பதிவு செய்த நாள்
09 டிச2019
00:27
கடந்த வாரம் நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில், வட்டி விகிதம் எவ்வளவு குறைக்கப்படும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம், நிபுணர் குழு வட்டி விகிதம் இம்முறை குறைக்கப்பட வேண்டாம் என, ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பரிந்துரை செய்தது. அதே சமயம், தேவை ஏற்பட்டால் வரும் காலங்களில் குறைக்க பரிந்துரைக்க கூடும் என்ற நிலைப்பாட்டை நிபுணர் குழு தெளிவுபடுத்தியது.
இதன் பின்னணியை முதலீட்டாளர்களும், மற்றவர்களும் புரிந்து கொள்வது மிக அவசியம். வட்டி விகிதம் தொடர்ந்து குறைவாக இருக்க வேண்டும் என்பதே இப்போதைய பொருளாதார கட்டாயம்.நம் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப, குறைந்த வட்டி விகிதங்கள் மிக அவசியம். தொழில்கள் தங்கள் புதிய முதலீட்டு முடிவுகள் எடுக்கவும், மக்கள் நுகர்வில் தொடர்ந்து ஈடுபடவும் இது பெரிதும் உதவும்.
ஆகவே, நீட்சியாக வட்டி விகிதங்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பது பொருளாதாரத்தின் போக்கை நிர்ணயிக்கும். இது, அரசு, தொழில், நுகர்வு, வங்கித் துறை மற்றும் முதலீட்டு உலகம் சார்ந்த அனைவரும் ஏற்கும் ஒரு தேவை.இம்முறை வட்டி விகிதம் குறைக்கப் படாததற்கு பண வீக்கம் ஒரு முக்கிய காரணம். உணவு பொருட்களின் விலை கூடும் சூழல் ஏற்பட்டுள்ள நேரத்தில், ஒட்டு மொத்த பணவீக்கம் எப்படி மாறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பணவீக்கம் மாற இன்னொரு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம். வரும் மாதங்கள் குளிர்காலம் ஆதலால், கச்சா எண்ணெய் விலை உலக சந்தைகளில் கூடக்கூடும். ஆகவே, குளிர்காலத்தில் நம் உள்நாட்டு பணவீக்கம் எப்படி மாறுகிறது என்று பார்த்துவிட்டு, பிப்ரவரி மாதம் வட்டி குறைப்பு முடிவை மீண்டும் கையெடுக்க நிபுணர் குழு நினைக்கிறது.
ஒருவேளை பணவீக்கம் மீண்டும் நிலையான போக்கை எடுத்தாலோ அல்லது குறைந்தாலோ, மீண்டும் வட்டி விகிதம் குறைய வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படி நடக்க தவறினால், வட்டி விகிதம் இதே நிலையில் இருக்கலாம்.ஒருவேளை யாரும் எதிர்பாராத வண்ணம் பணவீக்கம் கிடுகிடுவென உயர்ந்தால், வட்டி விகிதம் கூட்டப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். மேலும், பொருளாதாரத்தில் நிலவும் பணப்புழக்கம் குறைக்கப்பட வேண்டும். இதை மனதில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இடைக்காலத்தில், பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள சூழலில், அரசு தன் பங்கிற்கு அதிக செலவு செய்து, பொருளாதார நிலைமையை சரிசெய்ய முயற்சிக்கும். இதற்கான கொள்கைகள் அவசரமாக வகுக்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்கின்றனர்.அடுத்த ஆண்டின் பட்ஜெட்டை பிப்ரவரி 1ல் அரசு தாக்கல் செய்யும். அந்த பட்ஜெட்டில் மக்கள் கையில் அதிக பணம் புழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தனி நபர் வரி குறைப்பு முடிவுகளை அரசு எடுக்கும் என்ற அறிகுறிகள் தெரிகின்றன.
அந்த முடிவுகள் நிச்சயம் பணவீக்கத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை. இருந்தும் தனி நபர் வரி குறைப்பு காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. இந்த அம்சங்கள் அனைத்தையும் மனதில் கொண்டுதான், இந்த முறை வட்டியை குறைக்கக்கூடாது என்ற முடிவு எட்டப்பட்டு உள்ளது.வங்கிகள் ஏற்கனவே எடுக்கப்பட்ட வட்டி குறைப்பு முடிவுகளின் பயன்களை நுகர்வோருக்கு கொண்டு சேர்க்க இந்த இடைக்காலம் உதவும்.
shyamsek@ithought.co.in
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|