பதிவு செய்த நாள்
26 ஜூன்2017
07:44
சொந்த வீடு, சொகுசு கார், கனவு விடுமுறை என, எல்லாவற்றையும் கடன் வாங்கி நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. மேலும் தேவை எனில், தனிநபர் கடன் வாங்கலாம். கடன் அதிகமாகும் போது, திரும்பிச் செலுத்துவது சுமையாகலாம். அதிலும், அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி, மாதத்தவணையே, சம்பளத்தில் பெரும் பகுதியை விழுங்கும் நிலை இருந்தால், விழி பிதுங்கலாம். எனவே மாதத்தவணையின் அளவு எப்போதுமே, கைக்கு அடக்கமாக இருக்க வேண்டும். காப்பீட்டுக்கான தொகையும் இதில் அடங்கும். மாதத்தவணையை சமாளிக்கும்படி இருப்பதற்கான பொதுவான விதிகள் சில:
காப்பீடு:
பலரும் காப்பீட்டையும், முதலீட்டையும் ஒன்றாக குழப்பிக் கொண்டு, பாலிசிகளை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மேலும் வரி சேமிப்பிற்காகவும் பாலிசிகளை வாங்குவதால், பல பாலிசிகளை வைத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இவற்றின் பிரீமியம் மாதத்தவணை சுமைைய அதிகரிக்கும் என்பதோடு, பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், பலனும் மோசமாக இருக்கும். பொதுவாக காப்பீட்டு பிரீமியங்களுக்கான தொகை, வருமானத்தில், 8 சதவீதமாக இருந்தால் நல்லது என்கின்றனர். அதற்கு மேல் இருந்தால், தேவையில்லாத பாலிசிகளை சரண்டர் செய்வதை பரிசீலிக்கலாம்.
தனிநபர் கடன்:
அவசரத் தேவை எனில், தனிநபர் கடன் வாங்கலாம். ஆடம்பரத் தேவைக்கு, இந்த வகை கடனை நாடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகம் என்பதால், கவனம் தேவை. அது மட்டும் அல்ல, மாதத்தவணை சுமையையும் அதிகமாக்கும். வல்லுனர்கள் கருத்துப்படி பார்த்தால், தனிநபர் கடன் என்பது, வருமானத்தின், 10 சதவீதத்திற்கும் மேல் இருக்கக் கூடாது. கிரெடிட் கார்டு கடனும் இதற்குள் அடங்கும். இந்த கடன்களை முதலில் அடைப்பது நல்லது. விரைவாக அடைப்பது இன்னும் நல்லது.
வாகன கடன்:
சொந்த வீடு வாங்குவதை விட, இப்போது சொந்தமாக கார் வாங்குவது எளிதாக இருக்கிறது. அதற்கேற்ப வாகனக் கடன் வாங்குவதும் எளிதாக இருக்கிறது. ஆனால், வாகனக் கடனுக்கான மாதத்தவணை, வருமானத்தில், 15 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்கின்றனர். கார் கடனை பொறுத்தவரை, 20 சதவீத முன்பணம் செலுத்த வேண்டும், நான்கு ஆண்டுகளுக்குள் அடைத்துவிட வேண்டும். போக்குவரத்து செலவு வருமானத்தின், 10 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற விதியும் சொல்லப்படுகிறது.
வீட்டுக்கடன் :
சொந்த வீட்டு கனவை நிறைவேற்றிக் கொள்ள, கடன் வாங்கலாம் தப்பில்லை. ஆனால், வீட்டுக்கடனுக்கான மாதத்தவணை வருமானத்தில், 40 சதவீதத்திற்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் குறைவாக இருந்தாலும் நல்லது. மொத்தமாக பார்க்கும் போது, மாதத்தவணைக்கான தொகை, வருமானத்தில், 50 சதவீதத்திற்கும் மேல் போகாமல் இருக்க வேண்டும். அப்படி மீறினால், நிச்சயம் மாத பட்ஜெட் சுமையாகும். எனவே கடன் திட்டமிடும் போது, இந்த விதிகளை நினைவில் கொள்ள வேண்டும். தற்போதுள்ள கடன் தவணை அதிகமாக இருந்தால், முதலில் அதை குறைக்கும் வழிகளை தேட வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|