பதிவு செய்த நாள்
13 ஜூலை2014
00:38
பொது வரி தவிர்ப்பு தடுப்பு சட்டம் (ஜி.ஏ.ஏ.ஆர் –'கார்') குறித்து மத்திய அரசு அளித்த ஒரு வரி தகவல், வெள்ளியன்று (11ம்தேதி), பங்குச் சந்தையை புரட்டிப் போட்டது. அன்று, மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’, 1.40 சதவீதமும் (348 புள்ளிகள்), தேசிய பங்குச் சந்தையின் 'நிப்டி', 1.43 சதவீதமும் சரிவை கண்டன. ரியல் எஸ்டேட், வங்கி, மின்சாரம், பொறியியல் சாதனங்கள் உள்ளிட்ட துறைகள் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கண்டன.
ஒரு வரி தகவல்:கடந்த 2011ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு, ஒரே வாரத்தில் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள், கிட்டத்தட்ட 4 சதவீத சரிவை, சென்ற வாரம் தான் சந்தித்தன. இதற்கு, தொடர்ந்து நான்கு நாட்களாக, பங்குச் சந்தை சந்தித்து வந்த வீழ்ச்சியும் ஒரு காரணம் என்று கூறலாம்.
பங்குச் சந்தை முதலீட்டாளர்களை பதம் பார்த்த, ஒரு வரி தகவல் தான் என்ன ?‘வரும் 2015 ஏப்ரல் 1ம் தேதி முதல் ‘கார்’ சட்டம் அமலுக்கு வரும்’ என, வெள்ளியன்று, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பார்லிமென்டில் அளித்த பதில்தான், பங்கு வர்த்தகம் வீழ்ச்சி அடைய காரணம்.வரி குறைவாக அல்லது வரி விதிப்பு இல்லாத, குறிப்பாக, மொரீஷியஸ், சைப்ரஸ் போன்ற நாடுகள் வழியாக, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் சார்ந்த வருவாயில், வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்குடன் 'கார்' சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
உண்மையான வர்த்தகமின்றி, வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக மட்டும், வெளிநாடுகளில் இயங்கும் இந்திய நிறுவனங்களின் துணை நிறுவனங்கள், அன்னிய நிறுவனங்கள் ஆகியவற்றின் பரிவர்த்தனைகளை, இச்சட்டத்தின் கீழ், வரி அதிகாரிகள் ஆராய முடியும்.
முறைகேடு;மேலும், இச்சட்ட அமலாக்கத் தேதியில் இருந்து, முந்தைய இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற பரிவர்த்தனைகளை விசாரிக்கலாம்.அதில், முதலீட்டு நிறுவனங்கள் முறைகேடாக வரிச்சலுகை பெற்றுள்ளது தெரியவந்தால், அதை ரத்து செய்து, திரும்ப பெறுவதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, வழக்கு தொடுக்கலாம்.
கடந்த 2012–13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ‘கார்’ சட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இச்சட்டம், இரண்டு ஆண்டுகள் கழித்து நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.இதன்படி, வரும், 2015–16ம் நிதியாண்டில், ஏப்ரல் 1ம் தேதி முதல், இச்சட்டம், நடைமுறைக்கு வர உள்ளது. ஆனால், சென்ற 10ம் தேதி, தாக்கல் செய்யப்பட்ட, 2014–15ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில், ‘கார்’ சட்ட அமலாக்கம் குறித்து, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால், அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில், 2016ம் ஆண்டு வரை ‘கார் சட்டம் அமலாகாது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இச்சட்டம் அமலுக்கு வரும் என, நிர்மலா சீத்தாராமன் தெரிவித்ததால், வெள்ளியன்று, அன்னிய முதலீட்டாளர்கள் பீதி அடைந்து, மள மளவென பங்குகளை விற்பனை செய்தனர். அன்று, ஒரே நாளில், அன்னிய நிதி நிறுவனங்கள், 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான பங்குகளை விற்பனை செய்து, முதலீடுகளை திரும்ப பெற்றன.
பரிசீலனை:இந்நிலையில், நேற்று ‘கார்’ சட்டம் குறித்து மத்திய வருவாய் துறை செயலர் சக்திகாந்ததாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய பட்ஜெட்டில், ‘கார் சட்ட அமலாக்கம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம், முந்தைய அரசு அறிவித்தபடி, இச்சட்ட அமலாக்கத்திற்கான இரண்டு ஆண்டு 'கெடு' வரும் 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை கருத்தில் கொண்டுதான, வரும் நிதியாண்டில், இச்சட்டம் அமலாகும் என, நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
இச்சட்டத்தை அமல்படுத்த இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன. அதனால், மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.அவரது இந்த விளக்கம், நாளை பங்குச் சந்தை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது
.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|