பதிவு செய்த நாள்
29 ஜன2021
02:09
மும்பை:கடந்த ஆண்டில், இந்தியாவில், தங்கத்தின் தேவை, 35.34 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டிருப்பதாகவும், நடப்பு ஆண்டில், தேவை மீண்டும் அதிகரிக்கும் என்று கருதுவதாகவும், உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
உலகளவிலான தங்கத்தின் தேவையும் கடந்த ஆண்டில், 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இத்தகைய சூழலில், இறக்குமதி வரியை குறைக்காவிட்டால், கடத்தல் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
கவுன்சிலின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில், கொரோனா காரணமான ஊரடங்குகள், இதுவரை இல்லாத அளவிலான விலை அதிகரிப்பு, ஆகிய காரணங்களால் தங்கத்தின் தேவை, கடந்த ஆண்டில், 446.4 டன் ஆக குறைந்து விட்டது. கடந்த, 2019ல், இது, 690.4 டன் ஆக இது இருந்தது.
ஊரடங்கின் காரணமாக, ஆபரணங்களின் தேவையும், 42 சதவீதம் குறைந்துள்ளது. ஆபரணங்களின் தேவை குறைந்ததன் தொடர்ச்சியாக, நாட்டின் மொத்த தங்க இறக்குமதியும், 47 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
கடந்த 2019ல், 646.8 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டில், 344.2 டன் மட்டுமே இறக்குமதி ஆகியுள்ளது.
இருப்பினும், தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, இயல்பான நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. கடந்த காலாண்டில் தங்கத்தின் இறக்குமதி, 19 சதவீதம் அதிகரித்துள்ளது இதற்கு சாட்சி.
சந்தை குறியீடுகள் மிகவும் அதிகரித்திருப்பது, வட்டி விகிதம் குறைந்துள்ளது ஆகிய காரணங்களால், தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரிக்க துவங்கி இருக்கிறது.
அடுத்த சில ஆண்டுகளுக்கு, தங்கத்தின் தேவையில், வலுவான முன்னேற்றத்தை காணமுடியும். இது போன்ற சூழலில், தங்கத்தின் இறக்குமதிக்கு அதிக வரி வசூலிப்பது, கடத்தலை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது. எனவே, இறக்குமதி வரியை குறைக்க வேண்டியது அவசியம்.
நடப்பு ஆண்டின் பிற்பாதியில், தேவை அதிகரிப்பு தொடரும்பட்சத்தில், இறக்குமதியும் அதிகரித்து, இயல்புக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|