பதிவு செய்த நாள்
22 மே2017
07:42
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மூன்றாம் ஆண்டைத் துவங்கவிருக்கிறது. அவரது அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானது, போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதுதான்.
சமீபத்தில் அவர் மேற்கொண்டிருக்கும் மூன்று விஷயங்கள் தொழில்துறைக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் முக்கியமானவையே. அதற்கு முன்னர் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஒருசில தகவல்கள் நம் வயிற்றில் புளியைக் கரைப்பது உறுதி. அதில், தொழில்நுட்பத் துறையின் பெரிய நிறுவனங்கள் சுமார் 56,000 பேரை வீட்டுக்கு அனுப்பப் போகின்றன என்று வெளியான செய்தி முக்கியமானது. அதனைத் தொடர்ந்து ஹெட் ஹன்டர்ஸ் என்ற மனிதவள நிறுவனம் இன்னொரு குண்டைத் துாக்கிப் போட்டது.
இந்திய ஐ.டி., துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு லட்சம் வேலைகள் காலியாகப் போகின்றன. இதற்கு அமெரிக்காவின் பாதுகாப்புவாதம் மட்டும் காரணம் அல்ல. மாறிவரும் தொழில்நுட்பங்களும், ஆடோமேஷனும் முக்கிய காரணங்கள் என்றது ஹெட் ஹன்டர்ஸ். இதனோடு, பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியம் தெரிவித்த கருத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். சுமார் 8 முதல் 10 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருந்தால்தான், வேலைவாய்ப்புகள் வேகமாகப் பெருகும். அதற்கு உள்கட்டுமானத் துறையில் முதலீடு, தனியார் துறையினரின் பங்களிப்பு பெருகுதல், வங்கித் துறையின் பிரச்னைகள் தீர்க்கப்படுதல் ஆகியவை முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார் அரவிந்த் சுப்பிரமணியம்.
இந்தப் பின்னணியில் பிரதமர் எடுத்துவரும் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வது அவசியம். முதலில், இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வேலைகள் உற்பத்தி ஆகின்றன? எத்தனை வேலைகள் பறிபோகின்றன? என்பதைப் பற்றிய துல்லியமான கணக்கீடே இல்லை. இரண்டு தரவுகள்தான் இப்போதைக்குக் கிடைத்து வருகின்றன. ஒன்று, நேஷனல் சாம்பிள் சர்வே அலுவலகம் வெளியிடும் விபரம். கடைசியாக 2011_12ம் ஆண்டின் நிலவரங்களைப் பற்றியே இதன் அறிக்கை வெளியானது. இரண்டாவது, தொழிலாளர் துறையின் காலாண்டு அறிக்கை. இது எட்டு முக்கிய துறைகளில் ஏற்படும் வேலை மாற்றங்களை மட்டுமே கணக்கிட்டுச் சொல்கிறது. ஆனால், முறைசாரா தொழிலாளர்களைப் பற்றிய விபரங்கள் இந்த அறிக்கையில் தெரிவதில்லை.
இந்தியாவில் சுமார் 90 சதவிகித ஊழியர்கள் முறைசாரா தொழில்களிலேயே ஈடுபட்டிருக்கும் நிலையில், அவர்களைப் பற்றியும் விபரங்கள் தெரியவேண்டும் அல்லவா? இந்தச் சூழ்நிலையில்தான், நிடி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தலைமையில், முறையான வேலைவாய்ப்புத் தகவல்களை நம்பகமான முறையில் திரட்டி நேரத்தோடு வெளியிடுவதற்கான வழிமுறைகளை வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு மாதமும் வெளிவரும் வேலைவாய்ப்புக்கான ஆய்வு அறிக்கை, அந்த நாட்டு பங்குச் சந்தைகளையே கலகலக்க வைக்கும். கூடவே எத்தனை பேர், அந்த வாரம் அரசின் சமூக பாதுகாப்பு சலுகையைப் பெற மனு செய்தனர் என்ற விபரமும் வெளியாகும். இதன்மூலமும், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு அல்லது வேலை உருவாக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். பிரதமர் எடுத்திருக்கும் முயற்சி இந்தத் திசையில் எடுக்கப்பட்டிருக்கும் முக்கிய முயற்சி.
இன்னொரு முக்கிய முயற்சி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்பானது. இளைஞர்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு பல புதிய தொழில்களைத் தொடங்கி வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, மத்திய அரசு பல சலுகைகளை வழங்க நிதி ஆதாரங்களை ஒதுக்கியுள்ளது. குறிப்பாக, முதல் மூன்றாண்டுகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களையோ, சேவைகளையோ கண்டுபிடிப்பது மட்டுமே இதுவரை முக்கியமாக இருந்தது. இப்போது, அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற வேண்டுமானால், அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கவிருக்கிறது என்பதைத் தெரிவிக்கவேண்டும்.
எண்ணிக்கையை எப்படிச் சொல்ல முடியும்? அதை நிறைவேற்ற முடியுமா என்றெல்லாம் கேள்வி கேட்கப்படுகிறது. மக்கள் பணத்திலிருந்து சலுகை கோருபவர்கள், அவர்களுக்குப் பயனுள்ள வேலைகளை உருவாக்கவேண்டியதும் அவசியமில்லையா?
மூன்றாவதாக, “எந்த ஒரு திட்டத்தை பிரதமர் அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டு போனாலும், இதனால் எத்தனை வேலைகள் உருவாகும்?” என்று பிரதமர் கேட்பதாக வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருப்பது கவனத்துக்குரியது. அரசாங்கம் செலவு செய்யும் ஒவ்வொரு திட்டத்திலும், புதிய வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். அது எத்தனை வேலைகளை உருவாக்கும் என்ற தோராயமான எண்ணிக்கையையும் இணைத்தே விண்ணப்பங்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது முக்கியமான முன்னேற்றம். மேலும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் உற்பத்திக் கொள்கையை மாற்றியமைக்கவும் பரிசீலனை செய்துவருகிறது. இந்தியாதான் மிக இளமையான நாடு. மொத்த மக்கள்தொகையில், 35 வயதுக்கு உட்பட்டோர் சுமார் 65 சதவீதம் பேர். இவர்களின் எதிர்காலம் பிரகாசமானால்தான் இந்தியா ஒளிரும்!
-ஆர்.வெங்கடேஷ், பத்ரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|