பதிவு செய்த நாள்
23 ஏப்2017
06:40
புதுடில்லி : மத்திய அரசு, கறுப்புப் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், நீண்ட காலம் செயல்படாமல் உள்ள, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, அந்நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு உள்ளது.பலர், வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை பதுக்கவும், அதை, மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்து, வெள்ளையாக மாற்றவும், போலி நிறுவனங்களை துவக்குகின்றனர். இத்தகைய சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சமீபத்தில், 100க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.இது போன்ற போலி நிறுவனங்களை அறவே ஒழிக்கும் நோக்கில், நீண்ட காலம் செயல்படாமல் உள்ள நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய, மத்திய நிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும், நீண்ட காலம் செயல்படாமல் உள்ள நிறுவனங்களுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு, நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகங்களை, அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.அதன்படி, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களுக்கு, நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகங்கள், நோட்டீஸ் அனுப்பியுள்ளன. அதில், மும்பையில், 71 ஆயிரம் நிறுவனங்களும், டில்லியில், 53 ஆயிரம் நிறுவனங்களும் அடங்கும்.இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிறுவனங்கள் சட்டப்படி பதிவு செய்த நிறுவனங்கள், ஓராண்டுக்குள் தொழிலை துவக்க வேண்டும்.இந்நிறுவனங்கள், ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையை, தாக்கல் செய்ய வேண்டும். தொடர்ந்து இரு நிதியாண்டு கணக்குகளை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் அல்லது தற்காலிகமாக செயல்படாமல் இருப்பதற்கு, அனுமதி வாங்காத நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.இந்த நோட்டீஸ் கண்ட, 30 நாட்களுக்குள், அந்நிறுவனங்கள், செயல்படாமல் உள்ளதற்கான காரணங்களை விளக்க வேண்டும். அந்த விளக்கங்கள் திருப்தி அளிக்கவில்லை என்றால், அந்நிறுவனங்களை, பதிவு பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் இருந்து நீக்க, அமைச்சகத்திற்கு அதிகாரம் உள்ளது. இதற்காக, நிறுவனங்கள் சட்டத்தில், சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.இந்த வகையில், தற்போது, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவை, குறிப்பிட்ட, ‘கெடு’வுக்குள் பதிலளிக்கத் தவறினாலோ அல்லது விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, அந்நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில், நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில், நிறுவனங்கள் சட்டத்தின்படி, 15 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பலர், போலி நிறுவனங்களை துவக்கி, அவற்றின் வாயிலாக வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|