பதிவு செய்த நாள்
09 அக்2021
19:46
மும்பை:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை, ‘டாடா சன்ஸ்’ வாங்கி உள்ள நிலையில், அடுத்த கட்டமாக, டாடாவின் மூன்று விமான சேவைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வர திட்டமிடப்படுகிறது.
இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏர் இந்தியாவை ஏலத்தில் எடுத்தது வேண்டுமானால் டாடா நிறுவனத்துக்கு சுலபமானதாக இருக்கலாம்.ஆனால், அந்நிறுவனத்தை வெற்றிகரமான ஒன்றாக மாற்றுவது அத்தனை எளிதானதல்ல.இது, டாடா நிறுவனத்துக்கும் நன்றாக தெரியும்.
அதனால் தான் கடந்த 18 மாதங்களாக, பல்வேறு வகையான ஆலோசனைகளை செய்து வருகிறார்கள். அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெற்று, ஏர் இந்தியா நிறுவனம் கைக்கு வந்த பின், முதல் கட்டமாக ‘விஸ்டாரா, ஏர் ஆசியா , ஏர் இந்தியா’ ஆகிய மூன்றையும் ஒரு குடைக்கு கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுஉள்ளது.
இதற்காக, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக, 150க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் வேலை பார்த்து வந்தனர்.இந்த மூன்று நிறுவனங்களின் மொத்த உள்நாட்டு சந்தை பங்களிப்பு தற்போது 26.9 சதவீதமாக உள்ளது. இதனால், ‘இண்டிகோ’ நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுக்கும்.
மேலும், டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள், இந்த விமான சேவைக்கு பலவகைகளில் கைகொடுக்கும்.அது தகவல் தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி; பயணியருக்கான உணவாக இருந்தாலும் சரி. இப்படி டாடாவின் அனைத்து நிறுவனங்களும், ஏர் இந்தியாவுடன் எந்த வகையில் இணைந்து உதவுவது என்பது குறித்தும் டாடா குழும அதிகாரிகள் திட்டங்களை தயாரித்து கையில் ரெடியாக வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|