பதிவு செய்த நாள்
06 டிச2016
03:36
புதுடில்லி‘‘இந்திய எரிசக்தி துறை நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களாக உயர்வதற்கு முயற்சிக்க வேண்டும்,’’ என, பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
அவர், டில்லியில், ‘பெட்ரோடெக்’ எரிசக்தி மாநாட்டில், மேலும் பேசியதாவது:ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, மிக முக்கிய பங்களிப்பை, எரிசக்தி துறை வழங்குகிறது. பொருளாதார வளர்ச்சியை, அடிமட்டத்தில் இருந்து, உச்சத்திற்கு கொண்டு செல்ல, எரிசக்தி, நியாயமான விலையில் நிலையாகவும், நீடித்தும் கிடைப்பதும் அவசியம்.
அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை சமாளிக்க, அதன் பலவகை வளங்களை, ஒருபுறம் பெருக்கவும், மறுபுறம், அதனால், சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படாமலும் பார்த்துக் கொள்வதும் முக்கியம். இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு, பொதுவாக, எரிசக்தியும், குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயுவும் முக்கிய பங்கு வகிக்கும்.
ஏழைகளுக்கு, குறைந்த விலையில் எரிசக்தி கிடைக்க வேண்டும். அதற்கு, வெளிநாடுகளில் இருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதை குறைத்து, உள்நாட்டில் அவற்றின் உற்பத்தியை உயர்த்த வேண்டும். வரும், 2022ல், எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை, 10 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன். இதே காலத்தில், அதிகரிக்கும் எண்ணெய் பயன்பாட்டை மீறி, இந்த இலக்கை எட்ட வேண்டும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, உற்பத்தி ஆகியவற்றில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், ‘ஷேல் காஸ்’, மீத்தேன் உட்பட, அனைத்து வகையான பெட்ரோலிய பொருட்களின் உற்பத்திக்கும், எண்ணெய் மற்றும் எரிவாயு வள ஆய்வுக்கும், சீரான உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் இணைந்து செயல்படும், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இடையே, உரசல்களை தவிர்க்க, லாப அடிப்படையிலான நிதி பகிர்வு முறைக்கு பதிலாக, வருவாய் பகிர்வு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.இந்திய நிறுவனங்கள், ரஷ்ய எண்ணெய் வயல்களில், 560 டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளன. இது, 1.50 கோடி டன் எண்ணெய் உற்பத்திக்கு நிகராகும்.
இந்திய எரிசக்தி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களாக வளர்ச்சி காண வேண்டும். இது, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, தெற்காசியா ஆகிய பிராந்தியங்களில், பன்னாட்டு எரிசக்தி நிறுவனங்களுடன் இணைந்து, செயல்படுவதன் மூலம் சாத்தியமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
சர்வதேச அளவில், 2013 – 2040 வரை எரிசக்தி தேவை அதிகரிப்பில், இந்தியாவின் பங்கு, 25 சதவீதமாக இருக்கும். ஐரோப்பாவை விட, இந்தியாவின் எண்ணெய் பயன்பாடு அதிகமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|