பதிவு செய்த நாள்
24 ஜன2021
21:50
இனிமேல் நீங்கள் தாறுமாறாக வாகனம் ஓட்டினால், காவல்துறையிடம் அபராதம் மட்டும் கட்டமாட்டீர்கள்; கூடுதலாக, காப்பீட்டு பிரீமியமும் கட்டப் போகிறீர்கள். உங்களுடைய ஒவ்வொரு விதிமீறலும், காப்பீட்டு நிறுவனங்களைச் செழிப்படைய வைக்கப் போகின்றன.
இது என்ன புதுக் கதை? ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,’ எனும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், மோட்டார் வாகன விதிமீறல்களை, காப்பீட்டு பிரீமியத்தோடு இணைப்பதற்கான பரிந்துரைகளை வழங்கச் சொல்லி, ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு அளித்திருக்கும் பரிந்துரைகள் தான் தற்போது நம் கவனத்தைக் கவர்கிறது.
அதாவது, மோட்டார் காப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படும்போது, போக்குவரத்து விதிமீறல்கள் ஏதேனும் இருந்தால், அதற்காகவும் தண்டம் அழவேண்டும். இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனமாக இருந்தால், 750 ரூபாய் வரையும், நான்கு சக்கர வாகனமாக இருந்தால் 1,500 ரூபாய் வரையும் கூடுதல் பிரீமியம் தொகை வசூலிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது இக்குழு.
இதற்காக, ‘ஐ.ஐ.பி.,’ எனும், இந்திய காப்பீட்டுத் தகவல் துறை, பல்வேறு மாநில காவல்துறை யோடும், தேசிய தகவல் ஆணையத்தோடும் இணைந்து, வாகனங்களின் விதிமீறல் தகவல் களைத் திரட்டும். பின்னர், ஒவ்வொரு விதிமீறலுக்கும் ஒரு குறிப்பிட்ட புள்ளி வழங்கப்படும். குடித்துவிட்டு ஓட்டினால், 100 புள்ளிகள்; அபாயகரமாக ஓட்டினால், 90 புள்ளிகள்; காவல்துறையை மதிக்கவில்லையென்றால், 90 புள்ளிகள் என புள்ளிகள் வழங்கப்படும். அதிவேகத்தில் ஓட்டினால், 80 புள்ளிகள்; ஓட்டுனர் உரிமமோ, காப்பீடோ இல்லையென்றால், 70; தவறான பாதையில் ஓட்டினால், 60; அபாயகரமான சரக்குகளை ஏற்றிச் சென்றால், 50 புள்ளிகள் வழங்கப்படும்.
இதுமட்டுமல்ல, சாலை சமிக்ஞை விளக்குகளை மீறினால், 50; அதிக சுமை ஏற்றிச் சென்றால், 40; வாகனத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்திருந்தால்,20; தவறான பார்க்கிங் செய்திருந்தால், 10 என்று புள்ளிகள் வழங்கப்படும்.இரண்டு, மூன்று விதிமீறல்கள் இருந்தால், அவை அனைத்தும் கூட்டப்பட்டு, பல்வேறு அடுக்குகளின் படி, பிரீமியம் தொகை கூடுதலாக வசூலிக்கப்படும்.
காப்பீட்டுத் தொகை கணக்கிடப்படும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளின் விதிமீறல்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.பாதுகாப்பான, பொறுப்பான ஓட்டுனர்களை உருவாக்குவதற்கு, அவர்கள் தலையில் சுமையை ஏற்றினால் திருந்துவார்கள் என்று கருதுகிறது போலிருக்கிறது, காப்பீட்டு ஆணையம்.
உண்மையில், இத்தகைய நடைமுறை பல்வேறு வளர்ந்த நாடுகளில் தற்போது அமலில் உள்ளது. அங்கே கூடுதலாக ஒரு விஷயமும் நடைபெறும். ஒவ்வொரு விதிமீறலுக்குப் பின்னரும், அவர் தொடர்ந்து ‘பாதுகாப்பற்ற ஓட்டுனர்’ என்ற முத்திரை குத்தப்பெறுவார். அதனால், காப்பீட்டு பிரிமியம் மேன்மேலும் உயர்ந்துகொண்டே போகும்.அந்தத் திட்டத்தை அப்படியே இங்கே இறக்குமதி செய்துள்ள இந்த அலுவல் குழு, முக்கியமான சில கேள்விகளைக் கேட்கத் தவறிவிட்டது.
வெளிநாடுகளில் வாகன சொந்தக்காரர்களே பெரும்பாலும் வாகனத்தை ஓட்டிச் செல்வார்கள். காரணம் ஓட்டுனர் சம்பளம் அதிகம். இருப்பார்கள். இங்கேயோ, மாதச் சம்பளத்துக்கும், நாள் சம்பளத்துக்கும் அல்லாடும் ஓட்டுனர்கள் என்று தனி சமுதாயமே உள்ளது. இதில் யார் தவறுக்கு, யார் கூடுதலாக பிரீமியம் கட்டுவது?
விதிமீறலுக்கு வருவோம். முதலில், எத்தனை நகரச் சாலைகள் ஒழுங்காக, குண்டும் குழியும் இல்லாமல் இருக்கின்றன? எத்தனை இடங்களில் போக்குவரத்து விளக்குகள் சரியாக ஒளிர்கின்றன? எத்தனை ஆயிரம் சாலைகள், நான்கு வழிப் பாதைகளாக உள்ளன? வெளிநாடுகளில், சாலைகள் மிகத் தரமாக உள்ளன. அத்தகைய சாலைகளின் விதிகளை மீறினால், அபராதம் கட்டு என்று தண்டனை கொடுப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. இங்கே அந்த நியாயம் பொருந்துமா? அதுவே பொருந்தாத போது, எப்படி காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்த முடியும்?
மக்களை ஒழுங்காக இரு; கட்டுப்பாடுகளையும், சட்ட திட்டங்களையும் பின்பற்று என்று மட்டுமே அரசாங்கங்கள் போதித்துக்கொண்டு இருக்கின்றனவே தவிர, தான் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றியுள்ளனவா?உண்மையில், மோட்டார் வாகன பிரீமியத்தை காப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்திக்கொள்ள கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பாகத் தான் இந்தப் பரிந்துரையைப் பார்க்க வேண்டியுள்ளது.
விதிமீறலுக்கான கூடுதல் பிரீமியம் பற்றிப் பேசும் இந்த அறிக்கை, காலம் முழுக்க ஒரு விபத்தும் இல்லாமல், விதிமீறலும் இல்லாமல் ஒழுக்கமாக ஓட்டிக்கொண்டு இருக்கும் நபர்களுக்கு, காப்பீட்டு பிரீமியத்தில் ஏதேனும் சலுகைகள் பற்றி தெரிவித்துள்ளதா? இல்லையே!வயிற்றில் அடித்தால், வாகன ஓட்டிகள் பொறுப்புள்ளவர்களாக மாறுவார்கள் என்று நினைத்தால், அது தவறு. தேய்ந்து போன டயரில், ஆணியைக் கொண்டு குத்துவது போன்றே அது அமையும்!
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|