பதிவு செய்த நாள்
09 ஜூலை2020
23:26
புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 3 சதவீதம் அளவுக்கு குறையும் என, 'பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, அனைத்து பொருளாதார ஆய்வறிக்கைகளும், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி விகிதத்தை குறைத்து அறிவித்து வருகின்றன. ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்கள், வளர்ச்சியை குறைத்து அறிவித்துள்ளன.சில ஆய்வறிக்கைகள், 7 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி சரியும் என தெரிவித்துள்ளன. இந்நிலையில், 'பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ்' நாட்டின் வளர்ச்சி, 3 சதவீதம் அளவுக்கு குறையும் என அறிவித்துள்ளது.
இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், கொரோனா பரவல் காரணமாக, 3 சதவீதம் அளவுக்கு குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் மாத மத்தியிலிருந்து, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் துவங்கிவிடும் என்ற அடிப்படையில், இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சிக்கல் மேலும் நீடித்தால், வளர்ச்சி, 5 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நிறுவனத்தின் இந்திய பொருளாதார நிபுணர் இந்திரனில் சென் குப்தா மேலும் கூறியதாவது:ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், நாடு முழுமையாக முடக்கப்பட்டதை அடுத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீத புள்ளிகள் அளவுக்கு, அவை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தாக்கம் மாதத்திற்கு, 1 சதவீத புள்ளியாக குறைந்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பலமாக இருப்பது, அதன் அன்னிய செலாவணி இருப்பு. கடந்த சில மாதங்களில் இது, அரை லட்சம் கோடி டாலர் என்பதை தாண்டி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|