பதிவு செய்த நாள்
09 ஜன2017
01:28
வீட்டு வசதி கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதனால், பல்வேறு தரப்பினருக்கும் கிடைக்க கூடிய பலன்கள், வீட்டுக் கடனை மாற்ற வேண்டுமா? எனும் கேள்விக்கான பதில் பற்றி ஓர் அலசல்.
புதிதாக வீட்டு வசதி கடன் பெற இருப்பவர்களை பொறுத்தவரை புத்தாண்டு வட்டி குறைப்பு எனும் நல்ல செய்தியுடன் துவங்கியிருக்கிறது. ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளிட்ட வங்கிகள் வீட்டு வசதி கடனுக்கான, எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலான வட்டி விகிதத்தை கணிசமாக குறைப்பதாக அறிவித்துள்ளன. மற்ற முன்னணி வங்கிகளும் வட்டி குறைப்பை அறிவித்து வருகின்றன. இந்த போக்கு தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, வங்கிகளில் டிபாசிட்கள் குவிந்த நிலையில், கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலான வட்டி விகிதம், 90 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளன.
எவ்வளவு குறையும்?சமீப காலங்களில் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி விகித குறைப்பாக இது கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் கடன்கள், இந்த முறையிலேயே வட்டி கணக்கிடப்படுகின்றன. அதற்கு முன், இருந்த கடன்களுக்கு, ‘பேஸ் ரேட்’ முறை கடைபிடிக்கப்படுகிறது. புதிதாக கடன் பெற இருப்பவர்களுக்கு நிச்சயம் இது நல்ல செய்தி தான். ஆனால் ஒன்று, வங்கிகள் வட்டி குறைப்பை அறிவித்துள்ளதோடு, கடன்கள் மீதான, ‘ஸ்பிரெட்’ என, சொல்லப்படும் விகிதத்தையும் உயர்த்தியுள்ளன. எம்.சி.எல்.ஆர்., விகிதம் மீது கடன் பெறுபவர்கள் செலுத்த வேண்டிய மார்ஜின் தொகையே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. ‘ஸ்பிரெட்’ விகிதத்தை வங்கிகள் உயர்த்திஉள்ளதால், வட்டி குறைப்பில் அதை கழித்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஸ்டேட் வங்கி, ஓராண்டு, எம்.சி.எல்.ஆர்., வட்டி விகிதத்தை, 90 அடிப்படை புள்ளிகளாக குறைத்துள்ளது. ஆனால், ஸ்பிரெட் விகிதத்தை, 20 முதல் 25 சதவீதத்தில் இருந்து 60 முதல் 65 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இது அமைகிறது.
கடன் தகுதி உயரும்வங்கிகள் பொதுவாக, எம்.சி.எல்.ஆர்., வட்டி விகிதத்தை மாதந்தோறும் அறிவிக்கின்றன. ஏற்கனவே கடன் பெற்ற வாடிக்கையாளர்களை பொறுத்தவரை புதிய விகிதம் அமலுக்கு வருவது என்பது, அதற்கான அமலாக்க காலத்தை பொறுத்தது. ஒரு சில கடன்களுக்கு, 6 மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றப்படும். ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்படுவதும் உண்டு. எனவே, இந்த காலம் முடியும் போதே, புதிய விகிதம் பொருந்தும். எனினும், வட்டி விகிதம் குறையும் சூழலில் எப்படியும் வரும் மாதங்களில் வட்டி குறைப்பின் பலனை பெற முடியும். புதிதாக கடன் பெற உள்ள வாடிக்கையாளர்களை பொறுத்தவரை குறைந்த வட்டி விகிதம் பெற முடிவதோடு, அவர்களுக்கான கடன் தகுதி தொகையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மாற வேண்டுமா?இந்த பின்னணியில் பழைய, ‘பேஸ்ரேட்’ முறையில் கடன் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் எனும் கேள்வி எழுகிறது. எம்.சி.எல்.ஆர்., முறை கொண்டு வரப்பட்ட போது, பழைய பேஸ்ரேட் முறை வாடிக்கையாளர்கள் அதே முறையில் தொடர அல்லது புதிய முறைக்கு மாறிக்கொள்ளலாம் எனும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதே போல பழைய, எம்.சி.எல்.ஆர்., முறையில் இருப்பவர்களும் புதிய விகிதத்திற்கு மாறுவது பற்றி பரிசீலிக்க இது சரியான தருணமாக கருதப்படுகிறது.
புதிய விகிதத்திற்கு மாறுவதன் மூலம் மாதத் தவணை குறையும் என்றாலும், இதற்கான கட்டணம் உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். பொதுவாக வங்கிகள் கடன் மாற்றத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கடன் தொகையில், 0.5 சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை மாற்றத்திற்கான கட்டணத்தை வசூலிக்கின்றன. இவை மீது சேவை வரியும் உண்டு. வேறு வங்கிக்கு மாற்றுவது என்றால், இந்த கட்டணம் இல்லை. ஆனால், செயல்முறை கட்டணம் போன்றவை இருக்கும். எனவே, வட்டி விகித வேறுபாட்டையும் பொருந்தக்கூடிய கட்டணங்களையும் கணக்கிட்டு, அதன் பிறகும் கணிசமான அளவு பலன் இருந்தால் மட்டுமே கடனை மாற்றுவது லாபகரமானதாக இருக்கும் என, வல்லுனர்கள் ஆலோசனை சொல்கின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|