பதிவு செய்த நாள்
06 டிச2020
21:41
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு சந்திப்புக்குப் பின்னர், பல அறிவிப்புகளை கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்பதோடு, 24 மணிநேர, ஆர்.டி.ஜி.எஸ். வசதி, ‘கான்டக்ட்லெஸ்’ எனும், தொடுதலில்லா டெபிட், கிரெடிட் கார்டுகளின் பரிவர்த்தனை வரம்பை, 2 ஆயிரத்திலிருந்து, 5 ஆயிரம் ரூபாய்க்கு உயர்த்துதல் ஆகியவற்றைச் செய்தார்.
இதென்ன தொடுதலில்லா டெபிட், கிரெடிட் கார்டு?
கொரோனா கொள்ளைநோய் ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமே, தொடர்பில்லா பரிவர்த்தனைகள். கடன் மற்றும் பற்று அட்டையைப் பயன்படுத்துவோரது எண்ணிக்கை, இக்காலகட்டத்தில் பெருமளவு உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம், பயம்.
எச்சரிக்கை உணர்வு
பலரும், பொருட்களை வாங்கும்போது, கடன் அட்டையைப் பயன்படுத்தினால், அவர்கள், ‘பாயின்ட் ஆப் சேல்’ எனும் ஸ்வைப் இயந்திரத்தில், ‘பின்’ எண்ணைப் பதிய வேண்டும். அதற்கு பட்டன்களை தொட வேண்டும்.கொரோனா பயத்தினால், தொடாமல் பரிவர்த்தனை செய்ய முடியுமா என்ற எச்சரிக்கை உணர்வு பெருகியது. அப்போதுதான், ‘தொடுதலில்லா பரிவர்த்தனை’ முறைக்கு மவுசு கூடியது.
ஏற்கனவே இந்த வசதி இந்தியாவில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த, 18 முதல் 20 மாதங்களில், தொடுதலில்லா அட்டைகளின் பயன்பாடு, 15 மடங்கு உயர்ந்துள்ளது. இது நாள் வரை, இப்படி தொடுதலில்லா கடன் மற்றும் பற்று அட்டையின் மூலம், 2,000 ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடிந்தது. ஜனவரி, 1, 2021 முதல், இந்த வரம்பு, 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.நம் நாட்டில் டிஜிட்டல்பரிவர்த்தனைகளின் அளவும், அதன் மீதான நம்பிக்கையும் காலூன்றத் தொடங்கியிருப்பதற்கான முகாந்திரமாக இதனைப் பார்க்கலாம்.
‘சிப்’போடு
உங்கள் டெபிட் அல்லதுகிரெடிட் கார்டில் இந்த வசதி இருக்கிறதா? இதனைத் தெரிந்துக் கொள்ள, அட்டையின் மீது ஒலியலைகளைப் போன்ற ஒரு குறியீடு இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால், உங்கள் அட்டை, தொடர்பில்லா பரிவர்த்தனைக்கான, ‘சிப்’போடு வந்திருக்கிறது என்று அர்த்தம்.
எல்லா கடன், பற்று அட்டைகளிலும் இந்த வசதி இருக்காது. நீங்கள் குறிப்பிட்டுக் கேட்டு, இந்த வகை அட்டையைப் பெறவேண்டும். கடந்த ஓராண்டுக்குள்வாங்கப்பட்ட அட்டையாக இருந்தால், உங்கள் வங்கி இத்தகையசேவையை வழங்குமானால், நீங்கள் இந்தச் சேவையைப் பெற முடியும்.
இது எப்படி வேலை செய்யும்? பாதுகாப்பானதா?திருடுபோனால் என்ன செய்வது என்றெல்லாம் தயக்கம் காணப்படுவது இயற்கை தான். பொருட்களை வாங்கும்போது, உங்கள் தொடுதலில்லா அட்டையை, அந்நிறுவனத்தின் ஸ்வைப் இயந்திரத்தின் அருகில் காண்பித்தால் போதும்.
ரகசிய எண்
உங்கள் அட்டையில் உள்ள ‘சிப்’பை ஸ்வைப் இயந்திரம் படித்து, உடனடியாக உரிய தொகையை எடுத்துக் கொள்ளும்.இதுநாள் வரை அந்த ஸ்வைப் இயந்திரத்தில் உங்கள் அட்டையைத் தேய்க்க வேண்டும், ‘பின்’ எண்ணை பதிய வேண்டும். அதற்கு உங்கள் அட்டையை இன்னொரு நபரிடம் கொடுப்பீர்கள். அந்த ஸ்வைப் இயந்திரத்தில் உங்கள் அட்டையின் ரகசிய எண் உட்பட பல விபரங்கள் ஒற்றியெடுக்கப்படலாம். கடன் அல்லது பற்று அட்டை விபரங்கள் முறைகேடாக திருடப்படுவதற்கு இந்த நடைமுறையே காரணமான சம்பவங்களும் உண்டு.
தொடர்பில்லா அட்டை விஷயத்தில் இது எதுவும் இல்லை. உங்கள் கையைவிட்டு அட்டை வெளியே போகாது. அட்டையை, ஸ்வைப் இயந்திரத்தின் அருகே காண்பித்தாலே போதுமானது. பணம் எடுத்துக்கொள்ளப்பட்டதற்கான ‘பீப்’ ஒலியோ, டிக் மார்க்கோ, பச்சை விளக்கோ எரிந்து, பரிவர்த்தனை முடிந்ததைத்தெரிவிக்கும். ‘பின்’ எண்ணைப் பதிய வேண்டிய அவசியம் இல்லை.
சந்தேகம்
நவீன ஸ்வைப் இயந்திரங்கள் இல்லாத கடையிலும், தொடுதலில்லா அட்டையைப் பயன் படுத்த முடியும்.ஸ்வைப் இயந்திரம்அருகே எவரேனும் திருடர் இருப்பாரானால், உங்கள் பணத்தை, ‘டிஜிட்டல் பிக்பாக்கெட்’ அடித்துவிட முடியுமே என்றொரு ஐயம் எழுப்பப்பட்டது. ஸ்வைப் இயந்திரத்தில் இருந்து, 4 சென்டிமீட்டருக்குள் இருந்தால் மட்டுமே, அட்டை விவரங்களை எடுக்க முடியும். அப்படி நடக்க சாத்தியமே இல்லை.மேலும், அட்டை விபரங்களை, ‘ஸ்கிம்’ செய்து எடுத்துவிட முடியும் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டது.அட்டையை நீங்கள் தான் பயன்படுத்தப் போகிறீர்கள். அதை அடுத்தவரிடம் கொடுக்காதவரை ஒரு பிரச்னையும் இல்லை.
திருடு போகாது
இத்தகைய தொடுதலில்லா அட்டைகளில் பல்வேறு பாதுகாப்பு அடுக்குகள் உள்ளன. அதனாலும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடு போகாது.ஒரே ஒரு பிரச்னை மட்டும் உண்டு. அட்டையைத் தொலைத்துவிடக் கூடாது. அப்படி நேருமானால், தொடுதலில்லா அட்டையை வைத்துக்கொண்டு, திருடர்கள் பல பரிவர்த்தனைகளைச் செய்துவிட முடியும். அட்டை தொலைந்து போனால், உடனடியாக, வங்கியை அழைத்து, அந்த அட்டையை, ‘பிளாக்’ செய்வது ஒன்றே வழி.அவ்வப்போது உங்கள்கடன் அல்லது பற்று அட்டை பரிவர்த்தனைகளுக்கான வங்கிக் கணக்கைக் கண்காணித்து வாருங்கள்.
உஷார்
சந்தேகப்படும்படியான குறுஞ்செய்திகள் வருமானால், உடனே உஷாராக இருங்கள். இந்தியாவில் பற்று அல்லது கடன் அட்டையில், 2 ஆயிரம் ரூபாய்க்குள் செலவு செய்வோர், 60 சதவீதம் பேர். மீதியுள்ளோர் தான் பெரிய தொகையை இத்தகைய அட்டைகளின் மூலம் செய்கின்றனர். தற்போது இந்த வரம்பு உயர்த்தப்பட்டு இருப்பதன் மூலம், நாம் கொஞ்சம் கூடுதலாக செலவு செய்ய முடியும், தேவையில்லாமல் ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டு போகவேண்டாம், எந்த இயந்திரத்தையும் தொடாமல்பரிவர்த்தனையை முடித்துக் கொள்ளலாம்.
தொடுதலில்லா அட்டை
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் சிறு செலவுகளில், 90 சதவீதத்துக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளில், தொடுதலில்லா அட்டைகள் தான் பயன்படுகின்றன. பிரிட்டனில், ரொக்கமாக செலவு செய்யப்படும் தொகையைவிட, தொடுதலில்லா அட்டைகள் வழியாக மேற்கொள்ளப்படும் செலவு அதிகம்.
‘டிஜிட்டல் பரிவர்த்தனை’
இந்தியாவில் நாம் படிப்படியாக, ‘டிஜிட்டல்முதிர்ச்சி’ அடைந்து வருகிறோம். 2021க்குள் நம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 15 சதவீத அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து பணியாற்றுகிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் தொடுதலில்லா அட்டைகளின் பயன்பாடு பெருகி வருகிறது.
தற்போது சக்திகாந்த தாஸ், தொடுதலில்லா அட்டையின் செலவு வரம்பை உயர்த்தி இருப்பதே, நாம் இந்தத் திசையில் சரியான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறோம் என்பதற்கான அத்தாட்சி ஆகும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|