின் நம்பிக்கையை தருகிறது. இனி அனைவரும் நம்பிக்கையுடன் மீண்டும் பயணிப்பதை தவிர வேறு வழியில்லை.நம்பிக்கையை விட சிறந்த பொருளாதார மருந்து, இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; இனியும் கண்டுபிடிக்கப்பட மாட்டாது. அரசு அந்த மருந்தை அனைத்து தரப்பினருக்கும் தொடர்ந்து தரும் என்று நம்புவோம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|