பதிவு செய்த நாள்
23 மே2020
22:31
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 0.8 சதவீதமாக இருக்கும், என, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது. இது, இதற்கு முந்தைய கணிப்பை விட குறைவாகும்.
கொரோனா தொற்று பரவலால், உலக பொருளாதாரம் இதற்கு முன் இல்லாத வகையில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பையும் குறைத்து உள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.பிட்ச் ரேட்டிங்ஸ் மேலும் கூறியுள்ளதாவது: கடந்த நிதியாண்டில், வளர்ச்சி, 4.9 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 0.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், அடுத்த நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.7 சதவீதமாக உயரும்.ஜூன் மாதத்துடன் முடியும் காலாண்டில், வளர்ச்சி, மைனஸ் 0.2 சதவீதமாகவும்; செப்டம்பர் மாதத்துடன் முடியும் காலாண்டில் வளர்ச்சி, மைனஸ் 0.1 சதவீதமாகவும் இருக்கும்.நடப்பு ஆண்டின் டிசம்பர் காலாண்டில், வளர்ச்சி, 1.4 சதவீதமாக அதிகரிக்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி சரிவுக்கு, நுகர்வோர் செலவழிப்பு குறைந்து இருப்பதே காரணமாக அமையும்.உலக பொருளாதாரத்தை பொறுத்தவரை, நடப்பாண்டில் வளர்ச்சி, 3.9 சதவீதம் அளவுக்கு சரியும். இது, 2009 மந்தநிலையின் போது இருந்த வளர்ச்சி விகிதத்தை விட, இரு மடங்கு குறைவாக இருக்கும்.இவ்வாறு, பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|