பதிவு செய்த நாள்
01 ஜூன்2015
01:21
ஆண்கள் முதலீடு செய்யும் விதத்திற்கும், பெண்கள் முதலீடு செய்யும் விதத்திற்கும் வேறுபாடு இருக்கிறதா? என யோசித்ததுண்டா? யோசிக்க வேண்டும் என, வலியுறுத்துகிறது, வாரன் பப்பே ஒரு பெண் போல முதலீடு செய்கிறார் எனும் புத்தகம். லுவான் லாப்டன் எனும் முதலீட்டு வல்லுனர் எழுதியிருக்கிறார்.
பெண் முதலீட்டாளர்களிடம் காணப்படும் பண்புகள் அனைத்தும் முதலீட்டு மகாராஜாவான வாரன் பப்பேவிடம் இருப்பதை சுட்டிக்காட்டி அதனடிப்படையில் சராசரி முதலீட்டாளர் பின்பற்ற வேண்டிய கோட்பாடுகளை எட்டு முக்கிய அம்சமாக புத்தகம் முன்வைக்கிறது.
சபலம் வேண்டாம்
பங்குகளை எப்போதும் கையில் வைத்திருப்பது தான் எனக்கு பிடித்தமான பங்கு இருப்பு காலம் (ஹோல்டிங் பீரீட்) எனும் கருத்திற்காக வாரன் பப்பே அறியப்படுகிறார். இதன் பொருள் பங்குகளை பொறுமையாக வைத்திருக்க வேண்டும் என்பதாகும். முதலீடு செய்யும் நிறுவன பங்குகளை அதிக காலம் வைத்திருக்க பப்பே வலியுறுத்த காரணம், ஒருவர் வாங்குவது பங்கை அல்ல; வர்த்தகத்தை என்பதால் தான்.
தெரிந்த துறை:நீண்டகால முதலீடு மட்டும் அல்ல, உங்களுக்கு நன்கு தெரிந்த துறையில் முதலீடு என்பதும் பப்பே பின்பற்றும் கோட்பாடு. அவர் தனக்கு தெரியாத, புரியாத துறைகளில் முதலீடு செய்ததே இல்லை. பப்பே தொழிற்நுட்ப நிறுவனங்களின் பக்கமே போனதில்லை.
‘ரிஸ்கா’ ஓடுங்கள் :தெரிந்த துறையில் நீண்டகால முதலீடு, சிறு முதலீட்டாளர்களுக்கு அள்ளித்தரும் என்பது பப்பே நம்பிக்கை. மேலும், அவர் ரிஸ்கிற்கு எதிரானவர் என்பது இதற்கு வலுசேர்க்கிறது. ஆனால் எல்லா முதலீடுகளுமே ரிஸ்கானவை என்பதால், முடிந்தவரை ரிஸ்கை குறைப்பது தான் நல்ல முதலீடு.
சந்தேகமே சாதகம்:பப்பே நம்பிக்கைவாதி. ஆனால் அவநம்பிக்கை மிக்க நேரங்கள், நீண்டகால நோக்கில் பலன் தரும் வாய்ப்பை கொண்டிருப்பவை என அறிந்த புத்திசாலி. அதனால் தான், 2008ல் அமெரிக்கா முழுவதும் பங்குகளின் வீழ்ச்சியால் வெறுத்துபோயிருந்த நேரத்தில், அமெரிக்க பங்குகளை வாங்கவும் என, அறைகூவல் விடுத்தார். ஏற்ற இறக்கங்களால் அதிகம் சலனப்படாமல் செயல்படுங்கள்.
ஆய்வு! ஆய்வு!:முதலீடு என்பது சும்மாயில்லை. காதில் கேட்ட குறிப்பை வைத்து பங்குகளை வாங்க முடியாது, -கூடாது! அதற்கு முன், வாங்க உள்ள நிறுவனம் பற்றி நன்கு ஆய்வு செய்ய வேண்டும். நிறுவன செயல்பாடு, அது வருவாய் ஈட்டும் வழி எல்லாவற்றையும் அறிய வேண்டும்.
காதுகளை மூடுங்கள்:உங்கள் ஆய்வு மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; உள்மனம் சொல்வதை கேளுங்கள். மற்றவர்கள் சொல்வதை கேட்டு சலனம் அடைய வேண்டாம். அதாவது நண்பர்களும், தெரிந்தவர்களும் சொல்வதை கேட்டு முடிவு எடுக்க வேண்டாம்.
தவறுகள், பாடங்கள்: பப்பே பங்குச்சந்தை மேதை தான். ஆனால் அவரும் தவறுகள் செய்திருக்கிறார். அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார். முதலீட்டாளர்களுக்கு இருக்க வேண்டிய அருங்குணம் இது. அதிக துடிப்பு வேண்டாம்மிகவும் துடிப்பாக இருக்க வேண்டாம். அமைதியாக இருங்கள். இது ரிஸ்கையும் குறைக்கும். மேலே சொன்ன எல்லா குணங்களுக்கும் வித்திடும்.
சேமிப்பின் 4 இலக்குகள்
1. சீரான சேமிப்புமுதலில் சேமிப்பு சீராக இருக்க வேண்டும். சேமிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் எல்லாருமே சேமிப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் சேமிக்கத் துவங்கும் போது அதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட இடைவெளியில் சீராக சேமித்து வர வேண்டும். அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் என்பார்களே, அதே போல, எந்த சூழலிலும் விடாமல் சேமிக்க வேண்டும்.
2. சேமிப்பு இலக்கு
சேமிப்பை தொடர்ந்து மேற்கொள்ளும் போது அதற்கென ஒரு இலக்கு இருந்தாக வேண்டும். அதாவது எதற்காக சேமிக்கிறீர்கள் என, ஒரு தெளிவான திட்டம் இருக்க வேண்டும். இலக்கு என்பது அவரவர் தேவைக்கு ஏற்ப என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சொந்த வீட்டிற்கான முன் பணத்திற்காக, கார் வாங்குவதற்காக, விடுமுறை பயணத்திற்காக என, அது என்னவாக இருந்தாலும், நம்முடைய இலக்கு தெளிவாக இருக்க வேண்டும்.
3. வேண்டும் முன்னுரிமை:இலக்கு என்று வரும்போது சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தேவைகளும் இருக்கலாம். உதாரணமாக ஒருவர் வீடு வாங்க வேண்டும்; கார் வாங்க வேண்டும்; பிளாஸ்மா டிவி வாங்க வேண்டும் என விரும்பலாம். இந்த விருப்ப பட்டியலில் எந்த தவறும் இல்லை. ஆனால் சேமிப்பு முதிரும் போது, இவற்றில் எதற்கு முதலில் செலவிடுவது என, முன்னுரிமை அளிக்க வேண்டும்.
4 சேமிப்பு பாதுகாப்பு :இறுதியாக சேமித்த பணத்தை அப்படியே துாங்கி கொண்டிருக்க அனுமதிக்க கூடாது. அந்த பணம் செலவாகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். சேமிப்பு கணக்கில் வைத்திருந்தால் கூட கிரெடிட் கார்டில் தேய்த்து பாழாக்கி விடலாம் அல்லவா? இதை தவிர்க்க பணத்தை முதலீடு செய்வதே நல்ல வழி.
முதலீட்டு மந்திரம்: உரக்க புகார் செய்யுங்கள்
ஐகான் அமெரிக்க கோடீஸ்வரர்களில் ஒருவர். எல்லாமே அவர் சுயமாக சம்பாதித்தது; முதலீடு மூலம் ஈட்டியது. ஆனால் அவர், வழக்கமான முதலீட்டாளர் இல்லை. அவர், முதலீடு போராளி. அவரது, செயல்பாடு கொஞ்சம் காட்டமானது; சர்சைக்குரியது! நலிவடையும் நிலையில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, அதன் இயக்குனர் குழுவில் நுழைந்து, பின்னர் நிறுவனத்தையே கட்டுப்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெறுவது அவரது ஸ்டைல். நிறுவனங்களுக்கு அவர் எட்டிக்காய் என்றாலும், அவர் குரல் கொடுப்பது என்னவோ பங்குதாரர்களில் ஒருவராக தான். இவர் அழுத்தந்திருத்தமாக சொல்வது, முதலீட்டாளர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட, முதலில் உரக்க குரல் கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|