பதிவு செய்த நாள்
19 ஜூன்2021
19:18
புதுடில்லி:இந்தியாவில் புதிதாக, ‘சமூக பங்குச் சந்தை’ ஒன்றை அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இத்தகைய சந்தையை ஏற்படுத்துவது குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடுவை, ஜூலை 20ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி. சமூக பங்குச் சந்தை என்பது, இந்தியாவில் புதிய முயற்சியாகும்.
நம் நாட்டில் இப்படி ஒரு புதிய பங்குச் சந்தையை அமைப்பது குறித்த அறிவிப்பை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2019 – 20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் போது வெளியிட்டார்.உதவி தேவையில்லை தன்னார்வ மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான நிதியை திரட்டி கொள்வதற்கான ஒரு சந்தை தான், இந்த சமூக பங்குச் சந்தை. இத்தகைய நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதற்கான ஒரு பிரத்யேக சந்தையாகும் இது.
சமூக நிறுவனங்கள் என்பவை, சமூகத்தில் எழும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையில் செயல்படும் இழப்புகளற்ற, டிவிடெண்டு வழங்காத நிறுவனங்கள் ஆகும்.இந்த பங்குச் சந்தை, செபியின் கட்டுப்பாட்டில் இயங்கும்.சமூக நிறுவனங்கள், இந்த சந்தையில் பங்குகள், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் பண்டு யூனிட்டுகள் ஆகியவற்றை வெளியிட்டு நிதி திரட்டிக் கொள்ளலாம்.
இந்த சந்தை, சமூக நலத் திட்டங்களுக்கான, புதிய மற்றும் மலிவான நிதி வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் வாயிலாக, வெளிநாட்டு உதவிகளை இந்தியா எதிர்பார்ப்பதும் குறையும்.
புதிய முயற்சி
இது போன்ற காரணங்களால், இந்தியாவிலும் இத்தகைய சந்தையை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இது குறித்து மக்கள் தங்கள் கருத்தை தெரிவிப்பதற் கான கால அவகாசத்தை, ஜூலை 20ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது, செபி.
இதற்கு முன் கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக இருந்தது.இந்த சந்தையில் பட்டியலிட விரும்பும் அமைப்புகள் அல்லது நிறுவனங்களுக்கான தகுதி குறித்த வரையறையும் அறுதியிடப்பட உள்ளது.வறுமை ஒழிப்பு, பட்டினி ஒழிப்பு, கல்வி உதவி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பாலின சமத்துவம், பெண்களுக்கான அதிகாரம் என, 15 பகுதிகளில் செயல்படும் நிறுவனங்கள் தகுதி வாய்ந்தவையாக கருதப்படும்.
இந்தியாவில் இந்த புதிய முயற்சி எவ்வளவு துாரம் வெற்றி பெறும்; பலன் தரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மூலதனத்தை திரட்ட அனுமதி
இத்தகைய சமூக பங்கு சந்தைகள் ஏற்கனவே சிங்கப்பூர், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.இந்த நாடுகள் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் செயல்படும் நிறுவனங்கள், இந்த சந்தையின் வாயிலாக மூலதனத்தை திரட்ட அனுமதிக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|