பதிவு செய்த நாள்
25 செப்2016
23:42
சொந்த வீடு வாங்கும் போது பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றில் நான்கு அம்சங்கள் மிகவும் முக்கியமானது என்கின்றனர் வல்லுனர்கள்.
அமைவிடம், பணத்திற்கான மதிப்பு, பில்டரின் நம்பிக்கை மற்றும் கட்டடத்தின் தரம் ஆகிய இந்த அம்சங்கள் வீட்டின் தரத்தையும், அது அளிக்க கூடிய மதிப்பையும் தீர்மானிக்க கூடியவையாக அமைகின்றன. இவற்றில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
அமைவிடம்புதிதாக வாங்க இருக்கும் வீடு, சரியான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். குறைவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக போதுமான வசதிகள் இல்லாத இடத்தில் வீடு வாங்குவதால் தொல்லைகளே அதிகம் இருக்கும். அலுவலகம் செல்லும் வசதி, பள்ளி, கல்லுாரி ஆகிவற்றுக்கான தொடர்பு வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைவிடத்தை தேர்வு செய்ய வேண்டும். எல்லா வசதிகள் கொண்ட இடத்தில் விலை அதிகமாக இருக்கும் என்றாலும், பட்ஜெட்டுக்குள் அடங்கும் விலையில் பொருந்தக்கூடிய வீடு பொருத்தமான இடத்தில் அமைந்திருப்பதை உறுதி செய்வது அவசியம். நல்ல அமைவிடம் வசதிகளை கொண்டிருப்பதோடு, எதிர்காலத்தில் வீட்டின் மதிப்பை உயர்த்தக் கூடியதாகவும் இருக்கும்.
பணத்திற்கான மதிப்பு இப்போதைய சந்தை, வாங்குபவரின் சந்தையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது வாங்குபவர்களின் எண்ணிக்கையை விட கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, பில்டர்கள், பல்வேறு சலுகைகளையும் அளித்து கவர முயலும் நிலை உள்ளது. எனினும், கவர்ச்சியான சலுகையால் மட்டும் ஈர்க்கப்பட்டு விடக்கூடாது. அதிக வசதி கொண்ட இடங்களிலும் கூட, பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் வீடுகள் இருக்கலாம். விலையை மட்டும் பார்க்காமல், மற்ற அம்சங்களையும் மனதில் கொண்டு தேடினால், பணத்திற்கு முழு மதிப்பு அளிக்கும் நல்ல வீட்டை கண்டறியலாம்.
பில்டர் எப்படி?பில்டர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாலும், உரிய காலத்தில் வீடுகளை கட்டி முடிக்காமல் இழுத்தடிப்பதும் பரவலாக இருக்கிறது. எனவே, வீட்டை தேர்வு செய்யும் முன் அந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள பில்டர் அல்லது நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வது நல்லது.
கட்டடத்தின் தரம்வீடு தரமானதாக இருக்க வேண்டும் என்றால் குடியிருப்பு தரமான முறையில் கட்டப்பட வேண்டும். தரமற்ற முறையில் கட்டப்படும் கட்டடங்களால் ஏற்படும் பாதிப்புகள் நாம் அறியாதது அல்ல. அது மட்டும் அல்ல, போதிய தரம் இல்லை என்றால், பின்னர் பராமரிப்பு செலவும் அதிகமாக இருக்கும். வடிவமைப்புக்கு ஏற்ப கட்டப்படுகிறதா... தரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா... போன்ற அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். கட்டுமானத்தின் தரத்தில் சமரசமே செய்து கொள்ளக்கூடாது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|