பதிவு செய்த நாள்
28 ஜூன்2016
07:15
புதுடில்லி : ‘‘நிலம் வாங்க, பொது துறை வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தால், ரியல் எஸ்டேட் துறையின் மந்தநிலை மாறும்,’’ என, வீட்டுவசதி கடன் வழங்கும், எச்.டி.எப்.சி., நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு தடையாக, பல பிரச்னைகள் உள்ளன. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நிலம் வாங்க, வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் கடன் பெறுகின்றன; அன்னிய பங்கு முதலீட்டு நிறுவனங்களும், நிதியுதவி செய்கின்றன.
தடுக்கும் அம்சம்:இந்த கடனுக்கு, மிக அதிகமான வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டிச் செலவினத்தையும் சேர்த்து தான், நிலத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிக விலையால், நிலம் விற்பனையாவதில் தாமதம் ஏற்படுகிறது. இது, ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியை தடுக்கும் அம்சங்களில் ஒன்றாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பொது துறை வங்கிகள், வீட்டுவசதி கடன் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, நிலம் மீது கடன் வழங்க, ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம், நிலம் வாங்குவோருக்கு, நியாயமான வட்டியில் கடன் கிடைக்கும். வட்டிச் சுமை குறைவதால், நிலத்தின் மதிப்பும், குறைவாகவே நிர்ணயிக்கப்படும். நிலம் விலை குறைந்தால், அதன் விற்பனை அதிகரிக்கும்.
ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் மட்டுமே, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு முழுமையான தீர்வை அளிக்க முடியாது. பொது துறை வங்கிகள், வீட்டுவசதி கடன் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும், நிலம் மீது கடன் வழங்க அனுமதி அளிக்க வேண்டும். குறைந்தபட்சம், குடியிருப்பு திட்டத்திற்கான நிலத்திற்காவது கடன் வழங்க, அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க எடுத்து வரும் நடவடிக்கைகள், பாராட்டுக்குரியது.குறிப்பாக, புதிய ரியல் எஸ்டேட் சட்டம், நுகர்வோருக்கு பாதுகாப்பை வழங்குகிறது. ரியல் எஸ்டேட் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது.
வளர்ச்சி:இத்துடன், அனைவருக்கும் வீடு, நகர்மயமாக்கல் திட்டங்களும், ரியல் எஸ்டேட் துறையை மேலும் ஊக்குவிக்கும்.மாநில அரசுகளுக்கு இடையிலான கொள்முதல் திட்டங்களுக்கு மின்னணு ஏல முறை அறிமுகமாகியுள்ளதால், உயர்மட்ட அளவில், திட்ட அனுமதிகளில் வெளிப்படைத் தன்மையும், லஞ்ச ஊழல் இல்லாத நிலையும் உருவாகியுள்ளது. இது, மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கும் விரிவடையும்பட்சத்தில் ரியல் எஸ்டேட் உட்பட, அனைத்து துறைகளின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|