பதிவு செய்த நாள்
02 அக்2016
00:28
கோவை:‘‘பருத்தி விலை உயர்வை கட்டுப்படுத்த, பருத்தி இழை பாதுகாப்பு கொள்கையை உருவாக்க வேண்டும்,’’ என, தென்னிந்திய நுாற்பாலைகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதன் தலைவர், எம்.செந்தில் குமார் கூறியதாவது:பருத்தி விலை ஏற்றத்தாழ்வால், பருத்தி ஜவுளி துறை வளர்ச்சியில், தேக்கம் ஏற்பட்டுள்ளது. பருத்தி ஜவுளி உற்பத்தியில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு, 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இப்பிரிவு, நேரடியாக, 3.50 கோடி பேருக்கு, குறிப்பாக, ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அதனால், பருத்தி இழை பாதுகாப்பு கொள்கையை உருவாக்குவது அவசியம். இதை, மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை, நேரில் சந்தித்து எடுத்து கூறியுள்ளோம். 355 கிலோ கொண்ட, ஒரு கேண்டி பருத்தியின் விலை, 33 ஆயிரம் ரூபாயிலிருந்து, தற்போது, 50 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிலோ, சுத்த பருத்தியின் விலை, 65 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேசமயம், ஒரு கிலோ பருத்தி நுாலிழை விலை, 20 – 30 ரூபாய் என்ற அளவிற்கே அதிகரித்துள்ளது. இதனால், நுாற்பாலைகள், கடந்த மூன்று மாதங்களாக, கிலோவுக்கு, 20 – 25 ரூபாய் வரை இழப்பை கண்டு வருகின்றன.
பல நுாற்பாலைகள், உற்பத்தியை, 20 –35 சதவீதம் வரை குறைத்துள்ளதால், லட்சக்கணக்கானோர் வேலையிழந்து உள்ளனர். சர்வதேச சந்தையை விட, உள்நாட்டில், பருத்தி விலை சரியும் போது, இந்திய பருத்தி கழகம், 70 – 80 லட்சம் பருத்தி பொதிகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க வேண்டும். இதை, விலை ஏற்றம் நிகழும், மே – செப்., மாதங்களில், நுாற்பாலைகளுக்கு வழங்க வேண்டும். இது போன்ற அம்சங்களை உள்ளடக்கிய பருத்தி கொள்கையை, ஜவுளி துறை வெளியிட்டால், பருத்தி ஜவுளி துறை, ஏற்றுமதியிலும் வளர்ச்சி காணும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|