பதிவு செய்த நாள்
10 ஏப்2021
19:27
கடந்த வாரம், ஒரு வணிக நாளிதழின், 6 பக்க இணைப்பு முழுதும் ஒரே விளம்பரம். அடகு வைக்கப்பட்ட நகைகள் அத்தனையும் ஏலத்துக்கு வந்துள்ள விபரத்தைச் சொல்லும் விளம்பரம் அது. இதேபோன்ற விளம்பரம் ஒன்று, 20 நாட்களுக்கு முன்பும் வெளியானது.
கால் சவரன், அரை சவரன் முதற்கொண்டு, 75 சவரன், 100 சவரன் நகை வரை கூட ஏலத்துக்கு வந்துவிட்டன. உரிய தொகை கட்டப்படாமல், ஏன் இவ்வளவு நகைகள் மூழ்கிப் போயின என்று நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்தோரிடம் விசாரித்தோம்.
அவர்கள் தெரிவித்ததாவது:நகைக்கடனில், ஒவ்வொரு மாதமும் வட்டி கட்டவேண்டும். அதுபோல் ஐந்து மாதங்கள் வரை வட்டி கட்டவில்லை என்றால், அரசுத் துறை வங்கிகள், அந்த நகைகளை ஏலத்துக்குக் கொண்டு வந்துவிடும். தனியார் நிதி, பண்டுகள் போன்றவை, 12 மாதங்கள் வரை காத்திருக்கும். அதற்கு மேல், 3 மாதங்கள் வரை ‘கிரேஸ்’ அவகாசம் கொடுக்கப்படும். இதற்குள் பலமுறை, நகை உரிமையாளருக்கு விதவிதமான கடிதங்கள், அழைப்புகள் அனுப்பப்படும். வட்டி செலுத்த வேண்டும் என்பது நினைவூட்டப்படும்.
அப்படியும் வட்டியைச் செலுத்தவில்லை என்றால் தான், நகைகள் ஏலத்துக்கு வரும். அதாவது, 15 மாத காத்திருப்புக்கு பின்னரே நகைகள் ஏலத்துக்கு வரும். கொரோனா ஏற்படுவதற்கு முன்பிருந்தே பலரும் தங்களிடம் இருந்த சிறு சிறு உருப்படிகளைக் கூட அடகு வைத்துவிட்டனர். தங்கத்தின் விலை உயர்ந்ததால், அடகு தொகையும் அதிகமாக கிடைத்தது. அன்றைக்கு அந்தப் பணம் தேவைப்பட்டதால், கூடுதலாக ரொக்கத்தை வாங்கிவிட்டனர்.கொரோனா காலத்தில் பலரால் அசலை மட்டுமல்ல, வட்டியையும் செலுத்த முடியவில்லை. அதுதான் இப்போது ஏலத்துக்கு வந்து நிற்கிறது.
பெரிய வங்கிகள், கடிதங்கள் அனுப்புவார்களே அன்றி, தொடர்ந்து வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு, வட்டியையோ, அசலையோ கட்டுவதற்கு வலியுறுத்தமாட்டார்கள். அதனால் தான், நகைக் கடன் மூழ்கிப் போய்விடுகின்றன. இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், இது தான் சமூகத்தின் தற்போதைய எதார்த்தம். ஏழை, எளியவர்கள் முதல் தள்ளுவண்டிக்காரர், சிறு கடைக்காரர் வரை எவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீளவில்லை என்பதையே இந்த ஏலத்துக்கு வரும் நகைகள் சொல்கின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|