பதிவு செய்த நாள்
27 ஜூன்2016
07:34
முதலீட்டு விஷயங்களில் நிதி ஆலோசனை பெறுவது அவசியம். நிதி ஆலோசனைகளை யாரிடம் இருந்து பெறுகிறோம் என்பதும் முக்கியம். பொதுவாக தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது என்று கருதப்படுகிறது. ஏனெனில், அவர்கள் பரிந்துரைக்கும் முதலீட்டு சாதனம் சரியானதாகவே இருந்தாலும், எல்லாருக்கும் அது பொருத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. முதலீட்டு சாதனங்கள் ஒவ்வொருவரின் தேவை, இலக்கு மற்றும் நிதி சூழலுக்கு ஏற்ப மாறுபடும்.
முக்கிய கேள்விஇந்த இடத்தில் சுவாரசியமான கேள்வி ஒன்று உண்டாகிறது. பிள்ளைகள், பெற்றோரின் நிதி ஆலோசனையை ஏற்கலாமா?இந்திய சமூக சூழலில் இது முக்கியமான கேள்வியாகவும் அமைகிறது. பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்பது நமக்கு முக்கியம். அதே போல, பெற்றோர் அறிவுரைப்படி பிள்ளைகள் நடக்க வேண்டும் என்பதும் நம் மரபு. மேலை நாடுகள் போல பிள்ளைகள் வளர்ந்த பின், பெற்றோர் நம் கடமை முடிந்தது என்றில்லாமல், முக்கிய விஷயங்களில் ஆலோசனை சொல்லி வழிநடத்த அக்கறை காட்டுகின்றனர். இது, நிதி விஷயங்களுக்கும் பொருந்தும். அதே நேரத்தில் சம்பாதிக்கத் துவங்கிஇருக்கும் இளம் ஊழியர்களுக்கு நிதி வழிகாட்டுதலும் தேவை. ஆனால், பெற்றோர் இதை அளிப்பது சரியாக இருக்குமா? பெற்றோரை விட பிள்ளைகள் மீது வேறு யாருக்கும் அதிக அக்கறை இருக்க முடியாது என்பது உண்மை தான். ஆனால், அவர்கள் அளிக்கும் நிதி ஆலோசனைகள் பொருத்தமானதாக இருக்கும் என்பது நிச்சயமில்லை. முதல் காரணம், கடந்த தலைமுறை சிந்தனையின் தாக்கம் அவர்கள் நிதி ஆலோசனையிலும் பிரதிபலிக்கலாம். உதாரணத்திற்கு, பங்குகளில் முதலீடு செய்ய வேண்டாம்; அது ரிஸ்கானது என அவர்கள் கருதலாம். வைப்பு நிதி போன்றவை பாதுகாப்பானது என கூறலாம்.
ஆலோசனை சரியா?பங்குகள் ரிஸ்க் நிறைந்த முதலீடு என்றாலும், அதிக பலன் தரக்கூடியது என்பதை மறந்துவிடக் கூடாது. அது மட்டும் அல்லாமல் பங்கு முதலீட்டின் பலனை பெற, இளம் வயதில் அவற்றில் முதலீடு செய்வதே பொருத்தமாக இருக்கும். பங்குகளில் இல்லாவிட்டாலும், மியூச்சுவல் பண்ட் மூலம் முதலீடு செய்தால், நீண்ட கால முதலீட்டின் பலனை பெறலாம். அதுபோலவே, தங்கம் போன்ற முதலீட்டையும் அதிகம் வலியுறுத்தலாம். ஆனால், ஒருவருடைய முதலீட்டில் தங்கம் குறிப்பிட்ட அளவு இருந்தால் போதுமானது என்று வலியுறுத்தப்படுகிறது. ஒரு சிலர், காப்பீடு பெறுவது தொடர்பான மூட நம்பிக்கை கொண்டிருக்கலாம். அதற்காக எதிர்கால பாதுகாப்பை பெறாமல் இருக்கக் கூடாது.இதன் பொருள், பெற்றோர் நிதி ஆலோசனை வழங்கக் கூடாது என்பதோ அல்லது பிள்ளைகள் அதை கேட்டு நடக்கக் கூடாது என்பதோ அல்ல. கடன் வாங்காதே மற்றும் அதிகம் செலவு செய்யாமல் சேமித்து வை போன்ற பொதுவாக ஆலோசனைகளை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றலாம். மாறாக, குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனைகளை கவனமாக கேட்டுக் கொண்டு, முதலீட்டு வாய்ப்புகளின் பலன்கள் மற்றும் நிதி சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும்!
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|