பதிவு செய்த நாள்
19 ஜூன்2017
00:22
வரி சேமிப்பிற்காக மட்டும் முதலீடு செய்யாமல், ஒட்டுமொத்த நிதி இலக்குகளுக்கு ஏற்ப திட்டமிட்டு தேர்வு செய்வதன் மூலம், நிதி சாதனங்களின் அதிகபட்ச பலனையும் பெறலாம்.
புத்தாண்டு உறுதிமொழியைப்போல, நிதியாண்டு முடிவிலும், வரி சேமிப்பு தொடர்பாக சிறந்த முறையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் எனும் உறுதிமொழியை பலரும் மேற்கொள்வதுண்டு. நிதி வல்லுனர்களும் கூட, வரி சேமிப்பிற்கான முதலீடுகளை மார்ச் மாத கடைசிக்கு கொண்டு செல்லாமல் துவக்கத்திலேயே திட்டமிடுவது சிறந்தது என, ஆலோசனை சொல்கின்றனர்.
இருப்பினும், வரி சேமிப்பை தள்ளிப்போடுவதே பலரது வழக்கமாக இருக்கிறது. வரி செலுத்துவதை குறைக்கும் வகையில் முதலீடுகளை திட்டமிடுவது ஆண்டுதோறும் மேற்கொள்ளும் செயலாக இருப்பதால், இதை அவசர முடிவுக்கு விடாமல் சிறந்த முறையில் திட்டமிடுவதே சரியாக இருக்கும் என, வல்லுனர்கள் கருதுகினறனர்.
நோக்கம் என்ன?
வரி சேமிப்பிற்காக திட்டமிட்டு முதலீடு செய்வது என்பதை தனி செயல்பாடாக பார்க்க கூடாது. அதை ஒட்டுமொத்த நிதி திட்டமிடலின் ஒரு அங்கமாக பார்க்க வேண்டும் என்பதே முக்கியம். ஒருவருடைய வருமானம், சேமிக்கும் ஆற்றல், இலக்குகள், ரிஸ்க் தன்மை ஆகியவற்றையும் மனதில் கொள்ள வேண்டும். முதலீடு செய்பவரின் நிதி இலக்குகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்பவும் அமைய வேண்டும்.
உதாரணத்திற்கு இளம் வயது முதலீட்டாளர் நீண்ட கால இலக்கிற்காக தேசிய பென்ஷன் திட்டம் அல்லது இ.எல்.எஸ்.எஸ்., எனப்படும் சமபங்கு அம்சம் கொண்ட திட்டங்களில் முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும். வயதான முதலீட்டாளர்கள் எனில் தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது பி.பி.எப்., போன்ற கடன்சார் முதலீடுகளை நாடுவது பொருத்தமாக அமையும். முதலீடு மீது வருமானமும் பெற வேண்டும் என நினைப்பவர்கள் ஐந்தாண்டு கால வங்கி டிபாசிட் வசதியை நாடலாம். ஆக, வரி சேமிப்பதற்காக செய்யப்பட்டாலும் அந்த முதலீடு, நிதி இலக்கு மற்றும் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
மேலும், ஒருவரது வருமானம் மற்றும் சேமிக்கும் திறனையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். மாதாந்திர செலவுகள், அவசர கால நிதி, காப்பீடு போன்றவை தவிர்க்க இயலாதவை. இவற்றுக்கு பிறகே முதலீடு வருகிறது. இதற்கு முன்னதாகவே வரி சேமிப்பிற்காக முதலீடு செய்ய முடியாது. செலவுகளை தீர்மானித்த பின் கையில் உள்ள சேமிப்பிற்கு ஏற்ப முதலீட்டு வழிகளை நாடலாம். இல்லை எனில் தேவையில்லாமல் கடன் வாங்கும் சூழல் வரலாம்.
பலன்களை அறிதல்:
உங்களுக்கு தேவைப்படும் முதலீடு மற்றும் உங்களுக்கு உகந்த வரி சேமிப்பு பலனை அளிக்கும் முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்வதே சிறந்ததாக இருக்கும். பலன் என்பது முதலீட்டு அளவுக்கு ஏற்ப வருமான வரி வரம்பில் அளிக்க கூடிய கழிவாக அமையலாம். பி.பி.எப்., – எஸ்.எஸ்.சி., அல்லது இ.எல்.எஸ்.எஸ்., திட்டங்களாக இவை அமையலாம். காப்பீடு பிரீமியம், மருத்துவ காப்பீடு, வீட்டுக் கடனுக்கான வட்டித்தொகை ஆகியவையும் இவற்றின் கீழ் வரும். ஒரு சில முதலீடுகள் அவற்றின் மீதான வருமானத்திற்கும் வரிச்சலுகை கொண்டிருக்கும்.
குறிப்பிட்ட வகையான பத்திரங்கள் போன்றவை இதற்கான உதாரணம். இதன் மூலம் வரி பாதிப்பு இல்லாமல் நிலையான வருமானம் பெறலாம். வரி சேமிப்பு திட்டமிடலுக்கான வழிகள் பல இருந்தாலும், இது தனிநபர் தேவைக்கேற்ப மாறுபடக்கூடியது. வரி சேமிப்பின் முதல்படியாக தகுதி வாய்ந்த செலவு களை முதலில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். காப்பீடு பிரீமியம், வீட்டுக்கடன் தவணை, கல்வி கட்டணம் ஆகியவை இதில் அடங்கும். பி.எப்., போன்ற கட்டாய பங்களிப்பை அடுத்த கட்டமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் பிறகே வரிச்சலுகை அளிக்கும் முதலீடுகளை நாட வேண்டும்.
முதலீடு தரும் பலன், பணத்தை திருப்பி எடுக்கும் தன்மை, ரிஸ்க் அம்சம் ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும். இருக்கும் பலன்களை அதிகமாக்கி கொள்ள முயல வேண்டும். உதாரணமாக பி.பி.எப்., அல்லது இ.எல்.எஸ்.எஸ்., முதலீடுகள் நீண்ட கால சேமிப்பை அதிகமாக்க உதவும். என்.பி.எஸ்., திட்டத்தின் மூலமான கூடுதல் முதலீடு போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம். வரி சேமிப்பிற்காக மட்டுமே முதலீடு செய்யாமல், எதிர்பார்க்கும் பலனுடன் வரி சேமிப்பையும் சாத்தியமாக்கும் முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்வதன் மூலம் அதிக பலன் பெறலாம். இப்படி செய்வதன் மூலம் நிதி இலக்குகளை நோக்கி முன்னேறுவதையும் உறுதி செய்து கொள்ளலாம்.
வரி சேமிப்பு அரிச்சுவடி:
* வரி சேமிப்பை துவக்கத்திலேயே திட்டமிட வேண்டும்.
* கடைசி நேர தேர்வுகள் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
* முதலீட்டின் பலனோடு வரி சேமிப்பு கூடுதலாக அமைய வேண்டும்.
* கட்டாய கழிவுகளை முதலில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|