பதிவு செய்த நாள்
27 ஜூன்2016
07:35
காப்பீடு திட்டங்களின் வீச்சை மேலும் பரவலாக்கும் வகையில், ‘இ – காமர்ஸ்’ மூலம் காப்பீடு திட்டங்களை விற்பனை செய்வதற்கான வரைவு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இ – காமர்ஸ் எனப்படும் இணையம் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவது வேகமாக பிரபலமாகி வருகிறது. ‘ஸ்மார்ட் போன்’களின் பெருக்கத்தால் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கூட எளிதாக இ – காமர்ஸ் வசதியை பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. ரயில் டிக்கெட்டில் துவங்கி, பல வகையான சேவைகளை இ – காமர்ஸ் மூலம் பெற முடிகிறது. இந்த வரிசையில் காப்பீடு திட்டங்களும் இணைய உள்ளன.
விரைவில், காப்பீடு திட்டங்களையும், இ – காமர்ஸ் மூலம் எளிதாக வாங்கும் நிலை உருவாக உள்ளது. இதற்கு வழி செய்யும் வகையில் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இ – காமர்ஸ் மூலம் காப்பீடு திட்டங்களை விற்பனை செய்வதற்கான வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட்ட இந்த வரைவு நெறிமுறைகள் மீது, 20ம் தேதி வரை கருத்துக்களையும் கேட்டிருந்தது.
இணைய வழிஏற்கனவே பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, மியூச்சுவல் பண்ட் திட்டங்களை இ – காமர்ஸ் முறையில் விற்பனை செய்ய அனுமதிப்பதற்கான யோசனையை பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், காப்பீடு திட்டங்களின் வீச்சை பரவலாக்கும் வகையில் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இ – காமர்ஸ் மூலம் காப்பீடு திட்டங்களை விற்பனை செய்வதற்கான வரைவு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. இ – காமர்ஸ் மூலமான விற்பனை பரிவர்த்தனை செலவுகளை குறைப்பதோடு, செயல்திறன் மற்றும் வீச்சை அதிகமாக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள் வரைவு நெறிமுறைகளின் படி, இ – காமர்ஸ் மூலம் காப்பீடு திட்டங்கள் விற்பனைக்கு, ‘செல்ப் நெட்வொர்க் பிளாட்பார்ம்’ எனும் இணைய மேடை உருவாக்கப்படும். இந்த மேடை இணையதளமாக அல்லது மொபைல் போன் செயலியாக அல்லது இரண்டுமாக இருக்கலாம். இணையம் மூலம் காப்பீடு திட்டங்கள் விற்க விரும்பும் நிறுவனங்கள், ஆணையத்திடம் பதிவு செய்து கொண்டு அதற்கான அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும். காப்பீடு முகவர்கள், காப்பீடு இடைத்தரகர் அமைப்புகள் உள்ளிட்ட நிறுவனங்கள் இவ்வாறு பதிவு செய்து கொண்டு இ – காமர்ஸ் மூலம் காப்பீடு திட்டங்களை வழங்கலாம்.
இ – காமர்ஸ் நிறுவனங்களும் இவ்வாறு வழங்க முடியும். முகவர்கள் இணையம் மூலம் காப்பீடு திட்டங்களை வழங்கும் போது, அவர்கள் சார்ந்த நிறுவனம் சார்பாகவே விற்பனை செய்யப்படுவதாக அது கருதப்படும். எனினும், இ – காமர்ஸ் முறையில் காப்பீடு திட்டங்கள் வாங்க, மின்னணு காப்பீடு கணக்கு அவசியம். அதே நேரத்தில் காகித கையெழுத்து வடிவம் தேவையில்லை; டிஜிட்டல் கையெழுத்து அல்லது ஒரு முறை பாஸ்வேர்டு ஏற்றுக் கொள்ளப்படும். இந்த முறையில் விற்கப்படும் திட்டங்கள் அதன் வேறுபாட்டை குறிக்கும் வகையில், அவற்றுக்கு முன், ஐ எனும் எழுத்தால் குறிக்கப்பட வேண்டும்.
மேலும், இ – காமர்ஸ் காப்பீடு திட்டங்களுக்கு தனி விலையையும் காப்பீடு நிறுவனங்கள் கையாளலாம். இப்போது, இணையம் மூலம் விற்கப்படும் காப்பீடு திட்டங்களுக்கு மாறுபட்ட விலை அனுமதி இல்லை. எனவே, இந்த மாற்றம் காரணமாக இ – காமர்ஸ் மூலம் காப்பீடு திட்டங்கள் வாங்கும்போது அவற்றின் விலை குறைவாக இருக்கும் வாய்ப்புள்ளது.
சாதகம் என்ன? இந்த நிறுவனங்கள் பாலிசி விற்பனை மற்றும் பாலிசி விற்பனை தொடர்பான சேவைகளை அளிக்கும். பாலிசி தொடர்பான விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர் மதிப்புரை மற்றும் ரேட்டிங் ஆகியவையும் அனுமதிக்கப்படும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. பிரீமியம் தொகை ரொக்கமாக செலுத்த முடியாது. ‘கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு’ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மின்னணு வடிவில் இருக்க வேண்டும்.
காப்பீடு துறை வல்லுனர்கள் இந்த வரைவு நெறிமுறைகள் நல்ல முன்னேற்றம் என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இன்னமும் காப்பீடு வசதி முழுவதும் பரவலாகாத நிலையில், இந்த முயற்சி, காப்பீடு திட்டங்களின் வீச்சை மேலும் அதிகமாக்கும் என்று கருதப்படுகிறது. எனினும், வரைவு நெறிமுறையில் பல்வேறு அம்சங்களில் மேலும் தெளிவு தேவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. மின்னணு காப்பீடு கணக்கு அவசியம் என்பது இந்த முறையை சிக்கலாக்கும் என்றும் கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|