பதிவு செய்த நாள்
29 நவ2020
22:21
குறைந்த வட்டி விகித சூழலில், கைவசம் உள்ள சேமிப்பு பணத்தில், அதிக பலன் தரக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலிப்பது அவசியம்.
கடனுக்கான வட்டி விகிதம், இது வரை இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. அதே நேரத்தில், வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்கு அளிக்கும் வட்டி விகித பலனும் குறைந்திருக்கிறது. சேமிப்பு கணக்கிற்கு கடந்த ஆண்டு, 4 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொது துறை வங்கிகள், 3 சதவீதத்திற்கு குறைவான வட்டி வழங்குகின்றன.
வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக, வைப்பு நிதி முதலீட்டை நாடுபவர்கள் மத்தியில், இதன் பலன் போதுமானதா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. இந்த பின்னணியில், அதிக பலன் அளிக்கும் முதலீடு வாய்ப்புகளை பரிசீலிக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது.
சேமிப்பு கணக்கு
பொதுவாக, பணத்தை அப்படியே வைத்திருப்பதற்கு பதில், அதன் மூலம் வருமானம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்வதே சரியானது என கருதப்படுகிறது. கைவசம் உள்ள பணத்தை சேமிப்பு கணக்கில் போட்டு வைப்பது நல்லது என்றாலும், இதற்கான வட்டி விகிதம் குறைவு எனும் போது, பலனும் குறைவாகவே இருக்கும். அதிலும், பணவீக்கத்தின் தாக்கத்தை கருத்தில் கொள்ளும் போது, நிதி இலக்குகளை அடைவதிலும் சிக்கல் ஏற்படலாம்.
எனவே, சேமிப்பு கணக்கில் தேவைக்கு அதிகமான பணத்தை வைத்திருப்பதை விட, முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும். நடுத்தர வர்க்கத்தினர், அவசர தேவைக்கான தொகையை உடனடியாக எடுக்கக்கூடிய வகையில் சேமிப்பு கணக்கில் போட்டு வைக்கின்றனர். இது பாதுகாப்பு உணர்வை அளித்தாலும், கையில் பணம் இருக்கும் உணர்வே, எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் எனும் உணர்வை குறைத்துவிடும் என்றும் கருதப்படுகிறது.
எனவே, அவசர தேவைக்கான தொகையை, ‘லிக்விட் பண்ட் ரக மியூச்சுவல் பண்ட்’களில் முதலீடு செய்யலாம். இவை, சேமிப்பு கணக்கை விட அதிக பலன் அளிப்பதோடு, தேவைப்படும் நேரத்தில் பணத்தை விலக்கிக் கொள்ளும் வாய்ப்பையும் அளிக்கின்றன.சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தில், எந்த அளவுக்கான தொகை உடனடியாக தேவைப்படலாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
வைப்பு நிதி
எஞ்சியுள்ள தொகையை அப்படியே வைத்திருக்காமல், நிதி இலக்குகளை நிறைவேற்றும் வகையில் முதலீடு செய்யலாம். அடுத்த ஒன்று முதல் மூன்றாண்டுகளில் தேவைப்படும் தொகையை, குறுகிய கால முதலீடுகளில் போட்டு வைக்கலாம். எஞ்சிய தொகையை நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம். குறுகிய கால முதலீட்டிற்கும், கடன்சார் மியூச்சுவல் பண்ட்களை பரிசீலிக்கலாம். எனினும், இவற்றின் இடர் அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பானது எனும் காரணத்திற்காக வைப்பு நிதி அதிகம் நாடப்படுகிறது. குறிப்பாக, நிரந்தர வருமான பலன் விரும்பும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் மத்தியில், வைப்பு நிதி பிரபலமாக உள்ளது. எனினும், தற்போது வழங்கப்படும் குறைந்த வட்டி விகிதத்தால், இவற்றின் பலன் குறைவாகவே இருக்கும். இந்நிலையில், மாற்று வாய்ப்புகளை பரிசீலிக்கலாம். வைப்பு நிதிகளுக்கு ஒரு சில வங்கிகள் அதிக வட்டி விகிதம் அளிக்கின்றன என்றாலும், அவற்றின் இடர் அம்சத்தையும் பரிசீலிக்க வேண்டும். சேமித்து வைக்கும் பணம், உரிய பலன் அளிக்கும் வகையில் முதலீட்டு வழிகளை நாட வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|