பதிவு செய்த நாள்
24 மே2016
08:05
புதுடில்லி : ‘கடந்த இரு ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என, இந்திய வர்த்தக கூட்டமைப்பான – ‘அசோசெம்’ பாராட்டு தெரிவித்துள்ளது.
கடந்த, 2014, மே 26ல் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற, பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாளையுடன், இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது. இந்த இரு ஆண்டுகளில், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து, அசோசெம், பல்துறை வல்லுனர்களின் கருத்துகளை கேட்டறிந்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: மத்திய அரசின் செயல்பாடுகளில், நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில்வே, எரிசக்தி துறைகளில், துணிச்சலாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம், வலுவான வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகிறது. இந்தியாவின் வெளியுறவு கொள்கை, அடிப்படை கட்டமைப்பு துறைகள் ஊக்குவிப்பு ஆகியவற்றில், மோடி தலைமையிலான அரசு, மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக, நெடுஞ்சாலைகள், மின்சாரம், ரயில்வே உள்ளிட்ட முக்கிய, அடிப்படை கட்டமைப்பு துறைகளில் மேற்கொண்டுள்ள பணிகள் பாராட்டுக்குரியவை. அடுத்து, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். இரு ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, நாட்டின் பொருளாதாரம், தற்போது மேலும் ஸ்திரமடைந்து, வலுப்பெற்றுள்ளது.
ரூபாய் மதிப்பின் சரிவை தடுத்து, நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்து, திவால் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம் போன்ற முக்கிய சட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய வகையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது. பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை, வரி பிரச்னை, வேளாண் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில், வேகம் தேவை. முக்கியமாக, சரக்கு மற்றும் சேவை வரியை விரைந்து அமல்படுத்த வேண்டும் என, அனைத்து துறையினரும் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆய்வின் அடிப்படையில், மத்திய அரசின், இரண்டு ஆண்டு கால செயல்பாடு களை பாராட்டி, 10க்கு 7 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|