பதிவு செய்த நாள்
09 மே2016
07:35
என்.பி.எஸ்., திட்டத்தின் கீழ், இளம் வயது ஊழியர்கள் சம பங்குகளில் அதிக முதலீடு செய்ய வழிவகுக்கும் வகையில், இரண்டு புதிய நிதிகள் அறிமுகம் செய்யப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.என்.பி.எஸ்., திட்டங்களின் கீழ் சம பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்ய வழிவகுக்கும் இரண்டு புதிய நிதிகளை அறிமுகம் செய்ய, பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) உத்தேசித்துள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை ஆணையம் வெளியிட்டு, இது தொடர்பான கருத்துகளை கோரியுள்ளது. எப்படி செயல்படுகிறது?என்.பி.எஸ்., திட்டம், நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பை கொண்ட ஓய்வூதிய திட்டமாக இருக்கிறது; அரசு ஊழியர்களுக்கு இது கட்டாயம். தனியார் துறையில் இருப்பவர்கள், விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். இதில், 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும். 60 வயதில், 40 சதவீத தொகைக்கு, ஓய்வூதிய காப்பீடு திட்டமான, ‘ஆன்யூவிட்டி’ திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
என்.பி.எஸ்., திட்டத்தை நாடுபவர்கள், அதற்கான பண்ட் மேனேஜர் நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், முதலீட்டு வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். மூன்று வகையான நிதிகளிலிருந்து தேர்வு செய்ய முடியும். ‘ஸ்கீம் சி’-யில், அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். ‘ஸ்கீம் ஜி’யில், அரசு பத்திரங்கள் அல்லாத நிரந்தர வருமானம் தரும் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். ‘ஸ்கீம் ஈ’-யில், சம பங்குகளில் முதலீடு செய்யலாம். எனினும் சம பங்குகளில் அதிகபட்சமாக, 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே முதலீடு செய்யலாம்.இந்த மூன்று நிதிகளில் எந்ததெந்த அளவு முதலீடு செய்யலாம் என்பதை முதலீட்டாளர்கள் தீர்மானிக்கலாம். இது, ‘ஆக்டிவ் சாய்ஸ்’ எனப்படுகிறது. அவ்வாறு தீர்மானிக்க முடியாதவர்கள், ‘ஆட்டோ சாய்ஸ்’ வாய்ப்பை தேர்வு செய்து கொள்ளலாம். ‘லைப் சைக்கிள் பண்ட்’ எனப்படும் இந்த நிதி, வாழ்க்கை சுழற்சி அடிப்படியில் செயல்படுகிறது. அதாவது, இளம் வயதில் சம பங்குகளில் அதிக முதலீட்டில் துவங்கி, பின் வயது ஆக ஆக, சம பங்கு முதலீட்டின் அளவு குறைக்கப்பட்டு மற்ற பிரிவுகளில் அதிகரிக்கப்படுகிறது. புதிய நிதிகள் உருவாக்கம் இப்போது, இந்த லைப் சைக்கிள் நிதி பிரிவில் மேலும் இரண்டு புதிய நிதிகளை அறிமுகம் செய்ய, பென்ஷன் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சம பங்குகள் முதலீடு வரம்பை, 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தும் வகையில் இந்த மாற்றம் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன்படி, ‘அக்ரசிவ் லைப் சைக்கிள் பண்ட் மற்றும் கன்சர்வேட்டிவ் லைப் சைக்கிள் பண்ட்’ ஆகிய இரண்டு நிதி வாய்ப்புகள் உருவாக்கப்படும். முதல் நிதியின் கீழ் ஒருவர், 75 சதவீத தொகையை சம பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படும். அதாவது, ஆரம்ப கட்டத்தில் சம பங்கு முதலீடு, 75 சதவீதமாக இருக்கும். பின், வயதுக்கேற்ப குறைந்து கொண்டே வரும். ஓய்வு காலத்தில், 15 சதவீதமாக இருக்கும்.
இரண்டாவது நிதியில், ஆரம்ப கட்டத்தில் சம பங்கு முதலீடு, 25 சதவீதமாக இருக்கும். பின், இது ஓய்வு காலத்தில், 5 சதவீதமாக குறையும்.சம பங்கு வாய்ப்புகளை நாடும் விருப்பம் கொண்டவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த நிதிகள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டில், பாஜ்பாய் குழு அறித்த அறிக்கையில் சம பங்கு வாய்ப்பு, 75 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதை ஏற்றுக் கொண்டு பென்ஷன் ஆணையம், இந்த வரைவு திட்டத்தை உருவாக்கியுள்ளது.
என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட பாஜ்பாய் குழு அறிக்கை பரிந்துரைகள் படி, இத்திட்டத்தில், தனியார் ஊழியர்களுக்கு நிகரான வாய்ப்புகளை அளிக்கவும் பென்ஷன் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையையும் வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது. இதன்படி அரசு ஊழியர்கள் தங்களுக்கான பென்ஷன் நிதி மேனேஜர்களை தேர்வு செய்து கொள்ள அதிக வாய்ப்பு வழங்கப்படும். மேலும் சம பங்கு அளவை அதிகரித்துக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படும். தற்போது அரசு ஊழியர்கள், 15 சதவீதம் மட்டுமே சம பங்குகளில் முதலீடு செய்யலாம்.சம பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு அதிகரிக்க இருப்பது, என்.பி.எஸ்., திட்டத்தை மேலும் பலன் மிக்கதாக மாற்றும் அதன் ஈர்ப்பை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|