பதிவு செய்த நாள்
25 பிப்2020
18:34
நாடு முழுவதும் வர்த்தகம், வரி வசூலிப்பு முறையை எளிமைப்படுத்துவதற்காக, ஒரே நாடு – ஒரே வரி என்ற அடிப்படையில் ஜி.எஸ்.டி., அறிமுகமானது. நடைமுறையில் இருந்த வாட், கஸ்டம்ஸ், சேவை போன்ற பலவரி முறைகள் நீக்கப்பட்டு 2017ல் ஜி.எஸ்.டி., அமலானது. அப்போது நாடு முழுவதும் பழைய வரி முறையில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த 38.5 லட்சம் வர்த்தகர்கள், ஜி.எஸ்.டி.,க்கு மாறினார்கள். ஜி.எஸ்.டி.,யின் பயனை பார்த்து கூடவே புதிய வர்த்தகர்களும் லட்சக்கணக்கில் பதிவு செய்தார்கள்.
இப்போது ஜி.எஸ்.டி.,தொடங்கி 2 ஆண்டுகளில், 1.22 கோடி வர்த்தகர்கள் (2020 பிப்ரவரி 17 கணக்குப்படி) ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதன்மூலம், 41.99 கோடி ரிடர்ன்ஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி.,பதிவு குறித்து சிறுதொழில் நிறுவனங்களுக்கு அடிக்கடி சந்தேகங்கள் எழுந்து வருகிறது. இன்றைய கட்டுரையில் ஜி.எஸ்.டி., வரம்பு, கட்டாய பதிவு பற்றி பார்ப்போம்.
ஜி.எஸ்.டி., பதிவு ஏன் அவசியம்?ஜி.எஸ்.டி., பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே வினியோகஸ்தர்களாக அல்லது வரிதாரர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். பதிவு செய்த வரிதாரர் மட்டுமே தங்களது விற்பனைக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஜி.எஸ்.டி., வசூல் செய்து அரசிடம் சமர்ப்பிக்க முடியும். தவிர அந்த நிறுவனம் வாங்கும் பொருளுக்கும் உள்ளீட்டு வரி வரவு எடுக்க முடியும்.
பதிவு வரம்பு என்ன?ஜி.எஸ்.டி., பதிவு வரம்பை அறிந்து கொள்வதற்கு, நீங்கள் செய்யும் தொழில் ‘விற்பனை’ என்ற வரம்பில் வருமா அல்லது ‘சேவை’ வரம்பில் வருமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.ஜி.எஸ்.டி.,சட்டப்படி, சரக்கு விற்பவராக இருந்தால், நிறுவனத்தின், விற்றுமுதல் (டர்ன்ஓவர்) ஒரு நிதியாண்டில், ரூபாய் 40 லட்சத்திற்கும் மேல் இருந்தால் ஜி.எஸ்.டி.,யின் கீழ் அந்நிறுவனம் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மார்ச் 31, 2019 வரை இந்த வரம்பு ரூபாய் 20 லட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு அந்தஸ்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்த வரம்பு 20 லட்சமாக உள்ளது.சேவை வழங்கும் தொழில் செய்பவராக இருந்தால், வரவு ஒரு நிதியாண்டில் ரூ. 20 லட்சத்திற்கும்மேல் இருந்தாலோ சிறப்பு அந்தஸ்து மாநிலங்களில் ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் இருந்தாலோ ஜி.எஸ்.டி.,பதிவு அவசியம். தான் உற்பத்தி செய்து விளைவித்த வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு விவசாயி பதிவு செய்ய வேண்டியதில்லை. ஜி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் பிரத்யேகமாக செய்யும் வரியில்லாத அல்லது மொத்தமும் விலக்களிக்கப்பட்ட சரக்கு மற்றும் / அல்லது சேவைகளை கொண்டிருப்பவரும் பதிவு செய்ய வேண்டியதில்லை.
தொகுப்புமுறையால் என்ன பயன்?
ஆண்டுக்கு விற்றுமுதல் ரூபாய் 1.5 கோடியை விட குறைவாக இருக்கும் பட்சத்தில், தொகுப்பு முறை (Composition Scheme)யை பயன்படுத்தி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி கட்டி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி தாக்கல் செய்தால் போதும். ஆனால் தொகுப்பு முறையை உபயோகப்படுத்துபவர்கள் உள்ளீட்டு வரி எடுக்க முடியாது. ஜி.எஸ்.டி., வசூல் செய்ய முடியாது. விற்றுமுதல் முதலில் ஒரு சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும். உணவகங்களுக்கு இது 5 சதவீதம் ஆகும்.
கட்டாய பதிவு முறைஇந்த வரம்புக்கு கீழ் உள்ளவர்களும், சட்டப்பிரிவு 24ன் படி வரம்பு எதுவாக இருந்தாலும் சிலர் கட்டாயமாக பதிவு செய்யவேண்டும்.* இரு வேறு மாநிலங்களுக்கு இடையேயான வினியோகம் (Inter-state Supply)* நிரந்தரமற்ற வர்த்தகர்கள் (Casual Taxpayers)* எதிர்முறை வரிவிதிப்பு முறையில் வரி செலுத்தும் நபர்கள் (Reverse charge Mechanism)* வரிக்குட்பட்ட பொருள் மற்றும் சேவையை இந்தியாவில் வணிகம் செய்யும் நோக்கில் வரும் தற்காலிக வெளிநாட்டு வர்த்தகர்கள் பதிவு செய்வது கட்டாயம். இந்தியாவில் எந்த வணிக இடமும் இருந்திருக்க கூடாது.* உள்ளீட்டு சேவை வினியோகஸ்தர்கள் (சட்டப்படி பதிவு செய்திருந்தாலும் அல்லது செய்யாவிட்டாலும்)* பதிவு செய்த வரி செலுத்துபவருக்கு பதிலாக ஒரு ஏஜன்ட் அல்லது வேறு யாரோ சரக்கு மற்றும் / அல்லது வழங்கல் செய்தால்* ஒவ்வொரு மின்னணு வர்த்தகம் இயக்குபவர் (ஈ-காமர்ஸ் ஆபரேட்டர்) அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாபடீல் போன்றவை* வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு இணையதள தகவல் மற்றும் தரவுத்தள அணுகல் (Retrieval Services) அல்லது திரும்பப் பெறும் சேவைகளை வழங்குவதற்கான ஒவ்வொரு நபரும்.இந்த வரம்புக்கு உட்படாதவர்களும் தாமாக முன் வந்து பதிவு செய்யும் வசதி உள்ளது.
பதிவு செய்வது எப்படிஜி.எஸ்.டி., வரிப்பதிவு, வருமான வரி நிரந்தரக்கணக்கு எண்ணை (PAN) அடிப்படையாக கொண்டது. ஒருவர் இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்து வியாபாரம் செய்தாலும் அந்த நிரந்தரக் கணக்கு எண் ஒரே வியாபாரமாக கருதப்படும். அதாவது ஒரே நிரந்தரக் கணக்கில் இரண்டு அல்லது பல்வேறு பெயரில் வியாபாரங்கள் செய்தாலும் அவற்றின் கூட்டு தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ரூ.40 லட்சம் வரம்பு என்பது அனைத்து மாநிலங்களிலும் ஒரு நபர் செய்த வரிக்குட்பட்ட சரக்கு மற்றும் சேவை, ஏற்றுமதி, வரிவிலக்கு வினியோகம் ஆகியவற்றின் கூட்டு தொகையாகும்.
பதிவு செய்ய விரும்புபவர் ஜி.எஸ்.டி (https://reg.gst.gov.in/registration/ வலைத்தளத்தில் ஆன்லைனில் மட்டுமே பதிவு, வரித்தாக்கல், ரீபண்ட் என அனைத்தும் செய்யப்பட வேண்டும். பதிவு செய்ய பெயர், மாநிலம், நிரந்தரக் கணக்கு எண், இ-–மெயில், மொபைல் எண், ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ஜி.எஸ்.டி., வலைதளத்தில் இணைய குறிப்பு எண் (User ID) மற்றும் கடவு எண்(OTP) கொடுக்கப்படும். பின் REG-01 படிவத்தை பூர்த்தி செய்து நிரந்தர கணக்கு எண், தொடர்பு விபரங்கள், இமெயில் முகவரி, தொடர்பு எண், புகைப்படங்கள், கூட்டு ஒப்பந்தம், பதிவு சான்றிதழ் அல்லது மற்ற நிறுவன ஆதாரங்கள், வாடகை / குத்தகை ஒப்பந்தம், வங்கி கணக்கு தொடர்பான ஆதாரம் போன்ற ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்நிறுவனங்கள் என்றால் இதனை டிஜிட்டல் கையெழுத்து(DSC) மூலமாக உறுதி செய்ய வேண்டும். மற்றவர்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் OTP மூலம் உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் கேள்விகள் இருந்தால் மூன்று நாட்களுக்குள் அதிகாரிகள் கேட்பார்கள் பதிலை ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக பதிவு 3 முதல் 7 நாட்களுக்குள் செய்யப்படும்.
அடையாள எண் எப்படி இருக்கும்?15 இலக்கங்களை கொண்டது ஜி.எஸ்.டி., வரி அடையாள எண். முதல் 2 இலக்கம், மாநிலத்தை குறிக்கும், அடுத்த 10 இலக்கம், வருமான வரி நிரந்தரக் கணக்கு (PAN) எண்ணை குறிப்பிடும். அடுத்த 2 இலக்கம், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, கடைசி இலக்கம் சோதனைக்காக.ஜி.எஸ்.டி., வரி செலுத்த பதிவு செய்தபின், 2 வகையான கணக்குப் பதிவேடுகள் ஜி.எஸ்.டி., வலைதளத்தில் திறக்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்து கொண்டால், மின் கணக்குப் புத்தகம், ரொக்கம் மற்றும் உள்ளீட்டு வரவு மற்றும் வரிப் பொறுப்பு பதிவேடு ஆகியவை அந்தப் பக்கத்தில் எப்போதும் தெரியும்.இது வருமான வரித் துறையில் உள்ள உங்களது படிவம் 26AS போன்றது.
உங்கள் கேள்வி என் பதில்
நான் ஜி.எஸ்.டி., பதிவு செய்யவில்லை. நான் வாங்கும் பொருட்களுக்கு உள்ளீட்டு வரி ஏதும் எடுக்க முடியாது என்கிறார்கள் விவரங்கள் தேவை– கே பாண்டுரங்கன், கருமத்தம்பட்டி.
ஜி.எஸ்.டி., பதிவு செய்து கொண்டவர்கள்தான் உள்ளீட்டு வரியை எடுக்க முடியும். ஜிஎஸ்டி பதிவு செய்யாதவர்கள் வரியையும் வசூல் செய்ய முடியாது. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கும் உள்ளீட்டு வரி எடுக்க முடியாது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|