பதிவு செய்த நாள்
14 செப்2016
06:12
புதுடில்லி:நேரடி விற்பனை மற்றும் பன்னடுக்கு வர்த்தக நடைமுறையை ஒழுங்குபடுத்தவும், ‘பொன்ஸி’ எனப்படும், மோசடி திட்டங்களால் மக்கள் ஏமாறுவதை தடுக்கவும், ‘நேரடி விற்பனை வழிகாட்டு நெறிமுறைகள் – 2016’ என்ற மாதிரி விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றை பின்பற்றுமாறு, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை, நேரடி விற்பனையில் நிலவும் பல்வேறு சட்டப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, அத்துறை வளர்ச்சி காண உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மாதிரி விதிமுறைகளில், சட்டப்பூர்வமான நேரடி விற்பனைக்கும், பன்னடுக்கு, ‘பிரமிட்’ வணிகம் மற்றும் பணப்புழக்க திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதனால், இதுவரை, சட்டத்தின் ஓட்டையில் தப்பி வந்த மோசடி திட்ட நிறுவனங்களை, புலனாய்வுத் துறையினர் சுலபமாக அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்க முடியும்.‘நேரடி விற்பனை என்பது, சந்தைப்படுத்துவது, வினியோகம், பொருட்கள் விற்பனை அல்லது சேவைகளை வழங்குவதை குறிக்கும்; பன்னடுக்கு வணிகத்தை குறிக்காது’ என, விதிமுறை கூறுகிறது. ‘புதிய விதிமுறைகள், அசல் மற்றும் போலியான திட்டங்களை, நுகர்வோர் சுலபமாக அறிய உதவும்’ என, இந்திய நேரடி விற்பனை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்
* நேரடி விற்பனை நிறுவனங்கள், ஏஜன்டுகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக் கூடாது; விற்பனையாகாத பொருட்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது* நிறுவனங்கள், நேரடி விற்பனையாளர் அல்லது முகவருடன், ஒப்பந்தம் செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது * ஒப்பந்தத்தை ரத்து செய்து, வாங்கிய பொருட்களை திரும்ப அளிக்கும் விற்பனையாளருக்கு, நியாயமான கால அவகாசத்தில், முழுத் தொகையை, நேரடி விற்பனை நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டும்* நுகர்வோர் உரிமையை காக்க, குறைதீர்ப்பு குழுவை, நேரடி விற்பனை நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்* நேரடி விற்பனை சார்ந்த பிரச்னைகளுக்கு, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும்.
ஏமாற்றாதே... ஏமாறாதே...* நிதி நிறுவனங்கள், குறுகிய காலத்தில் அதிக வருவாய் தரும் விளம்பரங்களை வெளியிட்டும், பரிசு திட்டங்களை அறிவித்தும், மக்களின் முதலீடுகளை மோசம் செய்கின்றன. சட்ட விரோத பணப்புழக்கத்திற்கு வழிவகுக்கும் இதுபோன்ற பரிசு குலுக்கல் திட்டங்கள், ‘பொன்ஸி திட்டங்கள்' என்றழைக்கப்படுகின்றன* ஒருவர், ஒரு நிறுவனத்தின் பொருளை வாங்கி, உறுப்பினராகி, தனக்கு கீழ் சிலரை சேர்த்து, அவர்கள் மூலம் பலரை உறுப்பினராக்கி, அதன் மூலம், ‘கமிஷன்’ பெறுவதை, பன்னடுக்கு வர்த்தகம் அல்லது, ‘பிரமிட்’ வணிகம் என்கின்றனர். இதிலும் பல முறைகேடுகளால், மக்கள் பணத்தை இழக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|