பதிவு செய்த நாள்
04 டிச2019
00:03
புதுடில்லி:முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களில், 3 சதவீதம் மட்டுமே வாராக் கடனாக மாறியுள்ளது என, மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை திட்டங்களில் ஒன்று, ‘பிரதான் மந்திரி முத்ரா யோஜனா’ திட்டம்.
வாராக்கடன்
இத்திட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப் பட்டது.இத்திட்டத்தை, பிரதமர் மோடி, 2015 ஏப்ரல், 8ம் தேதி துவங்கி வைத்தார். 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான கடன் தேவைப்படும் நிறுவனங்களுக்கு, இத்திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
முத்ரா திட்டத்தின் கீழ், மூன்று வகைகளில், கடன் வழங்கப்படுகிறது. ‘சிசு’ திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரை; ‘கிஷோர்’ திட்டத்தில், 50 ஆயிரம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை; ‘தருண்’ திட்டத்தில், 5 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, கடன் வழங்கப்படுகிறது. வங்கிகளின் மூலம் இக்கடன்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களில், வாராக் கடன் குறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் பதிலளித்தபோது கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட முத்ரா திட்டத்தின் கீழ், 6.04 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இதில், 3 சதவீதம் மட்டுமே வாராக் கடனாக மாறியுள்ளது.
முத்ரா திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து, கிராமப்புற வங்கிகள் உள்ளிட்ட வங்கிகளால், மார்ச் மாதம் வரை மொத்தம், 6.04 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுஉள்ளது.
வங்கிகள்
இதில், 2.86 சதவீதம் அதாவது, 17 ஆயிரத்து, 252 கோடி ரூபாய் மட்டுமே வாராக் கடனாக மாறிஉள்ளது. பொதுத் துறை வங்கிகளைப் பொறுத்தவரை, கடந்த ஐந்து நிதியாண்டுகளில் அவற்றின் கிளைகளின் எண்ணிக்கை, மார்ச் மாத நிலவரப்படி, 87 ஆயிரத்து, 580 ஆக உயர்ந்து உள்ளது.
மார்ச், 2014ம் ஆண்டு நிலவரப்படி, பொதுத் துறை வங்கி கிளைகளின் எண்ணிக்கை, 78 ஆயிரத்து, 939 கிளைகளாக இருந்தது.இவ்வாறு கூறிய அமைச்சர், பொதுத் துறை வங்கிகள் தள்ளுபடி செய்த கடன்கள் பற்றியும் தகவல்களை தெரிவித்தார்.பொதுத் துறை வங்கிகள் தள்ளுபடி செய்த கடன் குறித்த தகவலை, தனி அட்டவணையில் காணலாம்.
எச்சரிக்கை
கடந்த மாதம், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எம்.கே.ஜெயின், ‘முத்ரா திட்டத்தில், வாராக் கடன் அளவு அதிகரித்து வருவது கவலை தருவதாக இருக்கிறது. கடனை வழங்குவதற்கான மதிப்பீட்டு கட்டத்திலேயே, வாங்குபவர்களின் கடனை திருப்பிச் செலுத்தும் திறன் குறித்து, வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும். மேலும், கடன்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்’ என, எச்சரித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|