பதிவு செய்த நாள்
11 ஜூலை2021
20:17
நான் ஒரு மாற்றுத்திறனாளி. ஓய்வு ஊதிய பணத்தை எந்த வகையில் முதலீடு செய்யலாம்; கூடுதல் பயன் பெறலாம்?
ரங்கசாமி, வாட்ஸ் ஆப்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகியவை மூத்த குடிமக்களுக்கு வழங்கிய, கூடுதல் வட்டியோடு கூடிய சிறப்பு சேமிப்பு திட்டத்தை, செப்டம்பர் 30 வரை நீட்டித்திருக்கின்றன. அஞ்சலக சேமிப்பில், ஐந்தாண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், ஐந்தாண்டு மாதாந்திர வருவாய் கணக்கு ஆகியவற்றில் வழக்கத்தைவிட சற்றே கூடுதலான வட்டி கிடைக்கின்றன. இவற்றை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
பிரதமரது விவசாய நிதி உதவியான, 6,000 ரூபாயில், இதுவரை 5 தவணைகள் வந்துள்ளன. தற்பொழுது வங்கி கணக்கை முடக்கி, 5 தவணை தொகையும் திரும்ப செலுத்த சொல்கிறது வங்கி. என்னிடம் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளன; யாரிடம் முறையிடுவது?
க.சரவணன், வாட்ஸ் ஆப்.
‘பி.எம்., கிசான்’ மாநில நோடல் அலுவலருக்கு, diragri@tn.nic.in என்ற மின்னஞ்சலில் தொடர்புகொண்டு விபரம் தெரிவியுங்கள். அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 1155 266ல் அழைத்து, விபரம் கேளுங்கள்.
கொரோனாவால் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. ஒரே மாதத்தில் பலமுறைகாசோலையை டிபாசிட் செய்து, அதற்கு அபராத தொகை விதிக்கிறது வங்கி. இதுபோல் பலமுறை டிபாசிட் செய்யலாமா?
ராஜ பிரபு, மதுரை
-.காசோலை செல்லுபடியாகும் காலம் வரை, அதை வங்கி டிபாசிட் செய்து கொண்டே இருக்கலாம். காசோலை காசாகாமல், திரும்புவது என்பது ஒரு கிரிமினல் வழக்குக்கு இட்டுச் செல்லும். உடனடியாக வங்கிக்கு சென்று, கடனை திருப்பியளிப்பதற்கான கால அவகாசம் கேளுங்கள். கடனை மறுசீரமைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
என்னிடம் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் உள்ளன; என்ன செய்வது?
ராஜகோபால், மின்னஞ்சல்.
இந்திய ரிசர்வ் வங்கி, இந்த பங்குகளின் மதிப்பை பூஜ்ஜியம் என்று அறிவித்துவிட்டது. பங்குச் சந்தைகளில் இருந்தும் விலக்கப்பட்டுவிட்டன; உங்களுக்கு நஷ்டம் தான்.
‘பிரித்வி இன்பர்மேஷன் சொல்யூஷன் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் பங்குகள், இப்பொழுது சந்தையில் பட்டியலிடப்படவில்லை. அவற்றை நான் எவ்வாறு விற்பனை செய்வது?
அ.கல்யாணசுந்தரம், மின்னஞ்சல்.
இதுவும் பங்குச் சந்தையில் இருந்து நீக்கப்பட்ட பங்கு தான்; விற்பனை செய்வது கஷ்டம்.
எவ்வித அத்தாட்சியும் இல்லாமல், 2.5 லட்சம் ரூபாய் சிறு கடனை, வங்கி மேலாளர் அளித்திருக்கிறார். 5 லட்சம் கடன் தர, ஆயிரம் உத்தரவாதம் கேட்கிறார். கடை வங்கிக்கு அருகில் தான் உள்ளது; எப்படி கடன் வாங்குவது?
கு.சாரங்கதாஸ், பெரும்பாக்கம்.
வங்கிகளுக்குள்ளேயே, அதன் வணிகத்தை பொறுத்து, அடுக்குகள் உள்ளன. உங்கள் பகுதியில் இயங்கும் வங்கியின் மேலாளருக்கு, அவரது சொந்த அதிகாரத்துக்குட்பட்டு, இவ்வளவு தான் வழங்க முடியும் என்று இருக்கும். கூடுதல் தொகை கேட்டால், உத்தரவாதங்கள், அடமானங்கள் கோரத்தான் செய்வார். ஒன்று, வேறு வங்கியை அணுகவும் அல்லது அருகில் உள்ள பெரிய வங்கி கிளையை அணுகவும்.
என்னிடம் சில குறிப்பிட்ட வங்கி பங்குகள் உள்ளன. பல்வேறு வங்கிகளின் இணைப்பு பற்றி செய்தி அடிபடுகிறது. இவற்றை விற்றுவிடலாமா?
எம்.லட்சுமணன், மின்னஞ்சல்.
பயத்தால் எப்போதும் பங்குகளை விற்பனை செய்யாதீர்கள். உங்களுக்கு லாபமாக இருந்தால், பங்குகளை விற்பனை செய்யலாம் அல்லது நீங்கள் எதிர்பார்த்த வருவாயை உங்கள் பங்கு ஈட்டியிருந்தால், அப்போது விற்றுவிடலாம்.
என்னுடைய வங்கி லாக்கரை வேண்டாம் என்றால், அதற்கான கட்டணம் திரும்ப தரப்பட மாட்டாது என்றார்கள், வங்கியில். இன்னொரு வங்கியில், திருப்பி கொடுப்போம் என்கிறார்கள்; என்ன செய்யலாம்?
கவுரி, காட்டாங்குளத்துார்.
பொதுவாக, லாக்கர் வாடகைக்கு இணையாக, ஒரு டிபாசிட் தொகையை போட்டு வைக்க சொல்லி வங்கிகள் வலியுறுத்தும். ஆண்டுதோறும் வாடகை எடுத்துக்கொள்ள ஏதுவாக, உங்கள் வங்கி கணக்கில் இருப்பு வைக்கவும் சொல்லும். நீங்கள் குறிப்பிடும் இரண்டு வங்கிகளிலும், இரண்டு விதமான நடைமுறைகள் இருக்கலாம்.ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.
ஏன் பணத்தை திருப்பி தரமாட்டார்கள் என்பதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு, மேல் நடவடிக்கைக்கு செல்லவும்.
சிறு நிதி வங்கிகளின் நிரந்தர வைப்பில் முதலீடு செய்யலாமா? பாதுகாப்பானதா?
எம்.ஜி.நடராஜ், வடபழநி.
இத்தகைய வங்கிகளையும், இந்திய ரிசர்வ் வங்கி தான் கட்டுப்படுத்துகிறது. முதலீட்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை உத்தரவாதமும் உண்டு. இதன் விற்றுமுதல் தான் குறைவே தவிர, மற்றபடி வங்கிகளுக்கான அத்தனை கட்டுப்பாடுகளையும் பின்பற்றியே அவை நடத்தப்படுகின்றன.
இரண்டு மியூச்சுவல் பண்டு திட்டங்களில், 2007ல் முதலீடு செய்தேன். இந்த இரண்டு பண்டுகளும் தரகு நிறுவனம் ஒன்றின் மூலம் வாங்கப் பட்டது. 2012ல் எனது புதிய விலாசத்தையும் தெரியப்படுத்தினேன். ஆறு மாதத்துக்கு முன்பு, அலுவலகத்துக்கு சென்று கேட்டபோது, பணம் ஏதும் இல்லை என்றனர்; அடுத்து என்ன செய்வது?
அ.மல்லன், சென்னை.
மியூச்சுவல் பண்டுகளில் நீங்களே ஆன்லைனில் முதலீடு செய்திருந்தாலும், தரகு நிறுவனம் வாயிலாக இருந்து வாங்கியிருந்தாலும், உங்களுக்கு என பிரத்யேகமான, ‘போலியோ’ எண் இருக்குமே? அந்த எண்ணை குறிப்பிட்டு கேட்டால், விபரம் தெரிந்துவிடும். பணம் இல்லை என்று சொல்ல முடியாது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, இ-மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள், தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை 14 என்ற நமது அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|