பதிவு செய்த நாள்
07 ஆக2020
22:31
புதுடில்லி:சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் வகையில், ‘சீனாவே இந்தியாவில் இருந்து வெளியேறு’ எனும் பிரசாரத்தை, நாளையிலிருந்து துவங்க இருப்பதாக, சி.ஏ.ஐ.டி., எனும், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சில்லரை விற்பனைஇது குறித்து, இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சீன தயாரிப்புகளை புறக்கணித்து, உள்நாட்டு தயாரிப்புகளுக்கு ஆதரவை வழங்குவதற்கான பிரசாரம் நாளையிலிருந்து துவங்கப்பட உள்ளது. கூட்டமைப்பில் இருக்கும், 40 ஆயிரம் வர்த்தக சங்கங்கள், 600 நகரங்களில் இந்த பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கின்றன.
இந்த பிரசாரத்தின் மூலம், சீன நிறுவனமான, ‘ஹூவாவேய்’ 5ஜி அலைவரிசையை வழங்குவதற்கான முயற்சிகளை தடை செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.மேலும், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்கள், அவற்றிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவைப்படும் நிதி உதவியை, அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க இருக்கிறோம்.கடந்த, 20 ஆண்டு களில், சீனா அதன் தயாரிப்புகள் மூலம் சில்லரை விற்பனை சந்தையை வளைத்து, இன்று இந்த அளவுக்கு வந்திருக்கிறது.
பண்டிகைகள்
சீன தயாரிப்புகளின் பிடியில் இருக்கும் சில்லரை விற்பனை சந்தையை விடுதலை செய்வது, மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம், சீனாவை சார்ந்து இருப்பதை தவிர்த்து, சுயசார்புடன் இந்தியா இருக்க இயலும்.‘ரக்ஷா பந்தன்’ தினத்தை முன்னிட்டு, சீன பொருட்களை மக்கள் புறக்கணித்ததால், 4,000 கோடி ரூபாய் இழப்பை அவை சந்தித்தன.அடுத்து ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தஸரா, தீபாவளி என தொடர்ந்து வரும் பண்டிகைகளிலும், சீன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என, வலியுறுத்த உள்ளோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|