பதிவு செய்த நாள்
07 நவ2019
00:12
புதுடில்லி:பி.எஸ்.என்.எல்., நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இதையடுத்து, 70 ஆயிரம் முதல், 80 ஆயிரம் வரையிலான ஊழியர்கள், இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலமாக கடுமையான நிதிச் சிக்கலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது, பி.எஸ்.என்.எல்., நிறுவனம்.
மறுசீரமைப்பு
இந்நிலையிலிருந்து நிறுவனத்தை மீட்பதற்கான மறு சீரமைப்பு திட்டத்துக்கு அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதைஅடுத்து தற்போது, விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது, பி.எஸ்.என்.எல்.,இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை, 80 ஆயிரம் ஊழியர்கள் வரை ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக சம்பள வகையில், 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு மீதமாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், பி.கே.புர்வார் கூறியதாவது:விருப்ப ஓய்வு திட்டத்தை ஊழியர்கள், டிசம்பர், 3ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டம் குறித்த அனைத்து தகவல்களையும் ஊழியர்களுக்கு தெரிவிக்க ஏற்கனவே முயற்சிகள் துவங்கப்பட்டு விட்டன.
தகுதி
நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை சுமார், 1.5 லட்சம் ஆகும். இதில், ஒரு லட்சம் பேர் வரை, இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை பெற தகுதி படைத்தவர்களாக இருக்கிறார்கள்.இது அரசால் வழங்கப்பட்ட மிகச் சிறந்த விருப்ப ஓய்வு திட்டமாகும். ஊழியர்கள் இதை பாஸிட்டிவ் மன நிலையுடன் பார்க்க வேண்டும்.
தற்போது, 70 ஆயிரம் முதல், 80 ஆயிரம் பேர் வரை இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஓய்வு பெறுவார்கள் என கருதுகிறோம். அதனால் சம்பள வகையில், 7 ஆயிரம் கோடி ரூபாய் வரை மீதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.‘பி.எஸ்.என்.எல்., விருப்ப ஓய்வு திட்டம் – 2019’ன் படி, அனைத்து வழக்கமான மற்றும் நிரந்தர ஊழியர்களும், பிற நிறுவனங்களிலிருந்து வந்து பணியேற்றவர்களும், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பாக வெளி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும், இத்திட்டத்துக்கு தகுதி உடையவர்கள் ஆவர். இவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
எம்.டி.என்.எல்.,பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை தொடர்ந்து, எம்.டி.என்.எல்., நிறுவனமும் விருப்ப ஓய்வு திட்டத்தை, அதன் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை, ஊழியர்கள் டிசம்பர், 3ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.மேலும், 50 வயதான அனைத்து வழக்கமான மற்றும் நிரந்தர ஊழியர்களும் இந்த திட்டத்தை ஏற்க தகுதி படைத்தவர்கள்.
மத்திய அரசு கடந்த மாதம், 69 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மறு சீரமைப்பு திட்டத்துக்கு அனுமதி வழங்கியது.இதைக் கொண்டு, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களை ஒன்றிணைப்பது, விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவது, ‘4ஜி’ அலைக்கற்றை வாங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இரு நிறுவனங்களின் தற்போதைய கடன் மதிப்பு, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
மறு சீரமைப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் பட்சத்தில், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 2024 நிதியாண்டில், லாபகரமாக செயல்படத் தொடங்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|