பதிவு செய்த நாள்
18 ஜூலை2021
20:56
மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்யலாமா? அதற்கு இந்தியாவில் எதிர்காலம் உண்டா?
பவன், கீழக்கரை.
உச்ச நீதிமன்றம், மெய்நிகர் நாணயங்களைத் தடை செய்யக் கூடாது என, வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியமானது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் மெய்நிகர் நாணயங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை இன்னும் கொண்டுவரவில்லை. அப்படியொரு சட்டம் வந்த பின், நீங்கள் இத்தகைய நாணயங்களில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது.
என்னுடைய தந்தை ‘சீனியர் சிட்டிசன்’. அவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், ‘இ அல்லது எஸ் – எய்தர் ஆர் சர்வைவர்’ பிரிவில் ‘பிக்ஸட் டிபாசிட் செய்திருந்தார். அவர் மறைவுக்கு பின், ‘சர்வைவர்’ ஆகிய நான், முதிர்வு வரை டிபாசிட்டை தொடர்ந்து, வட்டியையும், முதிர்வுத் தொகையையும் பெற முடியுமா?
த.செல்வன், சென்னை.
முடியும். ‘எய்தர் ஆர் சர்வைவர்’ கணக்குகளில், உயிருடன் இருப்பவரே, நிரந்தர வைப்பின் முதிர்வுத் தொகையையும், வட்டியையும் பெறுவார்.
நகை வைத்திருப்போர், அவசர பண தேவைக்காக நகைக் கடைகளுக்கு சென்றால், கடைக்காரர்கள் வேறு நகை வாங்குவதற்கு மட்டுமே உடன்படுகின்றனர். பணமாக வழங்க மறுக்கின்றனர். நகைகள் அவசர தேவைக்கு பயன்படாமல் தானே போகின்றன?
வி. எஸ். ஸ்ரீதரன், பண்ருட்டி கண்டிகை.
இல்லை. பணமாக தரக்கூடிய நிறுவனங்களும், கடைகளும் ஏராளமாக உள்ளன. உங்களுடைய இந்தக் கேள்வியைப் பார்த்துவிட்டு, உங்கள் முகவரி கேட்டு எத்தனை பேர் என்னை நச்சரிக்கப் போகிறார்கள் பாருங்கள். கொடுக்கலாமா?
என்னால் காப்பீட்டுப் பாலிசி தொகையைச் செலுத்த முடியவில்லை. தற்போது பணத்தைத் திருப்பித் தரச் சொல்லிக் கேட்டால், கிட்டத்தட்ட பாதி தொகையைத் தான் தருவோம் என்கிறது, காப்பீட்டு நிறுவனம். முழுத் தொகை கிடைக்க வாய்ப்பு உண்டா?
மதன் தாஸ், மின்னஞ்சல்.
இல்லை. திரும்பத் தரப்படும் பணம், காப்பீட்டுத் திட்டத்துக்கு திட்டம் மாறுபடும். உங்கள் விஷயத்தில், பாலிசியின் அத்தனை தவணைகளையும் நீங்கள் செலுத்தவில்லை என்பதால், முதிர்வு பலன்கள் குறைவாகவே இருக்கும். செலுத்தப்பட்ட தவணை தொகைக்கு இணையாக முதிர்வு பலன் இருக்காது. பாலிசி போடும்போதே, இதற்கான அனுமதியை நீங்கள் அளித்துவிட்டீர்கள்.
‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் பங்குகளை வாங்கினேன். தற்போது விற்பனை செய்ய முற்பட்டால், ஆர்டரே நகர மாட்டேன் என்கிறது. நிறுவனம் மீண்டும் இயங்கத் துவங்குமா?
வி.ஆர். வெங்கடாசலம், மின்னஞ்சல்.
ஜெட் ஏர்வேஸ், புதிய முதலாளிகளின் தலைமையில் இயங்கத் துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு எத்தனை மாதங்கள் ஆகும் என்பது தெரியவில்லை. ஆனால், ஜெட் ஏர்வேஸின் பழைய 100 பங்குகளுக்கு ஈடாக, ஜெட் 2.0வில் ஒரு பங்கு வழங்கப்படும் என, புதிய முதலாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
என்னுடைய, ‘டி மேட்’ கணக்கில் விற்கமுடியாத பங்குகளும்; மூடப்பட்ட கம்பெனிகளின் பங்குகளும் இருக்கின்றன. எனக்கு 70 வயது. பங்கு வர்த்தகம் செய்ய விருப்பம் இல்லை. கணக்கை முடிக்க வேண்டும் என்றால், அதில் ஒரு பங்கு கூட இருக்க கூடாது என்கிறார்கள்.கணக்கை முடிக்க நான் என்ன செய்ய வேண்டும்?
ரா.ஸ்ரீனிவாசன், மின்னஞ்சல்.
உங்கள் உறவினர் அல்லது நண்பரது, ‘டி மேட்’ கணக்குக்கு, இந்தப் பங்குகளை மாற்றிக் கொடுத்துவிடுங்கள். இத்தகைய பங்குகளால், உங்களுக்கோ, உங்கள் உறவினருக்கோ, நண்பருக்கோ எந்தப் பலனும் இல்லை என்பதால், கவலை வேண்டாம். நீங்கள் நிம்மதியாக உங்கள், ‘டி மேட்’ கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
‘ஆதர்ஷ் கிரெடிட் கோஆபரேடிவ் சொசைட்டி’யின் திருவள்ளூர் கிளையில், 650க்கும் மேற்பட்டோர், 1.50 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறோம். இக்கிளை 2020 ஜனவரி முதல் மூடப்பட்டுள்ளது. எவருக்கும் முதிர்வு தொகை வழங்கப்படவில்லை. தற்போது இச்சங்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக அறிகிறோம். முதலீட்டுத் தொகையைப் பெறுவது எப்படி?
டி. புருசோத்தமன், சத்திரம் கிராமம்.
இந்த கூட்டுறவு சங்கத்தின் சொத்துக்களை விற்பனை செய்து,முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர, எச்.எஸ். படேல் என்பவர் நியமிக்கப்பட்டார். நவம்பர் 21 வரை இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சங்கத்தின் சொத்துக்களை, அமலாக்கத் துறையும் இதர விசாரணை அமைப்புகளும் முடக்கி வைத்து இருப்பதால், அவற்றை விற்பனை செய்யமுடியவில்லை என, தெரிவித்துள்ளார் படேல். சொத்துக்கள் விற்பனையான பின்னரே, உங்களைப் போன்ற முதலீட்டாளர்களுக்கு, ஒருபகுதி பணமேனும் திரும்ப கிடைக்கும். இதற்கு ஒரு சில ஆண்டுகள் ஆகலாம்.
நான் சொந்தமாக அச்சகத் தொழில் நடத்தி வருகிறேன். வீடு கட்டலாம் என, எண்ணியுள்ளேன். வங்கியில் வீடு கட்ட, கடன் பெற வழி உண்டா?
என். வெற்றிச்செல்வன், திருவல்லிக்கேணி.கடன் பெறலாம். உங்கள் நிறுவனத்தின் பற்றுவரவு கணக்கு, கடந்த இரண்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த விபரங்கள் ஆகியவற்றை பெரும்பாலான வங்கிகள் கேட்கும். உங்கள் நிறுவனத்தின் லாபத்தைக் கணித்து, அவர்கள் உங்கள் வீட்டுக் கடன் தொகை, திருப்பிச் செலுத்தக்கூடிய ஆண்டுகள் ஆகியவற்றை முடிவு செய்வர். இரண்டு, மூன்று வங்கிகளில் விசாரித்து, அப்புறம் முடிவு செய்யுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, இ-மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்,
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை 14
என்ற நமது அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|