பதிவு செய்த நாள்
30 செப்2020
22:27
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம் தற்போது, டீசல் இன்ஜின் கார்களை முற்றிலும் நிறுத்தி விட்டது. சவாலான இன்றைய சந்தையில் மாருதி ஏன் இந்த முடிவை எடுத்தது என்பது பற்றியும், புதிய திட்டங்கள் பற்றியும், நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்து உள்ளதாவது:
* டீசல் இன்ஜின் கார்களின் தயாரிப்புகளை நிறுத்திவிட்டோம். டீசல் இன்ஜின், பெட்ரோல் இன்ஜினை விட சற்று அதிக மைலேஜ் தரும் என்பது உண்மை தான். ஆனால், பி.எஸ்., 6 அமலுக்கு வருவதற்கு முன், பெட்ரோல் காருக்கும், டீசல் காருக்குமான விலை வித்தியாசம், அதிகபட்சம் 90 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதுவே இப்போது, 1.50- லட்சமாகி விட்டது.
வித்தியாசம் இல்லை
மேலும் பெட்ரோலுக்கும், டீசலுக்குமான விலையிலும் பெரிய வித்தியாசம் இல்லை.டீசல் இன்ஜினுக்கு ஆகும் அதிக பராமரிப்பு செலவையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், டீசல் கார் வைத்துக் கொள்வதில், பெரிய லாபம் இல்லை. இதை கருதி தான், டீசல் இன்ஜின்களை முற்றிலும் நிறுத்திவிட்டோம்.
விற்பனை நிலவரத்தை பார்த்தாலே டீசல் கார்களின் நிலை புலப்படும். டீசலுக்கும், பெட்ரோலுக்கும் விலை வித்தியாசம் அதிகமாக இருந்த காலத்தில் விற்பனையாகும் கார்களில், 60 சதவீதம் டீசலாக இருக்கும். இப்போது இது, 18 சதவீதமாக மட்டுமே உள்ளது.சிறிய ரக கார்களில் அது, 0.3 சதவீதத்திற்கும் சற்று குறைவாகவும், செடான் ரக கார்களில், எட்டு சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது. பெரிய எஸ்.யு.வி., கார்களுக்கு மட்டும் தான், டீசல் இன்ஜினுக்கான தேவை இருக்கிறது.
* விட்டாரா ப்ரெஸ்ஸா கார் இன்ஜினை, 1.50 லிட்டராக மாற்றியுள்ளதால், 4 மீட்டருக்கும் குறைவான நீளம் உள்ள கார்களுக்கு கிடைக்கும் சலுகை நுகர்வோருக்கு கிடைக்காமல் போய்விடுமே என சிலர் கருதுகிறார்கள். உண்மை தான்; சலுகை கிடைக்காது.ஆனால், பெட்ரோல் இன்ஜினின் விலை டீசல் இன்ஜினை விட குறைவு என்பதால், பறிபோகும் சலுகைக்கு அது ஈடாகி விடுகிறது.
* போட்டி நிறுவனங்கள் கொடுக்கும் அளவுக்கு மாருதி அதிக வசதிகள் கொடுப்பதில்லை என்ற கருத்தும் சிலரிடம் இருக்கிறது. உதாரணமாக ப்ரெஸ்ஸா காரையே எடுத்துக்கொள்வோம். இந்த காரில் குறைந்தபட்சம் போட்டியாளர்களிடம் இல்லாத, 20 வசதிகள் இருக்கின்றன. இவற்றை நாங்கள் வெறும் வசதியாக பார்க்கவில்லை.
மின்சார கார்கள்
காருக்கு எப்படி இன்ஜின் முக்கியமான பாகமாக கருதுகிறோமோ, அதைப் போல நாங்கள் தரும் வசதிகளை, காருக்கு கண்டிப்பாகத் தேவைப்படும் பாகங்களாகவே கருதுகிறோம். எனவே அவற்றை விளம்பரப் படுத்துவதில்லை. அதனாலேயே நுகர்வோர் சிலர் மத்தியில் இத்தகைய எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.
* மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை, இன்றைய சூழலில் அவை பரவலாவது மிகவும் சிரமம். ஏனெனில், பேட்டரியின் விலை, காரின் விலையில், 55 சதவீதமாக உள்ளது. அதே நேரம் பேட்டரி சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. பேட்டரி தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் வந்து, அதன் விலை குறைய வேண்டும்; அல்லது, கடுமையான சட்டங்களால், தற்போது இருக்கும் எரிபொருள் இன்ஜின்களின் விலை அதிகரிக்க வேண்டும்.
சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும், அப்போது தான் மின்சார கார்களின் விற்பனை பரவலாகும். நிபுணர்களின் கணிப்புப்படி, அடுத்த, 10 ஆண்டுகளில் அது சாத்தியமில்லை. அடுத்த, 10 ஆண்டுகளில், 7 கோடி கார்கள் இந்தியாவில் விற்பனையாகும் என்றும்; அதில், 50 லட்சம் கார்கள் மட்டும் தான் மின்சார கார்களாக இருக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
எங்களை பொறுத்தவரை மின்சார கார்களை விட, மின் மயமாக்குதல் தான் சரியான வழி என நம்புகிறோம். மின் மயமாக்குதல் என்றால், எரிபொருளை சேமித்து, புகையை கட்டுப்படுத்தும், ஹைபிரிட் அம்சங்களை அறிமுகப்படுத்துவதாகும்.
* தற்போது கார்களை குத்தகைக்கு விடும் திட்டத்துக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் கார் குத்தகை சந்தையின் மதிப்பு ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் தான். ஆனால், அது வேகமாக வளர்ந்து வருகிறது. அதை கருத்தில் கொண்டு தான் குருகிராம், பெங்களூரு, ஐதராபாத், புனே ஆகிய ஊர்களில் சோதனை முறையில் குத்தகை திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.
சந்தா திட்டம்
நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, நாடு முழுதும் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த திட்டத்தை, ‘சந்தா திட்டம்’ என நாங்கள் அழைக்கிறோம், குத்தகை என குறிப்பிடுவதில்லை. அதே போல், கார் வாங்குவதை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தையும் கிட்டத் தட்ட முடித்துவிட்டோம்.
ஒருவர் கார் வாங்கும்போது, நிறுவனத்தின், 26 இடங்கள், துறைகள், நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. இது அனைத்து கார் நிறுவனங்களிலும் உண்டு. இவற்றை, தொடுமுனைகள் என்பர்.ஏற்கனவே இவற்றில், 21 தொடுமுனைகளை டிஜிட்டல் மயமாக்கி விட்டோம். இப்போது, இ-பைனான்ஸ் திட்டத்தையும் அறிமுகப்படுத்த உள்ளோம்.இதனால் கார் கடன் வாங்குவதும் முற்றிலும் டிஜிட்டல் மய மாகிவிடும். இதன் மூலம், 26 தொடுமுனைகளில், 24 தொடுமுனைகள் முற்றிலும் டிஜிட்டலாகிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|