பதிவு செய்த நாள்
30 ஜூன்2020
22:35
சென்னை:‘சிப்காட்’ தொழில் பூங்காக்களில் சேரும் திடக் கழிவுகளை கையாள, பூங்கா வளாகத்திற்குள், 3 முதல், 5 ஏக்கர் நிலத்தை, ‘சிப்காட்’ நிர்வாகம் ஒதுக்கி உள்ளது.
தமிழக அரசின், ‘சிப்காட்’ எனும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்திடம் பெறும் நிலத்தில், பெரு நிறுவனங்கள் தொழில் துவங்குகின்றன. காஞ்சிபுரம், துாத்துக்குடி, உட்பட, பல்வேறு மாவட்டங்களில், 19 தொழில் பூங்காக்கள் அமைந்துள்ளன. இந்த தொழில்
பூங்காக்களில், சேகரமாகும் திடக் கழிவுகளை கையாள, தொழில் பூங்காக்களுக்குள், குப்பை கிடங்கு துவங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ‘சிப்காட்’ அதிகாரிகள் கூறியதாவது:
சிப்காட் தொழில் பூங்காக்களை பராமரிக்க, ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இவர்கள், சாலை மற்றும் மின் விளக்குகள் பராமரிப்பு மேற்கொள்வர்.
ஆனால், குப்பை அகற்றுவது தொடர்பாக, ஒரு அங்கீகரிக்கப்பட்ட திட்டம் இல்லாமல்
இருந்தது. இது தொடர்பாக, தொழிற்சாலைகள் மற்றும் சிப்காட் நிர்வாகம் இடையே ஒரு குழப்பம் இருந்தது.
இதனால், பூங்காக்களில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் நிறைந்து காணப்பட்டன.பல்வேறு பூங்காக்கள் பஞ்சாயத்துகளில் உள்ளன. இதனால், பூங்காக்களிலிருந்து குப்பையை
அகற்றுவதில், சிரமம் இருந்தது. தற்போது பூங்காக்களில், குப்பையை கொட்டுவதற்காக,
3 முதல், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.தினமும், குறிப்பிட்ட துாரம் உள்ள குப்பையை அகற்றி, குப்பை கிடங்கில் கொட்டப்படும். இதற்காக ஆட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த குப்பை கிடங்கில், மக்கும் குப்பை, மக்காத குப்பை, தொழிற்சாலை குப்பை என, தரம் பிரித்து கொட்டப்படும். டன் கணக்கில் குப்பை சேர்ந்த பின், இதிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இந்த உரங்கள், பூங்காக்களில்
வளர்க்கும் மரங்களுக்கு பயன்படுத்தப்படும். இதற்காக ஆகும் செலவு,தொழிற்சாலைகளில் இருந்து வசூலிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|