பதிவு செய்த நாள்
18 ஏப்2021
20:51
ஒவ்வொருவரும் தங்கள் எதிர்கால நிதி தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக முதலீடு செய்ய வேண்டும். அதற்கேற்ப பல வகையான முதலீடுகளும் இருக்கின்றன. சம பங்குகள் சார்ந்த முதலீடு அதிக பலன் தரக்கூடியது என்றாலும், இடர் கொண்டவை மற்றும் இவற்றின் பலனில் ஏற்ற இறக்கம் உண்டு. மாறாக, குறைவான இடர் அம்சத்துடன் நிர்ணயிக்கப்பட்ட பலனை அளிக்கும் முதலீட்டு வாய்ப்புகளும் இருக்கின்றன. சராசரி முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இந்த முதலீடுகள் பற்றி பார்க்கலாம்.
வைப்பு நிதிகள்:
பெரும்பாலான சராசரி முதலீட்டாளர்களால் நாடப்படும் முதலீட்டு வாய்ப்பாக, வங்கி வைப்பு நிதி அமைகிறது. இவற்றில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முதலீடு செய்து, குறிப்பிட்ட வட்டி விகித பலனை பெறலாம். வங்கிகள் தவிர, வர்த்தக நிறுவனங்களும் வைப்பு நிதி வாய்ப்பை அளிக்கின்றன. இவற்றில் பலனும், இடரும் அதிகம்.
டெப்ட் பண்ட்:
மியூச்சுவல் பண்ட் திட்டமான, டெப்ட் பண்ட்கள் கடன்சார் நிதிகளாகும். இவை, அரசு மற்றும் வர்த்தக நிறுவனங்களின் நிரந்தர வருமானம் கொண்ட பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து, அதன் பலனை பிரித்தளிக்கின்றன. சம பங்கு நிதிகளை விட இடர் குறைந்த இந்த நிதிகள், வைப்பு நிதியை விட அதிக பலன் அளிக்கக் கூடியவை.
அரசு பத்திரங்கள்:
‘ஜி-செக்’ எனப்படும் அரசு பத்திரங்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் வெளியிடப்படுபவை. கருவூல பில்கள் உள்ளிட்ட நான்கு வகையாக வெளியிடப்படுகின்றன. பல்வேறு கால அளவிலான முதிர்வு கொண்டவை. நிலையான பலன் அளிப்பதோடு, அசலுக்கான அரசின் பாதுகாப்பு கொண்டவை.
பத்திரங்கள்:
அரசு பத்திரங்கள் தவிர, பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் பத்திரங்களை வெளியிடுகின்றன. இந்த வகை பத்திரங்கள், அரசு பத்திரங்களை விட அதிக வட்டி விகித பலனை அளிக்கின்றன. ஆனால், அரசு பத்திரங்களில் பாதுகாப்பு கிடையாது. அசல் திரும்பாமல் போகும் இடர் உண்டு.
சரியான தேர்வு:
முதலீட்டாளர்கள் தங்களின் நிதி இலக்குகளை பரிசீலித்து, இந்த முதலீடுகளில் இருந்து பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம். முதலீடு தேவை, முதலீடு செலவு, வரி அம்சம் மற்றும் பணமாக்கும் அம்சம் ஆகியவற்றை மனதில் கொண்டு, தங்கள் முதலீடு தொகுப்பின் தன்மைக்கேற்ப தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|